காஞ்சிபுரம் மாவட்டம் தொழிற்சாலைகள் நிறைந்த மாவட்டங்களில் ஒன்றாக இருந்து வருகிறது. சென்னை புறநகர் பகுதியாக இருக்கக்கூடிய ஸ்ரீபெரும்புதூர், சுங்குவார்சத்திரம், உள்ளிட்ட பகுதிகளில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொழிற்சாலைகள் இயங்கி வருகின்றன. குறிப்பாக உலகத்தில் இருக்கக்கூடிய முன்னணி நிறுவனங்களின் தொழிற்சாலையும் அப்பகுதியில் அமைந்திருக்கின்றன. 


சாம்சங் தொழிற்சாலை


அந்த வகையில் காஞ்சிபுரம் மாவட்டம் சுங்குவார்சத்திரம் பகுதியில் சாம்சங் தொழிற்சாலை செயல்பட்டு வருகிறது. இந்த தொழிற்சாலையில் ஏசி, வாஷிங் மெஷின், டி.வி., குளிர்சாதனப்பெட்டி உள்ளிட்டவைகள் தயாரிக்கப்பட்டு வருகின்றன. இந்த தொழிற்சாலையில் 1500 க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணி செய்து வருகின்றனர்.





இந்நிலையில் சாம்சங் தொழிற்சாலையில் கடந்த ஜூன் மாதம் இரண்டாவது வாரத்தில் சிஐடியு சங்கம் துவக்கப்பட்டது. சங்கம் அமைத்தற்கான அறிமுக கடிதம் நிர்வாகத்திற்கு அனுப்பப்பட்டது . இதனை நிர்வாகம் கண்டு கொள்ளவில்லை. மேலும் ஊதிய உயர்வு மற்றும் பொது கோரிக்கை குறித்து நிர்வாகத்திற்கு மகஜர் அனுப்பப்பட்டது. இதையும் நிர்வாகம் கண்டு கொள்ளவில்லை என தொழிலாளர்கள் குற்றச்சாட்டை முன் வைத்துள்ளனர்.


ஊழியர்களின் கோரிக்கை என்ன ?


 


போராட்டத்தில் ஈடுபட்டு வரும் தொழிற்சங்க நிர்வாகிகள், சாம்சங் இந்தியா தொழிலாளர்கள் சங்கம் சிஐடியூ சங்கத்தை அங்கீகரிக்க வேண்டும் வேண்டும். இன்டெர்னல் கமிட்டி அமைப்பதை கைவிட வேண்டும். சாம்சங் இந்தியா தொழிலாளர் சங்க சிஐடியூ உறுப்பினர்களை நிறுவனம் உருவாக்கும் போட்டி தொழிலாளர் கமிட்டியில், இணையுமாறு ஆலைக்குள் பணி செய்யும் தொழிலாளர்களை அச்சுறுத்துவது கட்டாயப்படுத்துவது மிரட்டுவது போன்ற வன்முறை நடவடிக்கைகளை கைவிட வேண்டும்.


 




போட்டி அமைப்பை உருவாக்குவதை கைவிட வேண்டும். ஊதிய உயர்வு மற்றும் பொது கோரிக்கைகளின் மீது பேச்சுவார்த்தை நடத்த ஒப்புக்கொள்ள வேண்டும். சாம்சங் இந்தியா தொழிலாளர்கள் அமைத்துள்ள சிஐடியூ தொழிற்சங்கத்தை பதிவு செய்ய விடாமல் , தொழிற்சங்க பதிவாளர் அலுவலகத்தை நிர்பந்திப்பதை கைவிட வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சாம்சங் தொழிலாளர்கள் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் சிஐடியு சார்பில் காலவரையற்ற போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர் . 


சாம்சங் நிர்வாகம் எச்சரிக்கை 


 


இந்நிலையில் போராட்டத்தில் ஈடுபடும் தொழிலாளர்களுக்கு சாம்சங் நிறுவனம் , கடந்த வெள்ளிக்கிழமை எச்சரிக்கை அறிக்கையை வெளியிட்டிருந்தது, "ஊழியர்களின் வேலைநிறுத்தம் சட்டவிரோதமானது. போராட்டத்தால் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. ஊழியர்கள் உடனே பணிக்கு திரும்ப வேண்டும். பணிக்கு வரவில்லை என்றால் சம்பளம் வழங்கப்பட மாட்டாது. ஊழியர்களுக்கு பணிக்கு திரும்பவில்லை என்றால் பணிநீக்கம் செய்ய நேரிடும்" என்று சாம்சங் நிர்வாகம் எச்சரிக்கை விடுத்துள்ளது. மேலும் தீபாவளி போனஸ் உள்ளிட்டவை வழங்கப்படாது என அறிவிப்பு வெளியாகி இருந்த நிலையில்,  தொழிற்சாலை ஊழியர்களின் போராட்டம் வேகம் எடுக்க தொடங்கியுள்ளது. மேலும் மின்னஞ்சல் மூலம் ஊழியர்களுக்கு வந்த எச்சரிக்கைக்கு, எதிராக தொழிற்சாலை ஊழியர்கள் தங்கள் தரப்பு, விளக்கத்தையும் அளித்துள்ளனர்.


தொடரும் போராட்டம் 


இன்று திங்கட்கிழமை என்பதால், சாம்சங் ஊழியர்கள் தொடர்ந்து பணிபுறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். தொடர்ந்து சாம்சங் ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருவதால் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது.