காஞ்சிபுரம் மாவட்டம் தொழிற்சாலைகள் நிறைந்த மாவட்டங்களில் ஒன்றாக இருந்து வருகிறது. சென்னை புறநகர் பகுதியாக இருக்கக்கூடிய ஸ்ரீபெரும்புதூர், சுங்குவார்ச்சத்திரம், உள்ளிட்ட பகுதிகளில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொழிற்சாலைகள் இயங்கி வருகின்றன. குறிப்பாக உலகத்தில் இருக்கக்கூடிய முன்னணி நிறுவனங்களின் தொழிற்சாலையும் அப்பகுதியில் அமைந்திருக்கின்றன. 


சாம்சங் தொழிற்சாலை


அந்த வகையில் காஞ்சிபுரம் மாவட்டம் சுங்குவார்சத்திரம் பகுதியில் சாம்சங் தொழிற்சாலை செயல்பட்டு வருகிறது. இந்த தொழிற்சாலையில் ஏசி, வாஷிங் மெஷின், டி.வி., குளிர்சாதனப்பெட்டி உள்ளிட்டவைகள் தயாரிக்கப்பட்டு வருகின்றன. இந்த தொழிற்சாலையில் 1500-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணி செய்து வருகின்றனர்.




இந்நிலையில் சாம்சங் தொழிற்சாலையில் கடந்த ஜூன் மாதம் இரண்டாவது வாரத்தில் சிஐடியு சங்கம் துவக்கப்பட்டது. சங்கம் அமைத்தற்கான அறிமுக கடிதம் நிர்வாகத்திற்கு அனுப்பப்பட்டது. இதனை நிர்வாகம் கண்டுகொள்ளவில்லை. மேலும் ஊதிய உயர்வு மற்றும் பொது கோரிக்கை குறித்து நிர்வாகத்திற்கு மகஜர் அனுப்பப்பட்டது. இதையும் நிர்வாகம் கண்டு கொள்ளவில்லை என தொழிலாளர்கள் குற்றச்சாட்டை முன் வைத்துள்ளனர்.


ஊழியர்களின் குற்றச்சாட்டுகள் என்ன ?


தொழிற்சங்கத்தை ஏற்க மறுப்பது மட்டுமல்ல தொழிற்சங்கத்தை உடைப்பதற்கு சங்கம் அமைக்கப்பட்ட நாளிலிருந்து, கடந்த 85 நாட்களாக நிர்வாகம் அனைத்து விதமான நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் தொழிற்சங்க நிர்வாகிகள் குற்றச்சாட்டை முன்வைக்கின்றனர்.


இந்நிலையில் சாம்சங் இந்தியா தொழிலாளர் சங்கத்தின் பேரவை கூட்டமும் நிர்வாகிகள் கூட்டம் எடுத்த முடிவின் அடிப்படையில் , சாம்சங் இந்தியா தொழிலாளர் சங்கத்தின் உறுப்பினர்கள் தொழிலாளர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருவதாக தெரிவித்தனர். இதன் அடிப்படையில்  தொழிற்சங்கத்தினர் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். 


ஊழியர்களின் கோரிக்கை என்ன ?


போராட்டத்தில் ஈடுபட்டு வரும் தொழிற்சங்க நிர்வாகிகள், சாம்சங் இந்தியா தொழிலாளர்கள் சங்கம் சிஐடியூ சங்கத்தை அங்கீகரித்திட வேண்டும். சாம்சங் இந்தியா தொழிலாளர் சங்க சிஐடியூ உறுப்பினர்களை நிறுவனம் உருவாக்கும் போட்டி தொழிலாளர் கமிட்டியில், இணையுமாறு ஆலைக்குள் பணி செய்யும் தொழிலாளர்களை அச்சுறுத்துவது கட்டாயப்படுத்துவது மிரட்டுவது போன்ற வன்முறை நடவடிக்கைகளை கைவிட வேண்டும். போட்டி அமைப்பை உருவாக்குவதை கைவிட வேண்டும், ஊதிய உயர்வு மற்றும் பொது கோரிக்கைகளின் மீது பேச்சுவார்த்தை நடத்த ஒப்புக்கொள்ள வேண்டும் என உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சாம்சங் தொழிலாளர்கள் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் சிஐடியு சார்பில் காலவரையற்ற போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர் . 


பேச்சுவார்த்தைக் தோல்வி. 


இந்நிலையில் இந்தப் போராட்டம் தொடர்பாக, தொழிற்சாலை நிர்வாகம், தொழிற்சங்கம் மற்றும் தொழிலாளர் நலத்துறை சார்பில் முத்தரப்பு பேச்சுவார்த்தை நடைபெற்றது. பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்த நிலையில், வேலை நிறுத்த போராட்டத்தில் ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர். இது தொடர்பாக மூன்று முறை நடைபெற்ற பேச்சுவார்த்தைகள் தோல்வியில் முடிந்தது .




தொழிலாளர்கள் பிரச்சனையில் மாவட்ட ஆட்சியர் தலையிட்டு நடவடிக்கை எடுக்கவேண்டும் என கோரிக்கை விடுத்து, மாவட்ட ஆட்சியரை சந்தித்து கோரிக்கை மனு அளிக்க பேரணி நடத்த முடிவு செய்துள்ளனர். தொழிலாளர்கள் பேரணிக்கு காவல்துறை அனுமதி அளிக்காத நிலையில்  , போலீசாரின் தடையை மீறி  சாம்சங் தொழிலாளர்கள் பேரணியில் ஈடுபட காஞ்சிபுரத்திற்கு வருகை தந்தனர். மாவட்ட ஆட்சியர் அலுவலகம் நோக்கி நடைபெற இருந்த பேரணியில் ஈடுபட வந்த 118 க்கும் மேற்பட்ட சாம்சங் தொழிற்சாலை ஊழியர்களை போலீசார் ஆங்காங்கே தடுத்து நிறுத்தி கைது செய்து தனியார் திருமண மண்டபத்தில் அடைத்து வைத்தனர். 


பேரணி செல்ல முயற்சி 


பேரணி செல்ல முயன்ற தொழிற்சங்க நிர்வாகிகளையும் தொழிலாளர்களையும் போலீசார் கைது செய்த சம்பவம் குறித்து அறிந்து சிஐடியு தொழிற்சங்க மாநில தலைவர் சௌந்தரராஜன் தொழிற்சங்க நிர்வாகிகளுடன் காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் கலைச்செல்வி மோகனை சந்தித்து தொழிலாளர்களின் கோரிக்கைகள் குறித்து எடுத்துக் கூறி மாவட்ட கலெக்டர் தொழிலாளர்கள் பிரச்சினையில் தலையிட்டு தீர்த்து வைக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தார்.


பின்னர் செய்தியாளர்களை சந்தித்த சி.ஐ.டி.யு தொழிற்சங்க மாநில தலைவர் சௌந்தரராஜன், சாம்சங் தொழிற்சாலையில் அமைக்கப்பட்டுள்ள தொழிற்சங்கத்தை ஏற்றுக் கொள்ள வேண்டும், தொழிற்சங்கத்திற்கு எதிராக எடுக்கப்படும் தேவையற்ற எதிர் நடவடிக்கைகளை கைவிட வேண்டும் என, சி.ஐ.டி.யு தொழிற்சங்க மாநில தலைவர் சௌந்தரராஜன் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.


வழக்குப்பதிவு 


இந்தநிலையில் தொழிற்சங்க தலைவர் முத்துக்குமார், நிர்வாகி சசிகுமார், தொழிற்சங்க நிர்வாகிய ரவிக்குமார் ஆகியோர் மீது 5 பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்ய பட்டுள்ளது. ‌கைது செய்யப்பட்டவர்கள் அனைவரும் விடுதலை செய்யப்பட்டனர்.