காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் மக்கள் குறைத்தீர்வு கூட்டத்திற்கு வந்த பெண் ஒருவர், பெட்ரோல் கேனுடன் தீக்குளிக்க முயந்ததால் காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.


காஞ்சிபுரம் மக்கள் குறை தீர்வு கூட்டம்


காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் வாரம் தோறும் திங்கட்கிழமைகளில், மக்கள் குறைதீர் கூட்டம் நடைபெறுவது வழக்கமான ஒன்றாக உள்ளது. அந்த வகையில் நேற்று காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்க கூட்டம் நடைபெற்றது. காஞ்சிபுரம் மாவட்டத்தை சேர்ந்த பல்வேறு , பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் தங்களது கோரிக்கைகள் மற்றும் புகார்களை மனுக்களாக மாவட்ட கூட்டரங்கில் அளித்து வந்தனர்.


பெட்ரோல் கேனுடன் வந்த பெண்


அந்த வகையில் நேற்று கூட்ட அரங்கின் வெளியே காவிதண்டலம் கிராமத்தைச் சேர்ந்த காமாட்சி என்பவர் பெட்ரோல் கேனுடன் திடீரென நுழைந்து போராட்டத்தில் ஈடுபட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. உடனடியாக அந்த பாதுகாப்புக்கு இருந்த போலீசார் பெண்ணிடம் இருந்த பெட்ரோல் கேனை பிடுங்கி எறிந்தனர். 




வீடு இல்லாத மக்கள்


இது தொடர்பாக போராட்டத்தில் ஈடுபட்ட காமாட்சி என்ற பெண்ணிடம் அதிகாரிகள் நடத்திய விசாரணையில் , காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் தாலுகா காவி தண்டலம் கிராமத்தில் மலைக்குறவன் இனத்தைச் சார்ந்த எங்களது , நான்கு குடும்பங்கள் 23 ஆண்டுகளாக அதே கிராமத்தில் வசித்து வருகிறோம்.




ரேஷன் கடை, ஊர் மேடைகளிலும் தங்கி குடும்பம் நடத்தி வருவதாக வேதனையுடன் தெரிவித்தார். ரேஷன் அட்டை ஆதார் அட்டை உள்ளிட்ட அனைத்து ஆவணங்களும் தங்களுக்கு உள்ளன எனவும், ஒரக்காட்டுப்பேட்டை கிராம பகுதியில் தங்களுக்கு இடம் ஒதுக்கி எங்களுக்கு கடந்த நான்கு ஆண்டுகளுக்கு முன்பு பட்டா வழங்கப்பட்டது. 


வீடு கட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவித்த பொதுமக்கள் 


ஆனால் தலைவர் மற்றும் கிராம மக்கள் வீடு கட்ட விடாமல் தடுத்து வருவதாக தெரிவித்தனர் இதனால் மழை, வெயிலில் சிரமப்படுகிறோம் எனவும், மாற்று இடம் தருகிறோம் என தாசில்தார் கூறியும் நடவடிக்கை இல்லை மற்றும் மாற்றிடம் வழங்கி வீடு கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டுமென அப்பின் கோரிக்கை வைத்து போராட்டத்தில் ஈடுபட்டது, தெரிய வந்தது. உடனடியாக இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் பெண்ணிடம் , சமாதானம் செய்து மனுவைப் பெற்று அனுப்பி வைத்தார். மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு பெண் ஒருவர் பெட்ரோல் கேனுடன் வந்து போராட்டத்தில், ஈடுபட்டதால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.


.


விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது


இந்த விவகாரம் தொடர்பாக மாவட்ட நிர்வாகத்தை தொடர்பு கொண்டு விசாரித்த போது : காஞ்சிபுரம் மாவட்டம் காவித்தண்டலம் கிராமத்தில் 5 குறவர் குடும்பங்களுக்கு, தமிழ்நாடு அரசு சார்பில் ஒரக்காடுபேட்டை பகுதியில் பட்டா வழங்கப்பட்டுள்ளது. வீடு இல்லாமல் மற்றும் இடமும் இல்லாமல் இருந்ததால் தமிழ்நாடு அரசு இவர்களுக்கு பட்டா வழங்கியது. ‌ இவர்கள் அந்த இடத்திற்கு வீடு கட்ட சென்றபோது அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்ததாக தெரிகிறது. தொடர்பாக அவர்கள் வருவாய்த்துறை அதிகாரிகளிடம் புகார் அளித்துள்ளனர். இந்த புகார் தொடர்பான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த நிலையில் தான் காமாட்சி என்ற பெண் நேற்று குறை தீர்ப்பு கூட்டத்திற்கு வந்தபோது தற்கொலைக்கு முயன்றார். இது தொடர்பாக விசாரணை நடைபெற்று வருவதாக தெரிவித்தனர்.