காஞ்சிபுரம் மாநகரம் பட்டு சேலை மற்றும் கோவிலுக்கு உலக அளவில் பிரசித்தி பெற்ற நகரமாக இருந்து வருகிறது. வரலாற்றுச் சிறப்புமிக்க நகரங்களில் ஒன்றாகவும் காஞ்சிபுரம் இருந்து வருகிறது. அதேபோன்று காஞ்சிபுரத்தை சுற்றுவட்டார பகுதிகளில் அதிகளவு வேலை வாய்ப்புகள் நிறைந்திருப்பதால், நாள்தோறும் ஒரு லட்சம் வெளியூர் மக்கள் படையெடுத்து வருகின்றனர். காஞ்சிபுரத்திற்கு ஆன்மீக சுற்றுலா வருபவர்களின் எண்ணிக்கையும் கணிசமாக அதிகரித்து வருகிறது.
போக்குவரத்து நெரிசலில் காஞ்சிபுரம்
காஞ்சிபுரம் மாநகரம் அதிக அளவு வெளியூர் பொதுமக்களால், போக்குவரத்து நெரிசலால் தவித்து வருகிறது. காஞ்சிபுரம் நகரம் மற்றும் காஞ்சிபுரம் நகரத்தில் உள்பகுதிகளிலும், இந்த போக்குவரத்து நெரிசல் அதிகரித்து வருகிறது.
குறிப்பாக காஞ்சிபுரம் - வந்தவாசி சாலையில் பாலாறு அமைந்துள்ளது. இந்தப் பாலாற்றின் குறுக்கே, கடந்த 25 ஆண்டுகளுக்கு முன்பு உயர்மட்ட மேம்பாலம் அமைக்கப்பட்டது. செவிலிமேடு பாலாறு பாலம் வழியாக நாள்தோறும் பல ஆயிரக்கணக்கான வாகனங்கள், சென்று வருகின்றன. செவிலிமேடு பாலாறு பாலம் வழியாக வந்தவாசி, திண்டிவனம், பாண்டிச்சேரி, விழுப்புரம், சேத்பட்டு, திருவண்ணாமலை உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்பவர்கள் இந்தப் பாலத்தின் வழியாக சென்று வருகின்றனர்.
காஞ்சிபுரம் செவிலிமேடு பாலாறு பாலம்
அதிகளவு கனரக வாகனங்கள் இந்த பாலத்தின் மீது செல்வதால், பாலம் படிப்படியாக சேதம் அடைந்து, வாகன ஓட்டிகள் கடும் அவதி அடைந்து வருகின்றனர். தொடர்ந்து இந்த பகுதிகளில் அவ்வப்போது விபத்து ஏற்படுவது, காவல்துறை மற்றும் வாகன ஓட்டிகளுக்கு தலைவலியாக மாறி வருகிறது. இது மட்டுமில்லாமல் பாலம் பல்வேறு இடங்களில் சேதம் அடைந்து இருப்பதால், பாலத்தின் மீது வாகனங்கள் மெதுவாக செல்ல வேண்டிய சூழலும் உள்ளன.
பல மணி நேரம் போக்குவரத்து நெரிசல்
காஞ்சிபுரம் செவிலிமேடு பாலாறு பாலத்தில் இன்று பராமரிப்பு பணிகள் நடைபெற்றதால் பல மணி நேரம் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. வாகன ஓட்டிகள் இன்ச் இன்ச் ஆக வாகனத்தை நகர்த்தி சென்றனர். இதனால் வாகன ஓட்டிகள் கடும் அவதி அடைந்தனர்.