’குறுவை சாகுபடிக்கு திட்டம்’ கல்லணை கால்வாய் விவசாயிகளுக்கு பாரப்பட்சம் ஏன்..?

கல்லணைக் கால்வாய் பகுதி ஒரு போக நெல் சாகுபடி தான் என முன்பு இருந்தது. தற்போது பம்பு செட் அதிகளவில் வந்துள்ளதால், அந்த பகுதியிலும் குறுவை சாகுபடி செய்கின்றனர்

Continues below advertisement
தஞ்சாவூர் மாவட்டத்தில் குறுவை சாகுபடி திட்டத்தின் கீழ் வழங்கப்படும் பயிர் கடன், சிறப்பு தொகுப்பு திட்டங்கள் உள்ளிட்ட உதவிகளை பெறும் வகையில், கல்லணைக் கால்வாய் பகுதியில் மேற்கொள்ளப்பட்டு வரும் சாகுபடியை குறுவை பருவத்தில் கணக்கில் எடுத்துக் கொள்ள வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தி வருகின்றன. தஞ்சாவூர் மாவட்டத்தில் காவிரி, வெண்ணாறு, வெட்டாறு, கொள்ளிடம் ஆகிய ஆறுகள் பாயும் பகுதி பழைய டெல்டா எனவும், கல்லணைக் கால்வாய் 1934-ம் ஆண்டு வெட்டப்பட்ட பின்னர் ஏற்படுத்தப்பட்ட பாசன வசதி என்பதால் இப்பகுதி புதிய டெல்டா எனவும் அழைக்கப்படுகிறது. புதிய டெல்டா மூலம் ஒரத்தநாடு, பட்டுக்கோட்டை, பேராவூரணி, அறந்தாங்கி ஆகிய வட்டாரங்கள் பயன்பெற்று வருகிறது.
 
அதே போல் தஞ்சாவூர் மாவட்டத்தில் குறுவை, சம்பா, தாளடி ஆகிய பருவங்களில் நெல் சாகுபடியும் செய்யப்பட்டு வருகிறது. இதில் குறுவை சாகுபடி என்பது பழைய டெல்டாவில் மட்டுமே மேற்கொள்ளப்படுவதாக அரசு கணக்கில் புள்ளிவிவரங்களோடு இணைக்கப்படுள்ளது. ஆனால் கல்லணைக் கால்வாய் மற்றும் அதனை சார்ந்த பகுதிகளில் ஒரு போக சம்பா சாகுபடி என ஆரம்ப காலத்தில் அரசு கணக்கில் ஆவணங்களாக உள்ளது. இந்த நிலையில், பம்பு செட் மூலம் விவசாயம் மேற்கொள்ளும் விவசாயிகள் கல்லணைக் கால்வாய் கோட்டத்தில் அதிகளவு உள்ளனர். அவர்கள் முன்பட்ட குறுவை, சம்பா ஆகிய பருவங்களில் நெல் சாகுபடியையும், கோடை காலங்களில் உளுந்து, எள், கடலை ஆகிய பயிர்களையும் சாகுபடி செய்கின்றனர். மேலும் மானாவாரிப் பகுதிகளிலும் தற்போது பம்பு செட் பாசனம் அதிகளவு இருப்பதால், நெல் சாகுபடியின் பரப்பளவு கணிசமாக உயர்ந்துள்ளது.

இந்த நிலையில் குறுவை சாகுபடிக்கு வழங்கப்படும் பயிர்கடன்கள், சிறப்பு தொகுப்பு திட்டத்தின் பயன்கள் ஏதும் கல்லணைக் கால்வாய் கோட்டம், மானாவாரி பகுதியில் உள்ள விவசாயிகளுக்கு பொருந்தாது என அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். ஆனால் குறுவை பருவ மகசூலில் குறிப்பிட்ட அளவு அரசின் இலக்கை எட்ட இந்த பகுதி விவசாயிகளின் உற்பத்தி கைக்கொடுக்கிறது. நிகழாண்டு குறுவை பருவத்தில் கூட கல்லணைக் கால்வாய் கோட்டத்தினை தவிர்த்து இதர பகுதிகளில் தான் 1.05 லட்சம் ஏக்கரில் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
 
இதுகுறித்து கல்லணை கால்வாய் பகுதி விவசாயிகள் கூறுகையில். : குறுவை பாசனத்துக்கு கல்லணையில் தண்ணீர் திறக்கும் போதே, கல்லணைக் கால்வாய்க்கும் தண்ணீர் திறக்கப்படுகிறது. இந்த தண்ணீர் கடைமடைப் பகுதி வரை சென்று சேர முன்பெல்லாம் மாதகணத்தில் ஆனது. அதனால் சாகுபடி காலதாமதமாக தொடங்கப்பட்டது. தற்போது தண்ணீர் திறந்த 10 தினங்களுக்கு கடைமடை பகுதிக்கு சென்றுவிடுகிறது. இந்த தண்ணீரை நம்பி பம்பு செட் மூலம் இப்பகுதி விவசாயிகள் சாகுபடி பணியை முன்கூட்டியே தொடங்கி விடுகின்றனர். ஆனால் அரசு வழங்கும் பயிர் கடன், குறுவை சிறப்பு தொகுப்பு திட்டத்தின் பயன்கள் ஏதும் எங்கள் பகுதி விவசாயிகளுக்கு கிடைப்பதில்லை. எனவே, கல்லணை கால்வாய் பகுதியில் ஜூன், ஜூலை மாதங்களில் மேற்கொள்ளப்பட்டு வரும் சாகுபடியை குறுவை பருவத்தில் கணக்கில் எடுத்துக் கொண்டு பயிர்கடன் உள்ளிட்ட உதவிகளை வழங்க வேண்டும் என விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.
 
இதுகுறித்து வேளாண்மை துறையில் பணியாற்றி ஓய்வு பெற்ற  மூத்த வேளாண் வல்லுநர் பழனியப்பன் கூறியதாவது: கல்லணைக் கால்வாய் பகுதி ஒரு போக நெல் சாகுபடி தான் என முன்பு இருந்தது. தற்போது பம்பு செட் அதிகளவில் வந்துள்ளதால், அந்த பகுதியிலும் குறுவை சாகுபடி செய்கின்றனர். இந்த விவசாயிகளுக்கும் குறுவை சிறப்பு தொகுப்பு திட்டங்களில் பயன்களை வழங்குவதோடு, அங்கு மேற்கொள்ளப்படும் பரப்பளவையும் குறுவை கணக்கில் கொண்டு வர அரசு முன் வர வேண்டும் என்றார்.
Continues below advertisement
Sponsored Links by Taboola