இந்தியாவின் வளர்ச்சியையும் இந்தியாவின் தொழில்துறையையும் டாடா குழுமம் இல்லாமல் எழுதி விட முடியாது. உப்பு முதல் சாப்ட்வேர் வரை பெரும்பாலான பிரிவுகளில் டாடா குழுமம் இயங்கி வருகிறது. இரண்டாம் தலைமுறைக்கு தொழிலை கடத்துவதே பெரும் சவாலாக இருக்கும் இந்த சூழலில் 150 ஆண்டுகளுக்கு மேலாக டாடா செயல்பட்டுவருகிறது.


இண்டிகோ, டைட்டன், வோல்டாஸ், தனிஷ்க், விஸ்தாரா, தாஜ் உள்ளிட்டவை டாடாவின் முக்கியமான பிராண்ட்கள். தவிர  சந்தை மதிப்பில் இரண்டாம்  இடத்தில் இருக்கும் டிசிஎஸ் உள்ளிட்ட 25-க்கும் மேற்பட்ட பட்டியலிடப்பட்ட நிறுவனங்கள் பல பரந்துவிரிந்து செயல்பட்டுவருகிறது. டாடா குழுமத்தின் செயல்பாட்டை சுதந்திரத்துக்கு முன்பு, சுதந்திரம் கிடைத்தில் இருந்து 1991-ம் ஆண்டு வரை மற்றும் 1991-ம் ஆண்டு பிறகு தற்போது என மூன்று முக்கியமான பொருளாதார சூழல்களிலும் டாடா  குழுமம் செயல்பட்டிருக்கிறது.




டாடா குழுமம் 1968-ம் ஆண்டு தொடங்கப்பட்டது. ஜம்ஷெட்ஜி நுஸ்சர்வான்ஜி டாடா ரூ.21000 முதலீட்டில் இந்த குழுமத்தை தொடங்கி வைத்தார். 1874-ம் ஆண்டு டெக்ஸ்டைல் மில் தொடங்கப்பட்டது. 1903-ம் ஆண்டு தாஜ் ஓட்டல் தொடங்கப்பட்டது. 1907-ம் ஆண்டு முக்கியமான நிறுவனமான டாடா ஸ்டீல் தொடங்கப்பட்டது. 1910-ம் ஆண்டு மின்சாரம், 1917-ம் ஆண்டு நுகர்பொருட்கள், 1932-ம் ஆண்டு டாடா ஏர்லைன்ஸ் என ஒவ்வொரு காலகட்டத்திலும் புதிய தொழில்களில் டாடா குழுமம் கால்பதித்தது. சுதந்திரத்துக்கு முன்பாகவே டாடா மோட்டார்ஸ், டாடா கெமிக்கல்ஸ் மற்றும் டாடா இண்டஸ்ட்ரீஸ் உள்ளிட்ட நிறுவனங்கள் தொடங்கப்பட்டுவிட்டன. வழக்கமான ஒரு தொழில் நிறுவனத்தை ஏன் தேசத்தை கட்டமைத்தார்கள் என சொல்ல வேண்டும். தொழிலில் மட்டும் டாடா இருந்திருந்தால் வழக்கமான ஒரு தொழில் குழுமமாக இருந்திருக்கும். ஆனால் அதனை தாண்டியும் பல வகையில் தேசத்துக்கு பங்காற்றி இருக்கிறார்.


இந்தியாவுக்கு சுதந்திரம் கிடைக்கும் என்பது 1940களின் தொடக்கத்திலே தெரிந்துவிட்டது. அதனால் 1944-ம் ஆண்டு பொருளாதார மேம்பாட்டுக்கான திட்டம் அறிவிக்கப்படுகிறது. அடுத்த 15 ஆண்டுகளில் என்ன செய்ய வேண்டும் என்பதற்கான திட்டம் அது. சுகாதாரம், வேலை வாய்ப்பு, தொழில் என பல பகுதிகளை உள் அடங்கிய இந்த திட்டத்துக்கு பாம்பே திட்டம் அல்லது டாடா பிர்லா திட்டம் என அறிவிக்கப்பட்டது. ஒரு நாட்டின் வளர்ச்சி திட்டத்தை முதலாளிகள் உருவாக்கியது இந்த சமயத்தில்தான். இதன் தொடர்ச்சியாகதான் ஐந்தாண்டு திட்டங்கள் உருவாக்கப்பட்டன.




தொழில் குழுமம் என்பதால் அரசாங்கத்துக்கு நெருக்கமாக இருக்கும் என்னும் தோற்றம் இருக்கிறது. ஒரளவுக்கு உண்மைதான் என்றாலும் டாடா குழுமம் இதனால் சில முறை பாதிக்கப்பட்டிருக்கிறது.


டாடா குழுமத்தை சேர்ந்த நியு இந்தியா அஸ்ஸுரன்ஸ் நிறுவனம் பொதுவுடமை செய்யப்பட்டது. அதேபோல டாடா ஏர்லைன்ஸ் நிறுவனம் 1953-ம் ஆண்டு தேசியமயமாக்கப்பட்டது. இதன் பிறகு டாடா குழுமத்தால் விமான போக்குவரத்து துறையில் பல ஆண்டுகள் செயல்பாட்டை தொடங்கமுடியவில்லை.  1976-ம் ஆண்டு டாடா பவர் தேசிய மயமாக்கும் திட்டம் இருந்ததாக டாடா குழுமம் கருதியது. அதேபோல டாடா ஸ்டீல் நிறுவனத்தை தேசிய மயமாக்கும் திட்டத்தை அப்போதைய ஜனதள அரசு (1977-79) திட்டமிட்டது. அப்போது இருந்த அனைத்து ஸ்டீல் நிறுவனங்களையும் இணைத்து பொதுத்துறை நிறுவனமாக்கும் திட்டத்தை அரசு முன்வைத்தது. மேலும் அந்த நிறுவனத்துக்கு ஜே.ஆர்.டி. டாடாவை தலைவராக நியமனம் செய்யவும் அரசு திட்டமிட்டது. ஆனால் இந்த செய்தி ஊடகங்களில் வெளியான நிலையில் டாடா ஸ்டீல் தொழிற்சங்கங்கள் கடுமையாக எதிர்த்தன.


பொதுத்துறை நிறுவனமாக மாறுமப்ட்சத்தில்  வேலை உறுதி, நல்ல சம்பளம், ஓய்வு கால சலுகைகள் இருக்கும். ஆனாலும் டாடா ஸ்டீல் பொதுத்துறை நிறுவனமாக மாறுவதை அந்த தொழிற்சங்கங்கள் எதிர்த்தன. அப்போதிருந்த 65,000 பணியாளர்களும் எதிர்ப்பு தெரிவித்தனர். அதனால் டாடா ஸ்டீல் நிறுவனத்தை தேசியமயமாக்கும் நடவடிக்கையை அப்போதைய அரசு நிறுத்தியது.




தேசத்தை வடிவமைத்த நிறுவனம் என்று சொல்வதற்கு இதுமட்டுமே போதுமானதா என்று தோன்றும். 1892-ம் ஆண்டே ஜே.என். டாடா எண்டோவ்மெண்ட் பண்ட் என்னும் ஒரு பண்டினை உருவாக்கி இதன் மூலம் பல இந்திய மாணவர்கள் வெளிநாடுகளுக்கு சென்று படிப்பதற்கு ஸ்காலர்ஷிப் உதவியை செய்துவந்தது. தவிர இந்தியன் இன்ஸ்டியூட் ஆப் சயின்ஸ் (பெங்களூரு), டாடா இன்ஸ்டியூட் ஆப் சோசியல் சயின்ஸ் (மும்பை) டாடா மெமோரியல் சென்டர் (மும்பை), டாடா இன்ஸ்டியூட் ஆப் பண்ட்மெண்டல் ரிசர்ஸ் (மும்பை) என பல கல்வி மற்றும் மருத்துவ நிறுவனங்களை தொடங்கியுள்ளது. தவிர விளையாட்டு துறையில் பல அகாடமிகளை உருவாக்கி நிர்வகித்து வருகிறது. பல வீரர்கள் இவர்களது அகாடமிகளில் இருந்து உருவாகி சாதித்திருக்கிறார்கள்.


தவிர 1920-ம் ஆண்டு இந்தியாவுக்கென பிரத்யேக ஒலிம்பிஸ் நிர்வாக குழு  இல்லை. அப்போதைய டாடா குழுமதலைவர் Sir Doranji tata இந்திய குழுவுக்கு ஸ்பான்ஸராக இருந்தார். இதன் பிறகு இந்திய ஒலிம்பிக் சங்கம் தொடங்கப்பட்டது. இதன் முதல் தலைவராக Sir Doranji tata நியமனம் செய்யப்பட்டார்.


சொத்துமதிப்பு?


உலகின் முக்கியமான குழுமமாக டாடா இருக்கிறது.  ஆனால் பணக்காரர்கள் பட்டியலில் டாடா குழுமம் இல்லை என்பதை கவனித்திருக்கிறீர்களா? ஒவ்வொரு நிறுவனத்திலும் அந்த குழும தலைவருக்கு பெரும் பங்கு இருக்கும். ஆனால் டாடாவை பொருத்தவரை தனிப்பட்ட முறையில் அதிக பங்குகளை வைத்திருப்பவர்கள் என யாரும் இல்லை.


டாடா குழும நிறுவனங்கள் அனைத்தையும் டாடா சன்ஸ் என்னும் நிறுவனம்தான் நிர்வகித்துவருகிறது. டிசிஎஸ், டாடா மோட்டார், டாடா கெமிக்கல் என டாடா குழுமத்தில் எந்த நிறுவனத்தை எடுத்துக்கொண்டாலும் இவை டாடா சன்ஸ் கட்டுப்பாட்டில்தான் இயங்குகிறது. ஒவ்வொரு நிறுவனத்துக்கும் பிரத்யேக தலைமைச் செயல் அதிகாரிகள், தலைவர்கள் இருந்தாலும் வழி நடத்தினாலும் ஒவ்வொரு நிறுவனத்திலும் டாடா சன்ஸ் முக்கிய பங்கு வகிக்கும். தற்போதைய நிலையில் டாடா சன்ஸ் தலைவர் என்.சந்திரசேகரன்தான் ஒட்டுமொத்த குழுமத்துக்கும் நிர்வாக தலைவர்.



டாடா குழுமத்தின் ஹோல்டிங் நிறுவனம் என்று சொல்லகூடிய டாடா சன்ஸ் நிறுவனத்தின் 66 சதவீத பங்குகள் டாடா  குழுமத்தின் 15 அறக்கட்டளைகள் வைத்திருக்கின்றன. டாடா குழுமத்தின் செயல்பாடுகள் மூலம் டாடா சன்ஸுக்கு வருமானம் கிடைக்கும். அந்த வருமானம் மூலம் அறக்கட்டளைக்கு டிவிடெண்ட் கிடைக்கும். இந்த டிவிடெண்டில் 85 சதவீதம் சமூக மேம்பாட்டுக்கு செலவு செய்ய வேண்டும் என்பதுதான் விதி.


டாடா சன்ஸில்


·         66 சதவீதம் அறக்கட்டளைகள் வைத்திருக்கின்றன


·         18.4 சதவீதம் மிஸ்திரி குழுமம் வைத்திருக்கிறது.


·         13 சதவீதம் அளவுக்கு டாடா குழும நிறுவனங்கள் வைத்திருக்கின்றன.


·         3 சதவீதம் அளவுக்கு டாடா குடும்ப உறுப்பினர்கள் வசம் உள்ளன்


·         0.83 மட்டுமே ரத்தன் டாடா வசம் உள்ளது.


டிசிஎஸ்


சர்வதேச அளவில் முக்கியமான நிறுவனம் டிசிஎஸ். 1968-ம் ஆண்டு தொடங்கப்பட்டது இந்த நிறுவனம்.  இதற்கு பிறகு தொடங்கப்பட்ட பல நிறுவனங்கள்  பங்குச்சந்தையில் பட்டியலாகின. ஆனால் டிசிஎஸ் பங்குச்சந்தையில் சாதகமான வாய்ப்பு இல்லாத 2004-ம் ஆண்டு வெளியானது.


1990களின் இறுதியில் ஐடி நிறுவனங்களுக்கு சாதகமான வாய்ப்பு இருந்தது. பல நிறுவனங்களின் ஐபிஓ வெளியானது. அப்போது சந்தை மதிப்பு சுமார் 97000 கோடி என கணிக்கப்பட்டிருந்தது. இந்த மதிப்பீட்டில் சில சதவீத பங்குகளை விற்றிருந்தால் சில டாடா குழும நிறுவனங்களின் கடனை அடைத்திருக்க முடியும். ஆனால் சந்தை நன்றாக இருக்கும்போது ஐபிஓ செல்ல கூடாது. தவிர ஐடி நிறுவனங்களில் பெரிய சரிவு உருவாகும் வாய்ப்பு இருக்கிறது. குறுகிய கால ஆதாயத்துக்கான முதலீட்டாளர்களிடம் செல்ல கூடாது ரத்தன் டாடா தெரிவித்துவிட்டதால் பெரிய வாய்ப்பு தவறிவிட்டது. இதுபோல பல விஷயங்களை டாடா குழுமம் தொடர்ந்து செய்துவருகிறது. அதற்காக டாடா குழுமம் தோல்வியை சந்திக்கவில்லையா, குழுமத்தின் மீது விமர்சனமே இல்லையா என்று கேட்டால் ஆமாம் என்றுதான் சொல்ல வேண்டும். டாடா மோட்டார்ஸ், டாடா ஸ்டீல் மற்றும் டாடா பவர் ஆகிய நிறுவனங்களில் கடன் அதிகமாக இருக்கிறது. இந்த மூன்று நிறுவனங்களின் கடனை அடுத்த நான்கு ஆண்டுகளுக்குள் புஜ்ஜியமாக குறைக்க திட்டமிட்டுள்ளன.


ஜாகுவார் ராண்ட்ரோவர் நிறுவனத்தை வாங்கியது தவறான மற்றும் காஸ்ட்லியான முடிவு. நானோ திட்டம் தொடங்கியதில் இருந்து பிரச்சினை. சிங்கூரில் நிலம் கையகப்படுத்தியல் பிரச்சினை தொடங்கியது. அதன் பிறகு அந்த கார் தயாரிக்கும் ஆலையை குஜராத்துக்கு கொண்டு சென்றாலும் எதிர்பார்த்த வெற்றியை அடையவில்லை.




உத்தரகாண்ட் உள்ளிட்ட சில மாநிலங்கள் சலுகைகளை வழங்க முடிவெடுத்தாலும் மேற்கு வங்கத்தில் ஆலையை தொடங்க டாடா குழுமம் முடிவெடுத்தது. இதற்கான 400 ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்பட்டது. இதில் சில நிலத்தின் உரிமையாளர்கள் எதிர்ப்பு தெரிவிக்கவே அது அரசியல் எதிர்ப்பாக மாறியது. இருந்தாலும் ஆலை அமைக்கும் பணி தொடங்கப்பட்டு, பணியாளர்கள் பயிற்சி அளிக்கும் பணிகளும் நடந்துவந்தன. நீதிமன்றத்தில் டாடா குழுமத்த்க்கு சாதகமான தீர்ப்புவந்தாலும், அரசியல் பெரிய பிரச்சினையாக உருவெடுத்தது. ஆலை தொடர்ந்து சிக்கலை சந்தித்தது.


நானோ ஆலையில் 40000-க்கும் மேற்பட்டவர்கள் போரட்டம் நடத்தும் அளவுக்கு பெரும் சர்ச்சையாக மாறியது. இதனால் டாடா ஆலை மேற்குவங்கத்தில் இருந்து குஜராத்துக்கு மாறியது. சிங்கூருக்கும் குஜராத்தில் ஆலை அமைய இருக்கும் இடத்துக்கும் 2100 கிலோமீட்டர் தூரம். ஆலையை மாற்றுவதற்கே பணியைசில மாதங்கள் ஆகின. இவ்வளவு சிக்கலை தாண்டி டாடா நானோ அறிமுகம் செய்யப்பட்டாலும் பெரும் தோல்வியை சந்திதது. ஒரு லட்ச ரூபாய் கார் என்று அறிவித்தாலும் வாடிக்கையாளர்களிடம் செல்லும்போது இதனை விட கூடுதல் விலையிலே விற்கப்பட்டது. மாருதி நிறுவனத்தின் 800 கிட்டத்தட்ட இதே விலையில் விற்கும்போது டாடா நானோ வாடிக்கையாளர்களை திருப்திபடுத்தவில்லை. 2000-ம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்ட மாருதி 800 இன்றும் சந்தையில் இருக்கிறது. ஆனால் நானோ பெரும் தோல்வியை சந்தித்தது. தொழில்நுட்ப ரீதியில் பெரும் தாக்கம் இல்லை என்றாலும் இதனை சந்தை படுத்துதலிலும் பெரும் தோல்வியை சந்திதது டாடா. cheapest car in the world என்னும் வாசகம் டானோ மீதான ஆர்வத்தை குறைத்தன. கார் வாங்குவதே சொசுகு மற்றும் பகட்டுக்காகத்தான். ஆனால் அது மலிவு விலை காராக இருந்தால் யாரும் வாங்க மாட்டார்கள் என்பதை யோசிக்க தவறிவிட்டது டாடா.




டாடா குழுமத்துக்கும் அதன் முக்கிய முதலீட்டாளரான சைரஸ் மிஸ்திரிக்கும் கருத்துவேறுபாடு வருவதற்கு முக்கிய காரணம் நானோ. ஆனால் மிஸ்திரி எதிர்பார்த்தை போல நானோ தயாரிப்பு நிறுத்தப்பட்டது.


2016-ம் ஆண்டு அதிரடியாக அப்போதைய தலைவர் சைரஸ் மிஸ்திர்யை நீக்கியது முதல் கடந்த நான்கு ஆண்டுகளாக நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நடந்தது முதல் பல சர்ச்சை பக்கங்கள் டாடாவுக்கு இருக்கின்றன. 2016-ம் ஆண்டு அக்டோபர் 24-ம் தேதி டாடா சன்ஸ் தலைவர் பதவியில் இருந்து சைரஸ் மிஸ்திரி நீக்கப்பட்டார். இதனை எதிர்த்து வழக்கு மேல் வழக்கு தொடுக்கப்பட்டது. பல கட்டங்களை தாண்டி கடந்த மாதத்தில் டாடா குழுமத்துக்கு சாதகமாக தீர்ப்பு வந்தது. பல சிக்கல்கள் மற்றும் சவால்களை நூற்றாண்டுக்கு மேல் சந்தித்துவந்தாலும் அடுத்தகட்ட நகர்வுக்கான திட்டங்களை வகுத்துவருகிறது டாடா. பிக் பாஸ்கட் நிறுவனத்தை வாங்க இருப்பதாக செய்திகள் வெளியாகி இருக்கின்றன.  இதனை அடிப்படையாக வைத்து ஒரு சூப்பர் ஆப் தயாராகி வருவதாக செய்திகள் வந்துகொண்டிருக்கின்றன. இதன் ஆப் மூலம் டாடா குழுமத்தில் நுகர்வோருக்கு தேவையான அனைத்தையும் வாங்க முடியும் என தெரிகிறது. மளிகை பொருட்கள்,  கார், விமான டிக்கெட், நிதி சார்ந்த திட்டங்கள், ஓட்டல் அறைகள், வீடு, வாட்ச்,ஏசி என டாடா குழுமத்தின் அனைத்து சேவைகளையும் ஒருங்கிணைக்கும் திட்டம் இருப்பதாகவும் தெரிகிறது.


ஆங்காங்கே சில சறுக்கல்கள் மற்றும் சரிவுகள் இருந்தாலும் 150 ஆண்டுகளுக்கு பிறகும் ஒரு குழுமம் புத்துணர்வாக, அந்தந்த காலத்துக்கு ஏற்ப போட்டிக்கு தயாராக இருப்பது நிச்சயம் சாதனைதான்.