பெண் இதழியலாளருக்கு கலைஞர் எழுதுகோல் விருது வழங்க விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.  ரூ.5 லட்சம் பரிசுத் தொகை பாராட்டுச் சான்றிதழ் கொண்ட இந்த விருதுக்கு விண்ணப்பிப்பது எப்படி? பார்க்கலாம்.


2021-22ஆம் ஆண்டிற்கான செய்தி மக்கள் தொடர்புத் துறை மானியக் கோரிக்கையில், இதழியல் துறையில் சமூக மேம்பாட்டிற்காகவும், விளிம்புநிலை மக்களின் மேம்பாட்டிற்காகவும், பெண்களின் முன்னேற்றத்திற்காகவும் பங்காற்றிவரும் ஒரு சிறந்த இதழியலாளருக்கு ஆண்டுதோறும் ‘கலைஞர் எழுதுகோல் விருது’ மற்றும் ஐந்து லட்சம் ரூபாய் பரிசுத் தொகையுடன் பாராட்டுச் சான்றிதழும் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. இந்த விருது ஒவ்வோர் ஆண்டும் கலைஞரின் பிறந்த நாளான ஜூன் 3 ஆம் நாளன்று வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டது. 


இந்த நிலையில், இந்த ஒரு முறை, பெண் இதழியலாளர் ஒருவருக்குக் கூடுதலாக கலைஞர் எழுதுகோல் விருது வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. 


இதுகுறித்துத் தமிழக அரசு தெரிவித்துள்ளதாவது:


’’கலைஞரின் நூற்றாண்டு விழாவையொட்டி, பெண்மையைப் போற்றுகின்ற வகையில் சிறப்பினமாக ஒரு பெண் இதழியலாளருக்கு “கலைஞர் எழுதுகோல் விருது” வழங்கிட விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. மேலும் கலைஞர் எழுதுகோல் விருது - 2022ஆம் ஆண்டிற்கான ஏற்கனவே பெறப்பட்டுள்ள விண்ணப்பங்களுடன், கூடுதல் விண்ணப்பங்களும் வரவேற்கப்படுகின்றன. மேலும், கலைஞர் எழுதுகோல் விருதுடன் ரூ.5 லட்சம் பரிசுத் தொகையும் பாராட்டுச் சான்றிதழும் வழங்கப்பட உள்ளது.


விருதிற்கான தகுதிகள் என்னென்ன?


* விண்ணப்பதாரர் தமிழ்நாட்டைச் சேர்ந்தவராக இருக்க வேண்டும்.


* தமிழ் இதழியல் துறையில் குறைந்தபட்சம் பத்து ஆண்டுகளாகத் தொடர்ந்து பணிபுரிகின்றவராகவும் இருக்க வேண்டும்.


* பத்திரிகைப் பணியை முழு நேரப் பணியாகக் கொண்டிருக்க வேண்டும்.


* இதழியல் துறையில் சமூக மேம்பாட்டிற்காகவும், விளிம்புநிலை மக்களின் மேம்பாட்டிற்காகவும், பெண்களின் முன்னேற்றத்திற்காகவும், பங்காற்றியிருக்க வேண்டும்.


* விண்ணப்பதாரரின் எழுத்துகள் பொதுமக்களிடையே நல்ல தாக்கத்தை ஏற்படுத்தியிருக்க வேண்டும்.


* விண்ணப்பதாரர் நேரடியாகவோ, மற்றொருவர் பரிந்துரையின் அடிப்படையிலோ பணிபுரியும் நிறுவனத்தின் பரிந்துரையின் பேரிலோ விண்ணப்பங்களை அனுப்பலாம்.


* இதற்கென அரசால் அமைக்கப்பட்டுள்ள தேர்வுக் குழுவின் முடிவே இறுதியானது. 


“கலைஞர் எழுதுகோல் விருது 2022” மற்றும் பெண்மையைப் போற்றுகின்ற வகையில் சிறப்பினமாக, கூடுதலாக ஒரு பெண் இதழியலாளருக்கு “கலைஞர் எழுதுகோல் விருது” ஆகியவற்றிற்கான தகுதியான விண்ணப்பங்கள், விரிவான சுய விவரங்கள் மற்றும் அவற்றுக்குரிய ஆவணங்களுடன் அனுப்பி வைக்க வேண்டும். 


என்ன முகவரி?


இயக்குநர், செய்தி மக்கள் தொடர்புத் துறை, தலைமைச் செயலகம், சென்னை 600009 என்ற முகவரிக்கு சான்றிதழ்களை அனுப்பி வைக்க வேண்டும்.


கடைசித் தேதி


இவற்றை அனுப்பி வைக்க  ஜூலை மாதம் 31ஆம் தேதி கடைசி ஆகும்’’. 


இவ்வாறு தமிழக அரசு தெரிவித்துள்ளது. 


*


ABP Nadu செய்திகளை டெலிகிராம் செயலி மூலம் உடனுக்குடன் தெரிந்துகொள்ள https://t.me/abpnaduofficial என்ற இணைப்பை க்ளிக் செய்யவும்.