கோயிலில் எப்படி அமர்வது என்றுகூட தெரியாத ராகுல் காந்திக்கு இந்துத்துவத்தின் மகிமை பற்றி எப்படித் தெரியும் எனக் கடுமையாக விமர்சித்துள்ளார் உ.பி. முதல்வர் யோகி ஆதித்யநாத்.


காங்கிரஸ் எம்.பி. ராகுல்காந்தி சமீப காலமாகவே இந்துத்துவம் பற்றி விமர்சனங்களை முன்வைத்து வருகிறார். கடந்த டிசம்பர் மாதம் ஒரு பொதுக்கூட்டத்தில் பேசிய ராகுல் காந்தி, “ஒரு இந்துத்துவாவாதி கங்கையில் குளிப்பார். ஆனால் ஒரு இந்து கோடிக்கணக்கான மக்களின் அபிமானத்தைப் பெறுவார். நரேந்திர மோடி தன்னை இந்து எனக் கூறுகிறார். ஆனால் அவர் என்றாவது உண்மையின் பக்கம் நின்றுள்ளாரா? ஒரு இந்து உண்மையின் வழியில் நடப்பார்.


மோடி அதை என்று செய்துள்ளார். 2 கோடி இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு என்றாரே! அது நிறைவேறியதா? கொரோனாவால் இந்தியா கஷ்டப்பட்டுக் கொண்டிருந்த சூழலில் தட்டுகளைத் தட்டச் சொன்னார். அவர் இந்துவா? இந்துத்துவாவாதியா? நாட்டில் மதம் பற்றிய அதுவும் இந்து மதம் பற்றிய பேச்சு அதிகமாக இருக்கிறது. இந்தியாவில் இப்போது நடைபெறும் போட்டி இந்துக்கும், இந்துத்துவாவாதிக்கும் எதிரானது. ஒருபுறம் அன்பைப் பரப்பும் இந்துக்களும், இன்னொரு புறம் பதவியைப் பறிக்க வெறுப்பை பரப்பும் இந்துத்துவாவாதிகளும் இருக்கின்றனர். பிரதமர் மோடியும் அவரது சகாக்களும் வெறுப்பைப் பரப்புகின்றனர்” என்று பேசியிருந்தார்.


இதற்குப் பதிலடி கொடுக்கும் விதமாக நேற்று ஒரு தேர்தல் பிரச்சார மேடையில் பேசிய யோகி ஆதித்யநாத், “ராகுல் காந்திக்கு கோயிலில் எப்படி அமர வேண்டும் என்று கூட தெரியவில்லை. அவர் சென்ற கோயிலின் பூசாரியே அவருக்கு அதைச் சொல்லிக் கொடுக்க வேண்டியுள்ளது. அப்படியிருக்க அவருக்கு இந்துத்துவத்தின் மகிமை பற்றி என்ன தெரியும்? தேர்தலுக்காக தவறான பிரச்சாரங்களை ராகுல் செய்து வருகிறார். அவர் பேசுவது அனைத்துமே பொய்ப் பிரச்சாரம். காங்கிரஸ்காரர்கள் ஏற்கெனவே பிரித்தாளும் கொள்கையைத் தான் கையாள்கின்றனர். பிரிவினை என்பது அவர்களின் மரபணுவிலேயே இருக்கிறது. அவர்களின் மூதாதையர்கள் நாங்கள் இந்துவானது ஒரு விபத்து என்று பேசியவர்கள் தானே. அவர்கள் இப்போது மற்றவர்கள் மீது பிரிவினைவாத அரசியல் குற்றச்சாட்டை வைப்பது நகைப்புக்குரியது” என்று விமர்சித்துள்ளார்.


நாம் இந்தியர்கள். இந்து என்பது நமது கலாச்சார அடையாளம். அது குறித்து நாம் பெருமைப்பட வேண்டும் என்று முதல்வர் யோகி ஆதித்யநாத் கூறினார்.


உத்தரப் பிரதேசத்தில் இந்த ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ளது. மொத்தமுள்ள 403 தொகுதிகளில் கடந்த முறை பாஹக 312 இடங்களைக் கைப்பற்றி தனிப்பெருங்கட்சியாக உருவானது. காங்கிரஸ் வெறும் 7 சீட்டுடன் மண்ணைக் கவ்வியது. அதனால் இந்தத் தேர்தல் பாஜகவுக்கு இன்னொரு வாய்ப்புக்கான அந்தஸ்து அடையாளமாகவும், காங்கிரஸுக்கு இழந்த மரியாதையை மீட்டெடுக்கும் செய் அல்லது செத்து மடி களமாகவும் இருக்கும்.