ஹரியானாவில் வரும் அக்டோபர் 5ஆம் தேதி சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ள நிலையில், மல்யுத்த வீரர்களான வினேஷ் போகத், பஜ்ரங் புனியா ஆகியோர் காங்கிரஸ் கட்சியில் இன்று அதிகாரப்பூர்வமாக இணைந்துள்ளனர். 


ராகுல் காந்தி போட்ட மாஸ்டர் பிளான்:


நடைபெற உள்ள சட்டப்பேரவை தேர்தலில் காங்கிரஸ் சார்பாக இருவரும் களமிறக்கப்படுவார்கள் என அரசியல் வட்டாரத்தில் பேசப்படுகிறது. ஜூலானா தொகுதியில் வினேஷ் போகத்தும் பட்லி தொகுதியில் பஜ்ரங் புனியாவும்  போட்டியிடுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.


காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, அக்கட்சியின் அமைப்பு செயலாளராக உள்ள கே.சி. வேணுகோபால் ஆகியோரை அவர்கள் இன்று நேரில் சந்தித்து பேசினர். பின்னர், நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் பேசிய வினேஷ் போகத், "காங்கிரஸ் கட்சிக்கு நான் நன்றி கூற கூறுகிறேன்.


கெட்ட காலங்களில் நம்முடையவர் யார் என்பதைக் கண்டுபிடித்துவிடுவோம் என கூறப்படுகிறது. நாங்கள் சாலையில் இழுத்துச் செல்லப்பட்டபோது பாஜகவைத் தவிர அனைத்துக் கட்சிகளும் எங்களுடன் இருந்தன. பெண்களுடன் நின்று இறுதி வரை போராடத் தயாராக உள்ள ஒரு கட்சியில் நான் இணைந்ததில் பெருமை அடைகிறேன்.


உருக்கமாக பேசிய வினேஷ் போகத்:


சண்டை இன்னும் தொடர்கிறது. இன்னும் முடிவுக்கு வரவில்லை. கோர்ட்டில் இருக்கிறது. அந்த போராட்டத்திலும் வெற்றி பெறுவோம். இன்று கிடைத்திருக்கும் புதிய தளத்தின் மூலம் தேச சேவைக்காக பாடுபடுவோம். நாங்கள் எப்படி முழு மனதுடன் விளையாடினோம், எங்கள் மக்களுக்காக உழைக்க எங்களால் முடிந்ததைச் செய்வோம்.


நான் என் சகோதரிகளிடம் ஒன்றை சொல்ல விரும்புகிறேன். நான் அவர்களுடன் இருக்கிறேன். உங்களுக்கென்று யாரும் இல்லை என்றாலும் நான் இருப்பேன். காங்கிரஸ் கட்சி இருக்கும். நான் இதை உணர்ந்தேன். நாங்கள் நிச்சயமாக இருப்போம் என்று நான் உங்களுக்கு உறுதியளிக்கிறேன்" என்றார்.


 






பாரிஸ் ஒலிம்பிக்கில் கலந்து கொண்டுவிட்டு இந்தியா திரும்பியதிலிருந்து, அவர் காங்கிரஸ் தலைவர்களுடனே காணப்படுகிறார். பாரிஸில் இருந்து வந்த வினேஷ் போகத்தை டெல்லியில் உள்ள இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்திற்கு சென்று நேரடியாக வரவேற்ற முதல் அரசியல் தலைவர் காங்கிரஸ் எம்பி தீபேந்தர் ஹூடா ஆவார்.