பாலியல் புகாரில் சிக்கியுள்ள பாஜக எம்பிக்கு எதிரான போராட்டத்தை முன்னின்று நடத்தி வரும் சாக்‌ஷி மாலிக், பஜ்ரங் பூனியா, வினிஷ் போகத் ஆகியோர் கடந்த மே மாதம் 31ஆம் தேதி தங்கள் பணிக்கு திரும்பினர். இதையடுத்து, அவர்கள் போராட்டத்தில் இருந்து பின்வாங்கியதாக தகவல்கள் வெளியாகின. இது தொடர்பாக, பல்வேறு விதமான ஊகங்கள் உலா வர தொடங்கின.


குறிப்பாக, கடந்த சனிக்கிழமை மாலை, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை மல்யுத்த வீரர்கள், வீராங்கனைகள் சந்தித்து பேசினர். இந்த சூழ்நிலையில், மல்யுத்த வீரர்கள் போராட்டத்தை கைவிட்டதாக பரவிய செய்திகள் பரபரப்பை கிளப்பின.


போராட்டத்தை கைவிட்டார்களா மல்யுத்த வீரர்கள்?


போராட்டத்தை கைவிட்டதாக வெளியான வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக விளக்கம் அளித்த சாக்‌ஷி மாலிக், "இந்த செய்தி முற்றிலும் தவறானது. நீதிக்கான போராட்டத்தில் நாங்கள் யாரும் பின்வாங்கவில்லை, நாமும் பின்வாங்க மாட்டோம். சத்தியாகிரகத்துடன், ரயில்வேயில் எனது பொறுப்பை நிறைவேற்றி வருகிறேன். நீதி கிடைக்கும் வரை எங்களது போராட்டம் தொடரும். தயவு செய்து தவறான செய்திகளை பரப்ப வேண்டாம்" என குறிப்பிட்டார்.


போராட்டத்தை கைவிடவில்லை என மல்யுத்த வீரர்கள் விளக்கம் அளித்தாலும், அமித் ஷாவுடன் நடைபெற்ற சந்திப்பில் அப்படி என்னதான் நடந்தது என்பது குறித்து கேள்விகள் எழுந்தன.


அமித் ஷாவுடன் மல்யுத்த வீரர்கள் டீலிங்கா..?


இந்நிலையில், அதற்கு விளக்கம் தரும் வகையில் மல்யுத்த வீரர் பஜ்ரங் புனியா பதில் அளித்துள்ளார். "உள்துறை அமைச்சர் அமித் ஷாவுடன் சனிக்கிழமை மாலை நடந்த சந்திப்பு பற்றி பேச வேண்டாம் என்று அரசாங்கம் கேட்டுக் கொண்டது" என பஜ்ரங் புனியா தெரிவித்துள்ளார்.


தனியார் செய்தி நிறுவனம் நடத்திய நேர்காணலில் கலந்து கொண்ட பஜ்ரங் புனியாவிடம் அமித் ஷாவுடன் டீலிங் மேற்கொண்டுள்ளீர்களா? என செய்தியாளர் எழுப்பிய கேள்விக்கு, "மத்திய அமைச்சருடன் எந்த விதமான டீலிங்கும் மேற்கொள்ளவில்லை. விசாரணை நடைபெற்று வருவதாக அமித் ஷா எங்களிடம் கூறினார். போராட்டம் நின்றுவிடவில்லை. அது தொடரும். அதை எப்படி முன்னெடுத்துச் செல்வது என்பது குறித்து நாங்கள் வியூகம் வகுத்து வருகிறோம்" என்றார்.


அமித் ஷாவுடன் நடைபெற்ற சந்திப்பு குறித்து மனம் திறந்த பஜ்ரங் புனியா, "அமித் ஷாவுடனான சந்திப்பு குறித்து வெளியே தெரிவிக்க வேண்டாம் என்று அரசாங்கம் கேட்டுக் கொண்டது. ஆனால், அவர்களே ஊடகங்களுக்கு தகவல்களை கசியவிட்டனர். விளையாட்டு வீரர்கள் அரசாங்கத்தின் பதிலில் திருப்தி அடையவில்லை. அரசாங்கமும் எங்கள் கோரிக்கைகளை ஏற்கவில்லை" என்றார்.


அமித் ஷாவை சந்தித்த மல்யுத்த வீரர்கள், "இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் தலைவரும் பாஜக எம்பியுமான பிரிஜ் பூஷன் சரண் சிங் மீது சிறுமி உள்பட ஏழு மல்யுத்த வீராங்கனைகள் வைத்த பாலியல் புகார் குறித்து பாரபட்சமற்ற விசாரணை நடத்த வேண்டும்" என கோரிக்கை விடுத்தனர்.
"சட்டம் தன் கடமையை செய்யும்" என மல்யுத்த வீரர்களிடம் அமித் ஷாவும் உறுதி அளித்துள்ளார்.