12 மணி நேர வேலை – தற்போது தமிழ்நாட்டின் பிரதான பேசுபொருளாக மாறியுள்ளது. இது தொடர்பாக, ஒரு பத்திரிகையாளர் என்ற முறையில், நான் கண்ட, கேட்ட, அனுபவித்த பேச்சு, கருத்துகளை தொகுப்பாக தங்களின் பார்வைக்கு உழைக்கும் மைந்தர்களின் எண்ணவோட்டமாக கொண்டு வருகிறேன். 


இதில், அரசியல் தலைவர்கள், தொழிற்சங்கவாதிகளின் கருத்துகள் ஏற்கெனவே உங்களை எட்டியிருக்கும் என்பதால், சாதாரண தொழிலாளர்களின் குரலாக இந்தக் கட்டுரையை உங்கள் முன் வைக்கிறேன். 


மனம் திறந்த உழைக்கும் பெண்மணி:


12 மணிநேரம்  என 4 நாள் கஷ்டப்பட்டாலும் 3 நாள் லீவு இருக்கு  என மகிழ்ச்சி அடையும் கூட்டம் ஒருபக்கம் இருந்தாலும், 12 மணி நேர வேலை என்றால், தினமும்  அதற்கான ஆயத்தம், பயணம் ஆகியவற்றால் கிட்டத்தட்ட 15 மணி நேரம் இழக்க வேண்டும் என கோபம் கொள்ளும் கூட்டமும் அதிகம் இருக்கிறது. அப்படி சென்னையில் உயர்மட்ட அலுவலகத்தில் புணிபுரியும் பெண்மணி ஒருவர் என்னிடம் பகிர்ந்த கருத்துதான் தற்போது பார்க்கப்போவது:




1. அலுவலத்தில் இருந்து 5 கிலோமீட்டர் தொலைவில் வீடு இருந்தால், காலை 9 மணிக்கு வேலைக்குப்போக வேண்டுமென்றால், வீட்டில் இருந்து புறப்பட்டு, பொதுப்போக்குவரத்தான பேருந்து, ரயில் அல்லது தனிநபர் வாகனம் என ஏதோ ஒன்றில் பயணித்து, அலுவலகம் செல்வதற்கு அதிகபட்சம் 1 மணிநேரம் என வைத்துக் கொள்வோம்.


அதாவது, 8 மணிக்கு வீட்டில் இருந்து புறப்பட வேண்டும். அப்படியென்றால், 7 மணி வாக்கில் எழுந்தால்தான் காலைக்கடன் தொடங்கி,  உணவருந்திவிட்டு புறப்படுவதற்கு சரியாக இருக்கும். அதாவது, காலை 7 மணிக்கு எழுந்தால்தான், 9 மணிக்கு அலுவலகம் சென்று பணியை தொடங்க முடியும்.


அதேபோல், இரவு 9 மணிக்கு வேலை முடிந்த பிறகு, அலுவலகத்தில் இருந்து வீடு திரும்புவதற்கு 1 மணிநேரம் என எடுத்தால் 10 மணி ஆகிவிடும். அதாவது, காலை 7 மணி முதல் இரவு 10 மணி வரை என கிட்டதட்ட 15 மணிநேரம் ஆகிவிடும். 10 மணிக்கு வீட்டிற்குச் சென்ற பிறகு சாப்பிட்டுவிட்டு தூங்கதான் நேரம் சரியாக இருக்கும்.


மீண்டும் காலைமுதல் அதே பாணியில் கிடுகிடுவென இயங்க வேண்டும்.  எனவே வீட்டில் உள்ளோருடன் மனமார்ந்து பேசுவது என்பது அரிதாகிவிடும். 3 நாள் லீவில் ஆர, அமர பேசலாமே என சிலர் கூற வாய்ப்புண்டு. இதில் ஆதாயம் உண்டு என்றாலும், 4 நாள் உழைப்பு சுரண்டலுக்கான ஓய்வாக இதுபோகுமே தவிர, இல்லத்தில் உள்ளோருடன் பேசுவதற்கான நேரமாக இருக்குமா என்பது பெரும் கேள்விதான் என அந்தப் பெண்மணி பேசினார். 


மெஷின்களா மனிதர்கள்?


 ஃபேஸ்புக் எனும் முகநூல் பக்கம் போனால், சம்சுதீன் ஹீரா என்பவரின் பதிவு ஒன்று பளிச்சென கண்ணில்பட்டது.  பொதுவெளி என்பதால் அவரின் அனுமதியின்றி, அவரது பதிவை கீழ் பதிகிறேன்.


12 மணிநேர வேலைன்னா 9.00 - 9.00 தானேன்னு ரொம்ப ஈசியா நெனச்சுக்கிறாங்க போல.  திருப்பூர் மாதிரி ஏரியாவுல ஃபாக்டரி வேலை எப்படி இருக்கும் தெரியுமா? 9 மணிக்கு ப்ரொடக்சன் ஆரம்பிக்கனும்னா அவன் 8.45 க்கு யூனிட்க்குள்ள இருக்கனும். அப்பதான் மெசின தொடச்சி கிடச்சு, பொருள் எல்லாம் எடுத்து அரேஞ்ச் பண்ண முடியும்.  8.45 க்கு யூனிட்க்குள்ள இருக்கனும்னா 8.30க்கு ஃபாக்டரிக்குள்ள வந்திருக்கனும் அப்பதான் அட்டனன்ஸ் எண்ட்ட்ரி போட்டு உள்ள போக சரியா இருக்கும். 


8.30 க்கு ஃபாக்டரிக்குள்ள இருக்கனும்னா அவன் 8.20 க்கு பஸ்சிலிருந்து இறங்கியிருக்கனும். அதுக்கு அவன் 8.00 மணிக்கு பஸ் ஏறியிருக்கனும்.  8 மணி பஸ் ஏற அவன் 7.50 க்கு பஸ் ஸ்டாண்ட் வரனும். அதுக்கு அவன் 7.30 க்கு வீட்லிருந்து கிளம்பனும். 7.15 மணிக்கு சாப்பிட்டு முடிச்சிருக்கனும். 6.45 மணிக்கு குளிச்சிருக்கனும். 6.30 க்கு காலைக்கடன் முடிச்சிருக்கனும். 6 மணிக்கு எழுந்திருக்கனும். 


நைட் 9 மணிக்கு மெஷின் ஆஃப் பண்ண பிறகு எடுத்து வெச்சிட்டு 9.15க்கு யூனிட்லர்ந்து வெளியே வந்து, எக்சிட் ரெஜிஸ்டர் பண்ணி ஃபாக்டரிக்கு வெளியே வரும்போது 9.30 ஆகியிருக்கும். பஸ்ச பிடிச்சு பஸ் ஸ்டாண்ட்ல இறங்கி, அங்கிருந்து வீட்டுக்கு ஓடி அப்பாடான்னு உக்காரும்போது 10.30 ஆகியிருக்கும். சாப்பிட்டு முடிச்சு பெட்டுக்கு போறப்ப மணி 11 ஆகியிருக்கும். ஆகமொத்தம் தூங்கறதுக்கு கிடைக்கிற மிச்ச நேரம் 7 மணிநேரம். 




பொண்டாட்டி பிள்ளைகளோட ரெண்டு வார்த்த பேசவோ, கொஞ்ச நேரம் டி.வி பாக்கவோ, பக்கத்து வீட்டு மனுஷங்கள எட்டிப் பாக்கவோ, புத்தகம் வாசிக்கவோ நேரம் ஒதுக்கனும்னா மிச்சம் இருக்கிற அந்த ஏழு மணிநேரத்துலதான் கழிக்கணும். 
இதுல வேலைக்கு போற பெண்கள் நிலைமைய யோசிச்சு பாருங்க. காலைல சமைக்கனும், புள்ளைகளுக்கு ஊட்டனும், ஸ்கூல்க்கு கிளப்பனும், புருஷங்கார புடுங்கிக்கு பணிவிடைகள் செய்யனும். இதெல்லாம் முடிச்சிட்டுதான் வேலைக்கு கிளம்பனும். 
அப்படினா அவ எத்தன மணிக்கு எந்திரிக்கனும்? 


இப்ப சொல்லுங்க. 12 மணிநேர வேலைன்னா வெறும் 12 மணிநேரம் மட்டும்தானா? மனுஷங்கள உணர்வுகளற்ற மெசின்களா மாற்றும் வாய்ப்பு அதிகம் என பதிவிட்டிருந்தார். 12 மணி நேர வேலையை வரவேற்றால் என்ன தவறு என்ற அடிப்படையில் மற்றுமொரு கருத்தை சமூக வலைதளத்தில் எனது நண்பர் பார்த்தசாரதி பதிவிட்டிருந்தார். இதோ, அவரது பதிவு


ஆதரவு குரலும் இல்லாமல் இல்லை:


12 மணி நேர வேலை.. இப்போது எந்தப் பணியிலும் நிர்ணயிக்கப்பட்ட வேலை நேரத்துக்கு யாரும் பணி செய்வதில்லை. பலர், கூடுதல் நேரம் பணியாற்றுவது கண்கூடு. 8 மணி நேர வேலை என்பது அடிப்படை உரிமை.. எவ்வளவு போராட்டம், உயிரிழப்புக்குப் பிறகு 1886-ஆம் ஆண்டில் இது நடைமுறைக்கு வந்தது எல்லாமே சரிதான். சில நிறுவனங்கள்தான் கூடுதல் பணி நேரத்தை ஓ.டி.யாகக் கணக்கிடுகின்றன.


பலவற்றில், கூடுதல் நேரம் வேலை பார்க்கும் ஊழியர், பணியாளர்களுக்கு எந்தப் பலனும் இல்லை. இப்போது பார்க்கும் கூடுதல் நேரத்துடன் இன்னும் ஒருசில மணி நேரங்கள் வேலை பார்த்தால் போதும். அதுவும் விருப்பம் உள்ளவர்கள் மட்டும் பார்க்கலாம். அவர்களுக்கும் மற்றவர்களைப்போல் 8 மணி நேர வேலைக் கணக்கீடுதான்.


ஆனால், வாரத்துக்குக் கூடுதலாக இரண்டு ஓய்வுநாள்கள் கிடைக்கும். (6*8 = 48 மணி நேரம்.. 4*12 = 48 மணி நேரம்). இது, வெளியூரில் பணிபுரிபவர்கள், திருமணம் ஆகாதவர்களுக்குப் பயனுள்ளதாக இருக்கும் என்பது என் கருத்து. குடும்பத்துக்காகவும், தனிப்பட்ட முறையிலும் செலவிடும் நேரம் குறைந்துவிடுமோ எனலாம்.


இப்போது மட்டும் என்ன? வீட்டில் இருந்தாலும், தனியாக இருந்தாலும், மொபைல் போன், தொலைக்காட்சி உள்ளிட்டவற்றால் நேரம் வீணடிக்கப்படுவதை மறுக்க முடியாது. அந்த நேரத்தை அலுவலக வேலையில் செலவிட்டால் கூடுதல் ஓய்வுநாள் கிடைக்கிறது என்பது பயனுள்ளதுதானே. குறிப்பாக, திருமணம் ஆனவர்களுக்கு, அந்த இரண்டு நாள் கூடுதல் ஓய்வுநாள் பயனுள்ளதாகவே இருக்கும். இது என்னுடைய கருத்து மட்டுமே. அவரவர் தேவை.. அவரவர் உரிமை..


உளவியல் தாக்கம் என்ன?


இதுபோன்று எண்ணற்ற கருத்துகள் சமூக வலைதளத்தில் பரவி வரும் நிலையில், உளவியல் வல்லுநர் வர்ஷாவிடம், இந்த 12 மணி நேர வேலை என்ன வகை தாக்கத்தை ஏற்படுத்தும் என்ற கேள்வியை முன் வைத்தேன். 


நிச்சயமாக 12 மணி நேர வேலை என்பது நமது நாட்டில், உழைப்போரிடம் உளவியல் தாக்கத்தை ஏற்படுத்தும். ஏற்கெனவே, ஐடி துறையில் வேலைப் பார்ப்போர் பலர் மறைமுகமாக  ஒரு சில நாட்கள் 10 முதல் 12 மணி நேரம்தான் வேலைப் பார்க்கிறார்கள். இதனால், அவர்கள் அடையும் உளவியல் மாற்றம் பெருமளவு இருக்கிறது.  தூக்கமின்மை, சரியாக சாப்பிடாமை அதிகரித்து வருகிறது என்பது யதார்த்தம்.




3 நாள் விடுமுறை என்பது வரவேற்கக்கூடியதுதான் என்றாலும், 4 நாள் அழுத்தத்தில் இருந்து நீங்கள் விடுபடுவதற்கே, ஓரிரு நாள் ஆகிவிடும். மீதம் ஒருநாள்தான் இருக்கும் என்பதால், பெரிய வித்தியாசம் இருக்காது.  அதுவும் சில வாரங்களுக்கு 4 நாள் 12 மணி நேர உழைப்பு, 3 நாள் விடுமுறை என்பது சிறப்பாக இருந்தாலும், அதுவே தொடரும் போது,  உழைக்கும் 4 நாட்களில் ஏற்படும் உடல் அசதி, அஜீரணம், தூக்கம்  குறைதல் உள்ளிட்ட சுகாதாரப் பிரச்சினைகள் பெரிய தொந்தரவுகளுக்கு வழி வகுக்க வாய்ப்ப இருக்கிறது.


குழந்தைகளின் பாதுகாப்பை கேள்விக்குறியாக்கும் 12 மணிநேர வேலை:


குழந்தைகளுக்கு எதிரான வன்முறை தொடர்ந்து அதிகரித்து வரும் இந்த சூழலில், பெற்றோரின் அரவணைப்பு இன்றி குழந்தைகள் வளர்க்கப்படுவது சமூகத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் என கூறுகிறார் பத்திரிகையாளர் குணவதி. குறிப்பாக, உடல், உள, ஊட்டச்சத்து ரீதியாக குழந்தைகள் பல சவால்களை சந்திப்பர் என எச்சரிக்கிறார். பெண் குழந்தைகளுக்கு எதிரான வன்முறை தெரிந்த நபர்களாலேயே அதிகம் நடக்கிறது என ஐக்கிய நாடுகள் சபை கூறும் சூழலில், பெற்றோரின் பாதுகாப்பு இந்த சமயத்தில் அதிகம் தேவைப்படுகிறது என்கிறார் அவர்.


பெற்றோரின் அரவணைப்பின்றி வளரும் குழந்தைகளின் எதிர்காலம் பல்வேறு விதமான சிக்கலுக்கு வழிவகுக்கும். நாள் ஒன்றுக்கு ஒரு முறை கூட தேவையான ஊட்டச்சத்து கிடைக்கவில்லை என்றால் அந்த குழந்தையின் நிலை என்னவாகும் என கேள்வி எழுப்புகிறார் அவர்.


உழைக்கும் வர்க்கம் கொண்டாடும் வகையில் அறிவிப்பு வெளியாகுமா?


ஸ்பெயின், பெல்ஜியம், நியூஸிலாந்த், ஜப்பான், ஐக்கிய அமீரகம் போன்ற சில நாடுகளில் வாரத்திற்கு  4 நாள் வேலை  திட்டம் அமலில் இருக்கிறது. ஆனால், 12 மணி நேரம் வேலை அல்ல.. வெறும் 8 முதல் 9 மணி நேரம்தான்… இதனால், உற்பத்தித் திறனும் அதிகரித்திருக்கிறது. உழைப்போரும் திறனுடன் மகிழ்ச்சியாகவும் உழைத்து களிக்கிறார்கள் என புள்ளி  விவரங்கள் சொல்கின்றன.  எனவே, தயாரிப்புத்திறனும் அதிகரிக்கனும், உழைப்போரும் சிறப்பாக இருக்கனும் என்பதை மனதில் கொண்டு செயல்பட வேண்டும் என உளவியல் நிபுணர் தெரிவித்தார். 


3 நாள்  லீவு என்பதைக் காட்டிலும், 4 நாட்கள் படும் வேதனை பெரிதாக இருக்கும் என்ற கருத்தே அதிகம் தென்படுகிறது. தலைநகர் சென்னை, தொழில் நகரங்களான கோவை, திருப்பூர் முதல் தமிழகத்தின் பல பகுதிகளிலும் இதே கருத்து எதிரொலிப்பதாக, எமதுசெய்தியாளர்கள் தெரிவிக்கின்றனர்.


12 மணி நேர வேலையை தேர்வு செய்யலாமா? வேண்டாமா? என்பதை அந்தந்த ஊழியர்களே முடிவு செய்வார்கள் என சொல்லப்பட்டாலும் ஊழியரின் விருப்பத்திற்கு எதிராக அவர்கள் வேலையில் ஈடுபடுத்தப்படலாம் என அச்சம் கொள்ளப்படுகிறது. அதேபோல, அனைத்து தொழிலுக்கும் இது பொருந்தாது. குறிப்பிட்ட தொழிலுக்கு மட்டுமே பொருந்தும் என மசோதாவில் குறிப்பிடப்பட்டாலும் காலபோக்கில் அனைவருக்கும் இது விரிவுப்படுத்தப்படும் என தொழிலாளர்கள் அச்சம் தெரிவிக்கின்றனர்.


புகார் பெட்டி மூலம் மக்கள் மனம் அறிந்து மக்களின் ஆதரவுடன் ஆட்சியில் அமர்ந்து, திட்டங்களைச் செயல்படுத்தும் முதலமைச்சருக்கு தொழிலாளர்கள் சார்பாக ஓர் அன்பு வேண்டுகோள்.


இந்தியாவிலேயே, தமிழகத்தின் சிங்காரவேலர்தான். உழைப்பாளர் தினத்தை, கடந்த 1923-ம் ஆண்டு, மே 1-ம் தேதி சென்னையில் கொடியேற்றி கொண்டாடினார். உழைப்போருக்காக நாட்டிற்கே வழிகாட்டியது தமிழகம். அந்த நூற்றாண்டு விழா, இன்னும் சில தினங்களில் கொண்டாடப்பட இருக்கிறது. அந்த வகையில் உழைக்கும் வர்க்கம் கொண்டாடும் வகையில், முதலமைச்சர் ஸ்டாலின், 12 மணி நேர வேலை வேண்டுமா, வேண்டாமா என்பது தொடர்பான அதிரடி அறிவிப்பை வெளியிடுவார் என எதிர்பார்க்கிறேன்.