ஆங்கிலேயர்களிடம் இருந்து இந்தியா சுதந்திரம் பெற்ற பிறகு 1949 ஆம் ஆண்டு ஜனவரி 15 ஆம் தேதி, சுதந்திர இந்தியாவின் முதல் ராணுவ தளபதியாக, ஜெனரல் கே.எம்.கரியப்பா பொறுப்பேற்றார். இதனை நினைவு கூறும் விதமாக ஆண்டுதோறும் ஜனவரி 15 ஆம் தேதி இந்திய ராணுவ தினமாக கொண்டாடப்படுகிறது. இந்த நாளில் ராணுவ வீரர்கள் மற்றும் போரில் உயிர்நீத்த தியாகிகளுக்கு மரியாதை செய்யப்பட்டு வருகிறது. அந்த வகையில் இன்று இந்திய ராணுவ தினம் கொண்டாடப்படுகிறது. ராணுவ தினத்தையொட்டி ராணுவத்தினருக்கு குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த், பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.






“இராணுவ தினத்தை முன்னிட்டு, நமது துணிச்சலான, மரியாதைக்குரிய வீரர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினருக்கு வாழ்த்துகள். இந்திய ராணுவம் அதன் துணிச்சலுக்கும், தொழில்முறைக்கும் பெயர் பெற்றது. தேசப் பாதுகாப்பிற்காக இந்திய ராணுவத்தின் விலைமதிப்பற்ற பங்களிப்பை வார்த்தைகளால் விவரிக்க முடியாது” என்று பிரதமர் மோடி ட்வீட் செய்துள்ளார். 






அந்த ட்வீட்டின் தொடர்ச்சியாக இன்னொரு டீவீட்டை பதிவிட்டிருந்தார். அதில், "இந்திய இராணுவ வீரர்கள் விரோத நிலப்பரப்புகளில் பணியாற்றுகிறார்கள் மற்றும் இயற்கை பேரழிவுகள் உட்பட மனிதாபிமான நெருக்கடியின் போது சக குடிமக்களுக்கு உதவுவதில் முன்னணியில் உள்ளனர். வெளிநாடுகளிலும் அமைதி காக்கும் பணிகளில் ராணுவத்தின் சிறப்பான பங்களிப்பிற்காக இந்தியா பெருமை கொள்கிறது” என்று பிரதமர் ட்விட்டரில் எழுதினார்.






அதனை தொடர்ந்து நாட்டின் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் ட்விட்டரில் வாழ்த்து தெரிவித்திருந்தார். அவர் எழுதிய பதிவில், "ராணுவ தினத்தில் ராணுவ வீரர்கள் மற்றும் முன்னாள் ராணுவ வீரர்களுக்கு வாழ்த்துக்கள். தேசிய பாதுகாப்பை உறுதி செய்வதில் இந்திய ராணுவம் முக்கிய பங்கு வகிக்கிறது. எல்லைகளைப் பாதுகாப்பதிலும் அமைதியைப் பேணுவதிலும் நமது வீரர்கள் தொழில்முறை, தியாகம் மற்றும் வீரம் ஆகியவற்றை வெளிப்படுத்தியுள்ளனர். உங்கள் சேவைக்கு தேசம் நன்றி கூறுகிறது. ஜெய் ஹிந்த்!"