நாடாளுமன்றம் மற்றும் மாநில சட்டப்பேரவைகளில் 33 சதவிகிதம் இடங்களை பெண்களுக்கு ஒதுக்கும் மசோதாவை நிறைவேற்ற பல ஆண்டுகளாக முயற்சி மேற்கொள்ளப்பட்டது. காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு, மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை கடந்த 2010ஆம் ஆண்டு, மாநிலங்களவையில் நிறைவேற்றியது. ஆனால், மக்களவையில் நிறைவேற்ற முடியவில்லை.


கடந்த 13 ஆண்டுகளாக மக்களவையில் நிறைவேற்றப்படாமல் இருந்த மகளிர் இட ஒதுக்கீடு மசோதாவை பாஜக தலைமையிலான அரசு மக்களவை, மாநிலங்களவை என இரண்டு அவைகளிலும் கடந்தாண்டு நிறைவேற்றியது. மசோதாவுக்கு குடியரசு தலைவர் திரௌபதி முர்மு ஒப்புதல் அளித்தார்.


மகளிர் இட ஒதுக்கீடு மசோதா எப்போது அமல்படுத்தப்படும்?


மக்கள் தொகை கணக்கெடுப்பு மற்றும் தொகுதி மறுசீரமைப்புக்கு பிறகு, மகளிர் இட ஒதுக்கீடு அமல்படுத்தப்படும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது. ஆனால், இந்தாண்டு மக்களவை தேர்தலிலேயே மகளிர் இட ஒதுக்கீட்டை அமல்படுத்த வேண்டும் என காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கோரிக்கை விடுத்து வருகின்றன. 


106ஆவது அரசியலமைப்பு திருத்தம் மூலம் இந்த மகளிர் இட ஒதுக்கீடு கொண்டு வரப்பட்டுள்ளது. மக்கள் தொகை கணக்கெடுப்பு மற்றும் தொகுதி மறுசீரமைப்புக்கு பிறகு மகளிர் இட ஒதுக்கீடு அமல்படுத்தப்படும் என அரசியலைப்பு திருத்தத்தில் குறிப்பிடப்பட்டதற்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.


ஜெயா தாக்கூர் என்பவர் தொடர்ந்த மனுவில், "குறிப்பிட்ட அந்த வாசகத்தை மட்டும் செல்லாது என அறிவிக்க வேண்டும். சிறப்பு நாடாளுமன்ற கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட அரசியலமைப்பு திருத்தத்தை காலவரை இன்றி தள்ளி வைக்கக்கூடாது" என கோரிக்கை விடுக்கப்பட்டது. இந்த வழக்கை நீதிபதிகள் சஞ்சீவ் கண்ணா மற்றும் எஸ். வி. என். பட்டி ஆகியோர் கொண்ட அமர்வு விசாரித்து வருகிறது.


உச்ச நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு என்ன?


நேற்று நடைபெற்ற விசாரணையில், இது தொடர்பாக பதில் அளிக்க மத்திய அரசு தரப்பில் கால அவகாசம் கோரப்பட்டது. மனுதாரர் ஜெயா தாக்கூர் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் மூத்த வழக்கறிஞர் விகாஸ் சிங், "பொதுத் தேர்தலுக்கு முன்பாக இந்தச் சட்டத்தை அமல்படுத்துவதை உறுதி செய்ய நீதிமன்றம் உத்தரவு பிறப்பிக்க வேண்டும்" என்றார்.


இரு தரப்பு வாதத்தை கேட்ட உச்ச நீதிமன்றம், "இந்த கட்டத்தில் நீதிமன்றம், உத்தரவு பிறப்பிக்க முடியாது. மத்திய அரசின் பதிலுக்காக காத்திருங்கள்" என தெரிவித்தது. இதற்கிடையே, இந்த விவகாரம் தொடர்பாக மனு தாக்கல் செய்ய விரும்புவதாக வழக்கறிஞர் பிரசாந்த் பூஷண் கூறினார்.


இதற்கு பதில் அளித்த நீதிமன்றம், "இது, புதிய மனுவாக இருப்பதால், தலைமை நீதிபதி சந்திரசூட் அமைக்கும் அமர்வின் முன்புதான் வழக்கு பட்டியலிடப்படும்" என தெரிவித்தது. இறுதியாக, இந்த வழக்கின் தொடர்பாக பதில் மனு தாக்கல் செய்ய மத்திய அரசுக்கு 2 வாரம் கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து வழக்கின் விசாரணை 3 வாரங்களுக்கு ஒத்திவைக்கப்பட்டது.