இன்றைய நவீன உலகில் காதலர்கள் தங்களது காதலை வெளிப்படுத்தும்போது தங்களது துணையை மகிழ்ச்சியின் உச்சியில் ஆழ்த்த வேண்டும் என்று விரும்புகின்றனர். அந்த வகையில், அவர்களை உற்சாகப்படுத்துவதற்கும், ஆச்சரியத்தின் உச்சத்தில் ஆழ்த்துவதற்கும் பல நிகழ்வுகளை கையாள்கின்றனர். அவ்வாறு புகழ்பெற்ற கேதார்நாத் ஆலயத்தில் அரங்கேறிய சம்பவம் இணையத்தில் வைரலாகி வருகிறது.
உத்தரகாண்ட் மாநிலத்தில் அமைந்துள்ளது கேதார்நாத் ஆலயம். இந்தியாவின் புகழ்பெற்ற ஆலயங்களில் ஒன்றான இந்த கோயிலுக்கு ஆண்டுதோறும் லட்சக்கணக்கான பக்தர்கள் வந்து செல்வது வழக்கம். பக்தர்களின் பாதுகாப்பிற்காகவும், தரிசன ஏற்பாட்டிற்காகவும் ஆயிரக்கணக்கான போலீசார் குவிக்கப்படுவதும் வழக்கம்.
கேதார்நாத் கோயிலில் ப்ரபோசல்:
நடப்பாண்டு கடந்த ஏப்ரல் மாதம் 25-ந் தேதி திறக்கப்பட்ட கேதார்நாத் கோயில், வரும் நவம்பர் மாதம் 14-ந் தேதி வரை திறக்கப்பட்டிருக்கும் என்பதும் குறிப்பிடத்தக்கது. கேதார்நாத் கோயிலுக்கு பக்தர்கள் சென்று வழிபட்டு வருகின்றனர். இந்த நிலையில், பெண் ஒருவர் தனது காதலருடன் கேதார்நாத் கோயிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்துள்ளார். அப்போது, தனது காதலரை ஆச்சரியப்படுத்தும் விதமாக கோயில் வளாகத்திலே அவர் கண்ணை மூடி சாமி தரிசனம் செய்து கொண்டிருந்தபோது, திடீரென தான் மறைத்து வைத்திருந்த மோதிரத்தை கீழே அமர்ந்து அவரிடம் நீட்டி என்னை திருமணம் செய்து கொள்வாயா? என்று கூறுகிறார்.
வைரலாகும் வீடியோ:
அந்த பெண்ணின் அன்பை கண்டு வியந்த காதலரும் ஆச்சரியத்தில் சில நொடிகள் உறைந்த பிறகு, அவர் அளித்த மோதிரத்தை அணிந்து கொள்கிறார். பின்னர், இருவரும் ஒருவரை ஒருவர் ஆரத் தழுவிக்கொண்டனர். மஞ்சள் உடையில் இருந்த இவர்கள் இருவரது காதலும் அங்கிருந்தோரை நெகிழ்ச்சி அடையவைத்தது. இந்த சம்பவத்தை வீடியோவாகவும் எடுத்து இணையத்தில் பதிவிட்டுள்ளனர்.
தற்போது, இந்த வீடியோவை பகிர்ந்து பலர் வாழ்த்துகள் தெரிவித்து வரும் நிலையில், சிலர் எதிர்ப்புகளை தெரிவித்து வருகின்றனர். அவர்கள் புகழ்பெற்ற கேதார்நாத் கோயிலுக்குள் இவ்வாறு நடந்து கொள்வதா? இதனால்தான் புகழ்பெற்ற கோயிலுக்குள் செல்போன் மற்றும் புகைப்படங்கள் எடுக்க அனுமதிப்பதில்லை என்றும் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர். சிலர் இந்த வீடியோ குறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கூறி வருகின்றனர். தற்போது, இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
மேலும் படிக்க: இந்தி தேசிய மொழியா? அனைத்து அமைச்சகங்களிலும் இந்தி ஆலோசனைக் குழுக்களைக் கலையுங்கள்- ராமதாஸ் வலியுறுத்தல்
மேலும் படிக்க: Odisha Train Accident Reason: 291 பேர் பலியான ஒடிசா ரயில் விபத்து - காரணத்தை கண்டுபிடித்த ரயில்வே பாதுகாப்பு ஆணையம்