தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் ஒரு பெண் தனது தலையில் ஹெல்மெட்டுக்கு பதிலாக நீல நிறத்தில்  பாலிதீன் கவர் அணிந்து டூவிலரில் அமர்ந்து சென்றது அங்கே வைரல் செய்தியாகி வருகிறது.  இதுகுறித்து சைபராபாத் ட்ராஃபிக் காவலும் தனது ட்விட்டர் பக்கத்திலும் பதிவு செய்திருந்தது. காவல்துறை பதிவு செய்திருந்த ட்வீட்டில் வாகனத்தில் பின்னால் அமர்ந்து செல்லும் ஒரு பெண் தனது தலையில் நீல நிற பாலிதீன் கவரை அணிந்து செல்கிறார். 


ஹெல்மட் என்பது முழு தலையையும் மூடியிருப்பதாக இருக்கவேண்டும்.அதற்காக பிளாஸ்டிக் கவரை அதற்கு மாற்றாகப் பயன்படுத்தக் கூடாது.தலைக்கவசம் அணியுங்கள் பாதுகாப்பாக இருங்கள் என ட்வீட் செய்துள்ளது.


நகரின் முக்கிய சாலைகளில் விபத்தைத் தடுக்கும் பொருட்டு ஐதராபாத் காவல்துறை சாலை விதிகளை முடுக்கி விட்டுள்ளது. வாகனம் ஓட்டுபவர்களுக்கு மட்டுமல்ல பின்னால் அமர்ந்து செல்பவர்களும் விதிகளைக் கடைபிடிக்க வேண்டும் இல்லையென்றால் அவர்களுக்கு சலான் தரப்படும் என போலீஸ் கூறியுள்ளது. 






அண்மையில் ஐதராபாத்தில் நடிகர் சாய் தரம் தேஜ் டூ-விலர் விபத்தில் படுகாயமடைந்ததை அடுத்து சாலை விதிகளை முடுக்கிவிட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.


இருசக்கர வாகன விபத்தில் படுகாயமடைந்த தெலுங்கு நடிகர் சாய் தரம் தேஜ் தற்போது ஐதராபாத் அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். ஐதராபாத்தின் முக்கியப் பகுதியான மாதாப்பூர் பாலத்துக்கு அருகே சாய் தரம் தேஜ் சென்ற இருசக்கர வண்டி நிலைதடுமாறிச் சரிந்து விபத்துக்குள்ளானது. ஹெல்மெட் அணிந்திருந்ததால் தலையில் எதுவும் பலத்த அடிபடவில்லை என்றாலும் வண்டி நிலைதடுமாறியதால் சாய் தரம் தேஜின் உடலில் மற்ற பகுதிகளில் பலத்த காயம் ஏற்பட்டிருந்தது. விபத்து குறித்த தகவல் வெளியானதுமே, சாய் தரம் தேஜின் சகோதரர் வைஷ்ணவ் தேஜ், மாமா பவன்கல்யாண், உறவினர்கள் வருண் தேஜ், நிஹாரிகா கொனிடேலா, நண்பர்  சுன்தீப் கிஷன் ஆகியோர் மருத்துவமனைக்கு விரைந்தனர். அல்லு அரவிந்த் மற்றும் சிரஞ்சீவியின் மனைவி சுரேகாவும் மருத்துவமனைக்கு விரைந்தனர். 


விபத்து குறித்து சாய் தரம் தேஜ் தரப்பில் விடுக்கப்பட்டுள்ள அறிக்கையில், விபத்தில் சிக்கிய சாய் தரம் தேஜ் நன்றாக இருக்கிறார். உடல் நலம் தேறி வருகிறார். மருத்துவமனையில் முன்னெச்சரிக்கையாக கண்காணிப்பில் இருக்கிறார். யாரும் கவலைப்படத் தேவையில்லை. உடல்நிலை இன்னும் கொஞ்சம் சீராக வேண்டியே அவர் அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு சிகிச்சைகள் நடந்து வருகின்றன என்று தெரிவிக்கப்பட்டது.விபத்தால் பதறிப்போன ரசிகர்கள் மருத்துவமனையில் அறிக்கைக்கு பிறகு அமைதியாகினர். ஆனால் சாய் தரம் தேஜ் இன்னமும் கண் திறக்கவில்லை என்றும், கோமாவில் தான் இருப்பதாகவும் தெலுங்கு நடிகர் பவன்கல்யாண் தெரிவித்திருந்தார். ராம் நடித்த ரிபப்ளிக் திரைப்பட விழாவில் கலந்துகொண்ட பவன்கல்யாண், '' பொதுவாக நான் உறவினர்களின் பட விழாக்களில் பங்கேற்பதில்லை. அவர்களை சுதந்திரமாக விட்டுவிடுவேன். ஆனால் இந்த விழாவுக்கு நான் வந்த காரணம் வேறு. ராம் தரம் தேஜ் தற்போது மருத்துவமனையில் உள்ளார். அவர் இன்றும் கோமாவில் தான் இருக்கிறார். இதுவரை கண் திறக்கவில்லை. என்றார். மேலும் பேசிய அவர், '' அவர் 45கிமீ வேகத்திலேயே பைக்கில் சென்றார். ஒரு ஆட்டோவை கடந்து செல்லும் போதே விபத்து ஏற்பட்டது. அது ஒரு துரதிஷ்டவசமான விஷயம். ஆனால் அதிவேகத்தில் சென்றதாக போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இந்த விபத்திலும் அரசியல் செய்யப்படுகிறது என்றார்.