ஆதிக் அகமதுவின் கூட்டாளியான அர்மானை உத்தரப்பிரதேச போலீஸார் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.


சுட்டுக்கொலை:


உத்தரப் பிரதேசத்தில் முன்னாள் எம்.பி.யும், பிரபல ரவுடியுமான ஆதிக் அகமது மற்றும் அவரது சகோதரர் காலித் அஸீம் என்ற அஷ்ரப்  ஆகியோர் காவல்துறை பாதுகாப்பில் இருக்கும்போதே கொல்லப்பட்டனர். இந்தச் சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்நிலையில் கேங்ஸ்டர் ஆதிக் அகமது கூட்டாளியான அர்மானை போலீஸார் இன்னும் தேடி வருகின்றனர். அவரைப் பற்றி துப்பு சொல்வோருக்கு ரூ.5 லட்சம் பரிசு அளிக்கப்படும் என்று உத்தரப்பிரதேச காவல்துறை அறிவித்துள்ளது.


யார் இந்த அர்மான்?


ஆதிக் அகமது கேங்கில் அர்மானை ஷூட்டர் அர்மான் என்றுதான் எல்லோரும் அழைப்பார்களாம். அர்மானின் சொந்த ஊர் பிஹார் மாநிலத்தின் சாசரம். அர்மான், அத்திக் கும்பலில் சேர்ந்த பின்னர் அவனின் விசுவாசியாகிவிட்டன். 


கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் அர்மான் உபி சிவில் லைன்ஸ் போலீஸாரால் கைது செய்யப்பட்டான். நாட்டுத் துப்பாக்கி உள்ளிட்ட ஆயுதங்களை தயாரித்த குற்றத்துக்காக கைது செய்யப்பட்டான். அது தவிர அர்மான் மீது வேறேதும் குற்ற வழக்குகள் இல்லை.


ஆனால் உமேஷ் பால் கொலை வழக்கில் அர்மான் சம்பந்தப்பட்டுள்ளான். கொலை நடந்த இடத்தில் இருந்த சிசிடிவி காட்சிகளில் அர்மானும் இருப்பது தெரியவந்தது. கொலை நடக்கும் அர்மானும், குட்டு முஸ்லிமும் அந்த இடத்திற்கு வருகின்றனர். அர்மான் தலையில் ஹெல்மெட் அணிந்திருக்கிறான். உமேஷ் பால் காரை நோக்கி அர்மான் சுடுவது அந்தக் காட்சிகளில் தெளிவாகப் பதிவாகியுள்ளது. இதனாலேயே இப்போது போலீஸார் அர்மானை தேடி வருகின்றனர்.


பதற்றத்தை ஏற்படுத்திய கொலை:


கடந்த 2005 ஆம் ஆண்டு உத்தரப்பிரதேசத்தில் பகுஜன் சமாஜ் கட்சி எம்.எல்.ஏ ராஜூ பால் கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் முக்கிய சாட்சியாக இருந்தவர் வழக்கறிஞர் உமேஷ் பால். இவரை  கடந்த 2007 ஆம் ஆண்டு கடத்தி கொலை செய்தனர். இதுதொடர்பான வழக்கில் சமாஜ்வாதி கட்சியின் முன்னாள் எம்.எல்.ஏ.வும், பிரபல ரவுடியுமான ஆதிக் அகமது மற்றும் அவரது சகோதரர் அஷ்ரப் ஆகியோருக்கு கடந்த மார்ச் 28 ஆம் தேதி பிரயாக்ராஜ் நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்து உத்தரவிட்டது. 


இதனிடையே  சில நாட்கள் முன்பு உமேஷ் பால் கொலை வழக்கில் தேடப்பட்டு வந்த அத்திக் அகமதுவின் மகன்கள் ஆசாத் மற்றும்  குலாம் ஆகியோர் ஜான்சியில் பதுங்கி இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. சம்பவ இடத்திற்கு குற்றவாளிகளை பிடிக்க சென்ற போலீசாருக்கும், எதிர்தரப்புக்கும் இடையே நடைபெற்ற துப்பாக்கிச் சூட்டில் ஆசாத் மற்றும் குலாம் என்கவுண்டரில் சுட்டுக் கொல்லப்பட்டனர். 


இந்நிலையில், அத்திக் அகமதுவின் கூட்டாளியான அர்மானை உத்தரப்பிரதேச போலீஸார் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.