உத்தரப்பிரதேசத்தில் போலீஸ் கான்ஸ்டபிள் ஒருவர் தனது சர்வீஸ் ரைஃபிளால் தன்னைத்தானே சுட்டு தற்கொலை செய்து கொண்டார். தான் வசித்துவந்த வாடகை வீட்டில் அவர் தற்கொலை செய்து கொண்டார்.


விவேக் வர்மா என்ற அந்த நபருக்கு வயது 23. இவர் 2020 ஆம் ஆண்டு தான்  இவர் கான்ஸ்டபிளாக இணைந்தார். இவர்  லக்கிம்பூர் கேரியைச் சேர்ந்தவர். போலீஸ் லைனில் பணியில் இருந்த அவர் தற்கொலை செய்து கொண்டதாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கேஷவ் குமார் தெரிவித்தார்.
 விவேக் வர்மா தேஹத் காவல் சரகத்துக்கு உட்பட்ட சோட்டா துஷா பகுதியில் ஒரு வாடகை வீட்டில் வசித்து வந்தார். சனிக்கிழமை அவருக்கு பணி நாள். ஆனால் அவர் பணிக்கு வரவில்லை. சக பணியாளர்கள் அவர் செல்போனை தொடர்பு கொண்டபோதும் அவர் அதை எடுக்கவில்லை. இதனால் சந்தேகமடைந்து அவரது வீட்டுக்கு போலீஸார் அனுப்பிவைக்கப்பட்டனர். 


அவரது வீட்டின் கதவு உள்புறமாக தாளிடப்பட்டிருந்தது. வீட்டிற்குச் சென்ற காவலர்கள் வெகு நேரமாக கதவைத் தட்டியும், காலிங் பெல் அடித்தும் கூட அவர் அதற்குப் பதிலளிக்கவில்லை. இதனால் கதவை உடைத்து உள்ளே சென்றனர். வீட்டினுள் விவேக் வர்மா ரத்த வெள்ளத்தில் கிடந்தார். அவர் உயிரிழந்தது பார்த்தவுடனேயே உறுதியானது. அவர் அருகே எஸ்எல்ஆர் ரைஃபிளும் இருந்தது. கூடவே ஒரு தற்கொலைக் கடிதமும் இருந்தது. அதில் குடும்பப் பிரச்சனையின் காரணமாக இந்த முடிவை எடுத்ததாக அவர் தெரிவித்திருந்தார்.


அவருடைய உடலைக் கைப்பற்றிய போலீஸார் அதனை பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பிவைத்தனர். அவருடைய உறவினர்களுக்கு தகவல் கொடுக்கப்பட்டது. இந்த சம்பவம் குறித்து போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.


தற்கொலை எந்தப் பிரச்சனைக்கும் தீர்வாகாது. தற்கொலை எண்ணம் மேலோங்கினால் நண்பர்கள், நம்பிக்கைக்குரியவர்களிடம் மனம் விட்டு பேச வேண்டும். தமிழகத்தில் 104 என்ற கட்டணமில்லை தொலைபேசி சேவையைப் பயன்படுத்தி தற்கொலை எண்ணம் உள்ளவர்கள் ஆலோசனை பெறலாம்.


தற்கொலைகள்.. திடுக் புள்ளிவிவரம்:


தேசிய குற்ற ஆவணக் காப்பகத்தின் சமீபத்திய அறிக்கையின்படி, நாடு முழுவதும் 2021ஆம் ஆண்டில் மொத்தம் 1,64,033 பேர் தற்கொலை செய்துகொண்டுள்ளனர். அதில் 1,18,979 பேர் ஆண்கள். 2021ஆம் ஆண்டில் மொத்தம் 45,026 பெண்கள் தற்கொலை செய்துகொண்டுள்ளனர். அதில் பாதிக்கும் மேற்பட்டவர்கள் இல்லத்தரசிகள்(23,178 பேர்) ஆவர். தற்கொலை செய்துகொண்டவர்களில் மாணவிகள்(5,693 பேர்) மற்றும் தினசரி ஊதியம் பெறும் பணியாளர்கள்(4,246 பேர்) ஆகியோர் அடங்குவர். அதிலும், பெரும்பாலான இல்லத்தரசிகள் தற்கொலைகள் தமிழ்நாட்டில் பதிவாகியுள்ளது(3,221 பேர்) என்ற தகவல் அதிர்ச்சியை கிளப்பியுள்ளது. தமிழ்நாட்டை தொடர்ந்து அடுத்தடுத்த இடங்களில் மத்தியப் பிரதேசம்(3,055 பேர்) மற்றும் மராட்டியம்(2,861 பேர்) ஆகிய மாநிலங்கள் உள்ளன. 2021 ஆம் ஆண்டில் பதிவான மொத்த தற்கொலைகளில் 13.9 சதவீதம் தமிழ்நாட்டில் பதிவாகியுள்ளது, 13.2 சதவீதம் மத்தியப் பிரதேசம் மற்றும் 12.3 சதவீதம் மராட்டியத்தில் பதிவாகியுள்ளது.


தற்கொலை செய்து கொண்டவர்களில் 66.9 சதவீதம் பேர் (1,64,033 பேரில் 1,09,749 பேர்) திருமணமானவர்கள் என்பதும் 24.0 சதவீதம் பேர் திருமணமாகாதவர்கள் (39,421 பேர்) ஆவர். 2021 ஆம் ஆண்டில் மொத்த தற்கொலை செய்துகொண்டவர்களில் விதவை 1.5 சதவீதம் (2,485 பேர்), விவாகரத்து பெற்றவர்கள் 0.5 சதவீதம் (788 பேர்) மற்றும் பிரிந்து தனியே வாழ்ந்தவர்கள் 0.5 சதவீதம் (871 பேர்) ஆவர். பெரும்பாலும், பாதிக்கப்பட்ட பெண்கள் தற்கொலை செய்துகொள்ள காரணம் - திருமணம் தொடர்பான பிரச்சினைகள் (குறிப்பாக வரதட்சணை தொடர்பான பிரச்சினைகள்) மற்றும் கருவுறுதல் பிரச்சினை மற்றும் கர்ப்பம் தரிக்காமல் இருத்தல் ஆகியவற்றின் காரணமாகவே அதிகமான பெண்கள் தற்கொலை செய்துகொண்டுள்ளனர். தற்கொலை செய்துகொண்டவர்களில், 18 - 30 வயதுக்குட்பட்டவர்கள்( 34.5 சதவீதம் பேர்) மற்றும் 30 - 45 வயதுக்குட்பட்டவர்கள்(31.7 சதவீதம் பேர்) ஆவர்.