நீங்கள் ரயிலில் அதிகம் பயணம் செய்யும் நபரா..? பயணத்தின்போது விதவிதமான உணவுகளை உட்கொள்ள ஆசையா..? இதோ உங்களுக்காக வாட்ஸ் ஆப் மூலம் உணவு ஆர்டர் செய்யும் வசதியை இந்திய ரயில்வே அறிமுகம் செய்துள்ளது. 


இந்திய ரயில்வேயின் பொதுத்துறை நிறுவனம், இந்திய ரயில்வே கேட்டரிங் மற்றும் டூரிசம் கார்ப்பரேஷன் லிமிடெட் நேற்று வாட்ஸ் ஆப் மூலம் பயணிகளுக்கு இ- கேட்டரிங் சேவைகளை அறிமுகப்படுத்தியது. 


இதுகுறித்து ரயில்வே அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில், “"இ-கேட்டரிங் சேவைகளை வாடிக்கையாளர் மையமாக மாற்றும் நோக்கில், இந்திய ரயில்வே சமீபத்தில் இ-கேட்டரிங் சேவைகள் மூலம் உணவை ஆர்டர் செய்ய ரயில்வே பயணிகளுக்கு வாட்ஸ்அப் தொடர்பைத் தொடங்கியுள்ளது. இதற்காக வணிக வாட்ஸ்அப் எண் +91-8750001323 தொடங்கப்பட்டுள்ளது” என தெரிவித்தது. ரயில்வே தனது செய்திக்குறிப்பில், பயணிகள் பயணம் செய்யும் போது வாட்ஸ்அப் மூலம் உணவை எவ்வாறு ஆர்டர் செய்யலாம் என்பது குறித்த செயல்முறையை விளக்கியது.


1. டிக்கெட்டை முன்பதிவு செய்யும் போது, ​​www.ecatering.irctc.co.in என்ற இணைப்பைக் கிளிக் செய்வதன் மூலம் இ-கேட்டரிங் சேவைகளைத் தேர்ந்தெடுப்பதற்கான வணிக வாட்ஸ்அப் எண்ணிலிருந்து வாடிக்கையாளருக்கு ஒரு செய்தி அனுப்பப்படும் .


2. வாடிக்கையாளர்கள் இணையதளத்தில் இருந்து நேரடியாக ரயில் நிலையங்களில் உள்ள தங்களுக்கு விருப்பமான உணவகங்களில் இருந்து உணவை முன்பதிவு செய்யலாம்.


3. இதற்குப் பிறகு, வாட்ஸ்அப் எண் இரு வழி தொடர்பு தளமாக இயக்கப்படும். AI பவர் சாட்போட் பயணிகளுக்கான இ-கேட்டரிங் சேவைகளின் அனைத்து விசாரணைகளை மேற்கொள்ளும்.


ஐஆர்சிடிசியின் இ-கேட்டரிங் சேவைகள் மூலம் வாடிக்கையாளர்களுக்கு ஒரு நாளைக்கு சுமார் 50,000 உணவுகள் வழங்கப்படுவதாக ரயில்வே தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.


கடந்த ஆண்டு, ரயிலில் பயணிகளுக்கு உணவை வழங்குவதற்காக ஆன்லைன் தளமான Zoop India வாட்ஸ்அப் சாட்பாட் உடன் ஜியோ ஹாப்டிக் டெக்னாலஜிஸ் லிமிடெட் உடன் சேர்ந்து செயல்படுகிறது. 


பயணிகள் தங்கள் PNR எண்கள் மூலம் வாட்ஸ்அப் அடிப்படையிலான சுய சேவை உணவு விநியோக தளத்தைப் பயன்படுத்தி உணவு ஆர்டர்களை கொடுக்கலாம்.  தற்போது எங்கே ஆர்டர் உள்ளது என்ற கண்காணிப்பு, கருத்து மற்றும் ஆதரவுடன் தங்கள் இடங்களுக்கு நேராக டெலிவரி செய்யவோம் என்று அந்த நிறுவனம் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.