நாட்டுப்புற கலைத்துறையில் சிறந்த முறையில் பங்களித்ததற்காக  இந்தியாவின் மிகவும் உயரிய விருதுகளில் ஒன்றான பத்ம  ஸ்ரீ விருதினை  மஞ்சம்மா ஜோகதி நேற்று பெற்றார்.

  


விருதை வாங்கும் போது இந்தியக் குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்துக்கு தனக்கே உரிய பாணியில் ஆசி வழங்கிய வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.   



பால்புதுமையினரான இவர், வடகன்னட மாவட்டத்தின் நாட்டுப்புற நடன வடிவமான "ஜோக்தி நிருத்யா" (Jogti Nritya) பாடகியும் நடனக் கலைஞருமாவார். இவரின் வாழ்க்கை கதை கர்நாடக நாட்டுப்புற பல்கலைக்கழகம் மற்றும் கர்நாடக மாநில மகளிர் பல்கலைக்கழக பாடத்திட்டங்களில் அதன் இளங்கலை மாணவர்களுக்காக சேர்க்கப்பட்டுள்ளது. 


இளம்வயதில் கையேந்தும் நிலைக்குத் தள்ளப்பட்டவர்:


கருநாடகவின் பெல்லாரி மாவட்டத்தின் கல்லுகம்பா கிராமத்தில் அனுமந்தையா மற்றும் ஜெயலட்சுமிக்கும் மஞ்சுநாத ஷெட்டியாக பிறந்தார். தனது பதினாறு வயதில் பெண்களைப் போன்ற நடத்தைக்காக, குடும்பத்தினர் இவரை ஹோஸ்பேட்டிற்கு அருகிலுள்ள ஹுலிகெம்மா கோவிலுக்கு அழைத்துச் சென்று "ஜோகப்பா" என்று புனிதப்படுத்தினர். இது ஒரு சடங்காகும். இதில் பக்தர்கள் தங்களை கடவுளை மணப்பதாக நம்புகிறார்கள். இந்த   இதன் பிறகு ஷெட்டி பெண் அடையாளத்துடன் மஞ்சம்மா ஜோகதி என்று அறியப்பட்டார். அதன் பிறகு, அவர் தனது சொந்த வீட்டில் இருந்தும் வெளியேற்றப்பட்டார்.     


வெறுப்பு, பசி, வறுமை போன்ற அச்சுறுத்தல்களை எதிர்கொண்ட அவர், புடவைக் கட்டிக்கொண்டு தெருக்களில் பிச்சை எடுக்க ஆரம்பித்திருக்கிறார்.


அப்போது, எதிர்பாராதவிதமாக, பேருந்து நிலையம் ஒன்றி 'ஜோக்தி நிருத்யா'  கலையில் ஆர்வம் கொண்ட  தந்தை-மகன் என இரண்டுபேர் மஞ்சம்மாவுக்கு தங்கள் குழுவில் சேர்த்தனர். இது, மஞ்சம்மாவின் வாழ்கையில் மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்தது.   குழுவின் உறுப்பினர்களில் ஒருவர் காலவ்வா என்பவரின் ஜோகதி நடனக் குழுவிற்கு (Kallava Jogathi ) மஞ்சம்மாவை அறிமுகப்படுத்தினார். 


மஞ்சம்மா, காலவ்வாவின் ஜோகதி நடனக் குழுவில் நிரந்தர நடனக் கலைஞரானார். இது மாநிலம் முழுவதும் நடன நிகழ்ச்சிகளை நிகழ்த்தியது. காலவ்வாவின் மரணத்திற்குப் பிறகு, இவர் குழுவின் பொறுப்பை எடுத்துக் கொண்டார். மேலும், நடனத்தை மக்கள் மத்தியில் பிரபலமாக்கினார். ஒரு கலைஞராக, 2010 இல், மஞ்சம்மா கர்நாடக அரசிடமிருந்து இராஜ்யோத்சவ விருதைப் பெற்றார். தர்போது, மத்திய அரசு அவருக்கு நாட்டின் உயரிய விருதுகளில் ஒன்றான பத்மா ஸ்ரீ விருதினை அளித்துள்ளது. 


இதற்கு, பல்வேறு தரப்பினரும் தங்கள் மகிழ்ச்சியைத் தெரிவித்து வருகின்றனர்.இருப்பினும், இத்தகைய உணர்சிக்குறிப்பை (Gestures) அவர்  தவிர்த்திருக்கலாம் என்றும் சிலர் கருத்து தெரிவிக்கின்றனர்.