புல் தடுக்கி உயிரிழந்தவர்களும் உண்டு. புல்டோசரில் சிக்கி பிழைத்தோரும் உண்டு. அப்படியொரு சம்பவம் தான் இதுவும். மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் போவாய் எனும் பகுதியில் முதியவர் ஒருவர் சாலையைக் கடக்க முற்படுகிறார். அப்போது அவர் மீது மிகப்பெரிய சொகுசுப் பேருந்து ஒன்று மோதுகிறது. பேருந்து வேகமாக வரவில்லை ஏதோ ஸ்பீட் பிரேக்கரில் ஏறி இறங்குவதால் மிகவும் மெதுவாக அது ஊர்கிறது. அப்போது எதிர்பாராமல் அந்த முதியவர் சாலையைக் கடக்கிறார். பேருந்து ஓட்டுநரோ பேருந்தை நிறுத்த முற்படுகிறார். அதற்குள் அந்த முதியவர் பேருந்தில் சிக்குகிறார். அவர் நிலைகுலைந்து கீழே விழ வெளியே இருந்த எல்லோரும் கத்த ஓட்டுநர் பிரேக் போட முதியவர் பெருத்த சேதம் இல்லாமல் தப்பிக் கொள்கிறார்.


இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.







சாலை விபத்து.. சில புள்ளிவிபரம்:


தேசிய குற்ற ஆவணக் காப்பகம் (என்சிஆர்பி) 2021 அறிக்கை அண்மையில் வெளியானது. அதன்படி நாட்டில் 2021ல் நடந்த 4.22 லட்சம் சாலை விபத்துகளில் 1.73 லட்ச உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. இதில் அதிகபட்சமாக உத்தரப் பிரதேசத்தில் 24,711 பேர் இறந்துள்ளனர். அடுத்தபடியாக தமிழகத்தில் 16,685 பேர் உயிரிழந்துள்ளனர். அதேபோல் 2020ல் 3,68,828 ஆக இருந்த சாலை விபத்துகள் 2021ல் 4,22,659 ஆக அதிகரித்துள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


2021ல் மொத்தம் நடந்த 4,22,659 விபத்துகளில் 4,03,116 விபத்துகள் சாலையிலும், 17,933 ரயில் விபத்துகளாகவும், 1,550 விபத்துகள் ரயில் தண்டவாளம் கடக்கும் போதும் நடந்துள்ளன. இவற்றில் முறையே சாலையில் 1,55,622 உயிரிழப்புகளும், ரயில் விபத்துகள் 16,431 ஆகவும், தண்டவாள விபத்துகள் 1807 ஆகவும் உள்ளன.


2020-ஐ விட 2021-ல் அதிகம்: 2020-ஐ விட 2021-ல் மிக அதிகமாக சாலை விபத்துகள் பதிவான மாநிலங்களில் தமிழகம் முதலிடத்தில் உள்ளது. தமிழகத்தில் கடந்த 2021ஆம் ஆண்டில் 57,090 சாலை விபத்துகளும், மத்தியப் பிரதேசத்தில் 49,493 விபத்துகளும், உத்தரப் பிரதேசத்தில் 36,509 விபத்துகளும், மகாராஷ்டிராவில் 30,086 விபத்துகளும், கேரளாவில் 33,501 விபத்துகளும் நடந்துள்ளன.மிசோரம், பஞ்சாப், ஜார்க்கண்ட், உத்தரப் பிரதேச மாநிலங்களில் சாலை விபத்துகளில் உயிரிழப்பு அதிகமாக ஏற்படுகிறது.


இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.