மீண்டும் 1000 நோட்டுகளா..?


நாட்டில் வரும் ஜனவரி,1-ஆம் தேதி முதல் ஆயிரம் ரூபாய் பண நோட்டு பொதுமக்கள் பயன்பாட்டிற்கு வர இருப்பதாக சமூக வலைதளங்களில் வெளியான தகவல் வதந்தி என்று பத்திரிகை தகவல் அலுவலகம் (press bureau of india) தெரிவித்துள்ளது. 


சமூக வலைதளங்களில் ஆயிரம் ரூபாய் நோட்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவர பட உள்ளதாகவும், இரண்டாயிரம் ரூபாய் நோட்டுகளை தடை செய்ய மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக தகவல் வைரல் ஆனது. 2018-2019 ஆம் ஆண்டிற்கு பிறகு புதிய ரூ.2000 நோட்களை அச்சடிக்க முடிவெடுக்கப்படவில்லை என்று மத்திய அரசு தெரிவித்ததற்கு பிறகு ரூ.1000 மற்றும் ரூ.2000 நோட்கள் பற்றிய செய்திகள் அதிகமாக பகிரப்பட்டன. 


வதந்தி:


இதை கவனித்த பத்திரிகை தகவல் அலுவலகத்தின் (PIB Fact Check) ‘உண்மை கண்டறியும்’ பிரிவு, “சமூக வலைதளங்களில் வெளியான தகவல் உண்மையில்லை. உறுதிப்படுத்தப்படாதா, தவறான தகவல்களை யாரும் பகிர வேண்டாம்.” என்று தெரிவித்திருந்தது.


மேலும், இரண்டாயிரம் ரூபாய் நோட்டுகளை தடை செய்யும் திட்டம் மத்திய அரசிடம் இல்லை என்றும் டிவிட்டர் பதிவில் தெரிவித்திருந்தது. 





2019-இல் இருந்து புதிய நோட்டுகள் அச்சிடப்படவில்லை:


ரிசர்வ் வங்கி தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் பெறப்பட்ட தரவுகளின் படி, கடந்த 2019 ஆம் ஆண்டு முதல் 2022 ஆம் ஆண்டுவரை புதிதாக இரண்டாயிரம் ரூபாய் நோட்டுகளை அச்சிடவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.  கடந்த 2016 ஆம் ஆண்டு நவம்பர் 8 - ஆம் தேதி மத்திய அரசு பண மதிப்பு இழப்பை அறிவித்த பிறகு, ரூ.500 மற்றும் ரூ.1000 நோட்டுகள் தடை செய்யப்பட்டு, இரண்டாயிரம் ரூபாய் பணம் மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவரப்பட்டது குறிப்பிடத்தக்கது. 


இந்தாண்டு ஆகஸ்ட் மாதம் நடைபெற்ற நாடாளுமன்ற கூட்டத் தொடரில், கடந்த 2016 ஆம் ஆண்டில் இருந்து 2020 வரை இரண்டாயிரம் ரூபாய் போலி பணத்தின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டது. 2016-இல் 2,272 ஆக இருந்தது 2020-இல் 2,44,834 ஆக அதிகரித்துள்ளது.


ரூ. 2000 நோட்டு புழக்கம் குறைந்தது:


கடந்த 2020 ஆம் ஆண்டு மார்ச் நிலவரப்படி, 2,000 ரூபாய்  கரன்சி நோட்டுகளின் புழக்கம், 274 கோடியாக இருந்தது. இது, 2021 மார்ச்சில், 245 கோடியாகவும், 2022 மார்ச்சில், 214 கோடியாகவும் குறைந்துள்ளதாக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.  கடந்த நான்கு ஆண்டுகளாக  2000 ரூபாய் நோட்டுகளை புதிதாக ரிசர்வ் வங்கி அச்சடிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. ஊழல், கருப்புப்பண புழக்கத்தை குறைக்கும் நோக்கத்தில் உயர் மதிப்புமிக்க ரூ.2000 நோட்டுக்களை புதிதாக அச்சடிப்பதை நிறுத்துவதாக கடந்த 2019 ஆம் ஆண்டில் ரிசர்வ் வங்கி அறிவித்தது.