மகாராஷ்டிராவின் தானே மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை அன்று சாலையில் இருந்த பள்ளங்களால் மோட்டார் சைக்கிள் ஓட்டிநர் கட்டுபாட்டை இழந்து டிரக் மீது மோதினார். திவா-ஆகாசன் சாலையில் நடந்த இந்த சம்பவம் பாதுகாப்பு கேமராவில் பதிவாகியுள்ளது.






தானே முனிசிபல் கார்ப்பரேஷன் பிராந்திய பேரிடர் மேலாண்மை பிரிவு தலைவர் அவினாஷ் சாவந்த் வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பின்படி, உயரிழந்தவர் கணேஷ் ஃபலே என அடையாளம் காணப்பட்டுள்ளார். 


மோட்டார் சைக்கிளில் வந்த நபர் கட்டுப்பாட்டை இழந்து வாகனத்தின் பின் சக்கரங்களுக்கு அடியில் விழுந்தார். அப்போது, எதிர் திசையில் இருந்து வந்த டேங்கர் டிரக்கை கடக்கும் போது இந்த விபத்து நடந்தது. இதைக் கண்டு பீதியடைந்த ஒருவர் கையை உயர்த்தி லாரியை நிறுத்தினார்.


பாதிக்கப்பட்டவர் கல்வா சிவில் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவர் இறந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டார் என சாவந்த் தெரிவித்தார். அவரது உடல் பிரேத பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளது. வழக்குப் பதிவு செய்யப்பட்டு, மேலும் விசாரணை நடந்து வருகிறது.






இந்தக் காட்சிகளைப் பகிர்ந்துள்ள மகாராஷ்டிர நவநிர்மாண் சேனா (எம்என்எஸ்) எம்எல்ஏ ராஜு பாட்டீல் தனது ட்வீட்டில், சாலையில் இருந்த குழியால் அந்த நபர் இறந்ததாகக பதிவிட்டுள்ளார். அவர் தனது பதிவில் மகாராஷ்டிர முதலமைச்சர் ஏக்நாத் ஷிண்டேவை டேக் செய்துள்ளார். மேற்கொள்ளும் சாலைப்பணிகள் ஏட்டளவில் மட்டுமே அறிவிக்கப்படுகின்றன என்றும் ஆனால் அவை உண்மையில் நடைமுறைப்படுத்தப்படவில்லை என்றும் குற்றம் சாட்டினார்.