விக்டோரியா கவுரிக்கு எதிரான வழக்கு இன்று உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வரும் நிலையில், காலை 10.35 மணிக்கு அவர் சென்னை உயர்நீதிமன்றத்தின் கூடுதல் நீதிபதியாக பொறுப்பேற்கிறார். 


இந்தியாவின் சட்டத்துறை அமைச்சராக பொறுப்பு வகிப்பவர் கிரண் ரிஜ்ஜூ. இந்த நிலையில், இவர் தனது ட்விட்டர் பக்கத்தில் முக்கியமான அறிவிப்பு ஒன்றை அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளார். அதாவது, நாட்டின் மூத்த வழக்கறிஞர்கள்  கூடுதல் நீதிபதிகளாக நியமிக்கப்பட்டுள்ளனர். மொத்தம் 13 பேர் நீதிபதிகளாக நியமிக்கப்பட்டுள்ளனர்.


இவர்கள் நாட்டின் முக்கியமான உயர்நீதிமன்றங்களான அலகாபாத் நீதிமன்றம், கர்நாடகா நீதிமன்றம் மற்றும் சென்னை உயர்நீதிமன்றத்தின் நீதிபதிகளாக நியமிக்கப்பட்டுள்ளனர்


சென்னை உயர்நீதிமன்றத்தின் கூடுதல் நீதிபதியாக லட்சுமணா சந்திரா விக்டோரியா கவுரி, வழக்கறிஞர் பிள்ளைபாக்கம் பாகுகுடும்பி பாலாஜி, வழக்கறிஞர் கந்தசாமி குழந்தைவேலு ராமச்சந்திரன், ஜூடிசியல் ஆபீசர் கலைமதி ராமச்சந்திரன், ஜூடிசியல் ஆபீசர் திலகவதி ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.


இவர்களில் விக்டோரியா கவுரி தற்போது மதுரையில் உள்ள சென்னை உயர் நீதிமன்றத்தின் பெஞ்ச்சில் உதவி சொலிசிட்டர் ஜெனரலாக உள்ளார். 2020 செப்டம்பரில் அவர் பதவியேற்பதற்கு சுமார் மூன்று மாதங்களுக்கு முன்பு, பா.ஜ.க.,வின் அனைத்து பதவிகளிலிருந்தும், கட்சி உறுப்பினர் பதவியிலிருந்தும் ராஜினாமா செய்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர் நீதிபதியாக நியமிக்கப்படுவதற்கு ஏற்கனவே கடும் எதிர்ப்புகள் இருந்து வந்த நிலையில், அவர் நேற்று அதிகாரப்பூர்வமாக கூடுதல் நீதிபதியாக நியமிக்கப்பட்டுள்ளார். அவரது நியமனம் தற்போது மீண்டும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கொலிஜியம் அமைப்பு இவரது பெயரை பரிந்துரை செய்தது முதலே சர்ச்சை வெடித்து வந்தது. விக்டோரியா கவுரி பா.ஜ.க. தேசிய மகளிரணி செயலாளராக பொறுப்பு வகித்தவர் என்றும், அவரை நீதிபதியாக நியமிக்கக்கூடாது என்று சென்னை உயர்நீதிமன்ற மூத்த வழக்கறிஞர்கள் உள்பட பலரும் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். விக்டோரியா கவுரி பா.ஜ.கவில் இருந்த போது இஸ்லாம் மற்றும் கிறித்துவ மதம் குறித்து சர்ச்சைக்குரிய கருத்துக்களை தெரிவித்தார். இதன் பேரில், “வெறுக்கத்தக்க பேச்சு” தொடர்பாக ஐ.பி.சி.,யின் 153A, 153B, 295A மற்றும் 505 பிரிவுகளின் கீழ் விக்டோரியா கௌரி மீது நடவடிக்கை எடுக்குமாறு வழக்கறிஞர்கள் கோரினர்.






விக்டோரியா கவுரியை நீதிபதியாக நியமிப்பதற்கு எதிரான மனுவை உச்சநீதிமன்றம் இன்று விசாரிக்க இருக்கும் நிலையில் நேற்று அவரை கூடுதல் நீதிபதியாக நியமித்து அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அவர் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதியாக நியமனம் செய்யப்பட்டதற்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கு இன்று நீதிபதிகள் சஞ்சீவ் கண்ணா, எம்.எம். சுந்தரேஷ் அமர்வுக்கு முன் விசாரணைக்கு வருகிறது. வழக்கு விசாரணை வரும் நிலையில் இன்று காலை 10.35 மணிக்கு விக்டோரியா கவுரிக்கு தலைமை நீதிபதி பதிவிப்பிரமாணம் செய்து வைப்பார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.