உடல் நலக் குறைபாடு காரணமாக பாஜகவின் மூத்த தலைவரும் முன்னாள் துணை பிரதமருமான எல்.கே. அத்வானி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளார்.


டெல்லியில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் டாக்டர் வினித் சூரியின் கண்காணிப்பில் அத்வானி இன்று அனுமதிக்கப்பட்டார். அவரது உடல்நிலை சீராக இருப்பதாக மருத்துவமனை அறிக்கை வெளியிட்டிருந்தது. இதையடுத்து, இன்றே டிஸ்சார்ஜ் செய்யப்பட்டிருக்கிறார்.


ஒரே வாரத்தில் இரண்டு முறை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதால் அவரது உடல்நலம் தொடர்பாக பல்வேறு வதந்திகள் பரவி வருகின்றன. முன்னதாக, கடந்த வாரம், டெல்லியில் உள்ள அகில இந்திய மருத்துவ அறிவியல் கழகத்தில் (எய்ம்ஸ்) அவர் அனுமதிக்கப்பட்டார். சிறுநீரகவியல் பிரிவில் சிகிச்சை பெற்று வந்த அத்வானி, ஜூன் 27 மதியம் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார்.


யார் இந்த அத்வானி? அயோத்தி ராமர் கோயில் இயக்கத்தை வழிநடத்திய தீவிர இந்துத்துவவாதியான இவருக்கு, இந்தியாவின் உயரிய விருதான பாரத ரத்னா விருது கடந்த மார்ச் மாதம் வழங்கப்பட்டது. குடியரசு தலைவர் திரவுபதி முர்மு, அத்வானியின் இல்லத்திற்கே சென்று விருது வழங்கி கவுரவித்தார்.  


விழாவில் துணை குடியரசு தலைவர் ஜகதீப் தன்கர், பிரதமர் நரேந்திர மோடி, பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங், உள்துறை அமைச்சர் அமித் ஷா மற்றும் அத்வானியின் குடும்பத்தினர் கலந்து கொண்டனர். இந்த ஆண்டு ஜனவரி மாதம் நடைபெற்ற ராமர் கோயில் திறப்பு விழாவில் வயது முதிர்வு காரணமாக பாஜக மூத்த தலைவர் அத்வானி கலந்து கொள்ளவில்லை.



பாஜக துவங்கியதில் இருந்து, அதிக காலம் தலைவராக பதவி வகித்தவர் அத்வானி. அடல் பிஹாரி வாஜ்பாயை தொடர்ந்து, 1986ஆம் ஆண்டு, பாஜக தலைவராக நியமிக்கப்பட்டார். கடந்த 1990 வரை, அந்த பதவியில் தொடர்ந்தார்.


கடந்த 2002ஆம் ஆண்டு முதல் 2004ஆம் ஆண்டு வரை, வாஜ்பாய் அமைச்சரவையில் துணை பிரதமராக பதவி வகித்தார். மொரார்ஜி தேசாய் அமைச்சரவையில் தகவல் மற்றும் ஒலிபரப்புத்துறை அமைச்சராகவும் வாஜ்பாய் அமைச்சரவையில் உள்துறை அமைச்சராகவும் பதவி வகித்தார்.


காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணியின் முதல் ஆட்சிக் காலத்தில் மன்மோகன் சிங் பிரதமராக இருந்தபோது எதிர்க்கட்சித் தலைவராக பொறுப்பு வகித்தார்.