மத்திய ரயில்வே இணையமைச்சர் தர்ஷனா விக்ரம் ஜர்தோஷ், கரூர் ரயில் நிலையத்தில் இன்று ஆய்வு செய்தார்.


அப்போது அங்குள்ள பயணிகள் ஓய்வறை மற்றும் கட்டுப்பாட்டு அறை உள்ளிட்டவைகளைப் பார்வையிட்டு, அதன் செயல்பாடுகள் குறித்துக் கேட்டறிந்தார்.


75 வந்தே பாரத் ரயில்கள்:


கரூரில் ஏற்றுமதியாளர் சங்கம், கரூர் நெசவு-பின்னலாடை உரிமையாளர்கள் சங்க நிர்வாகிகளுடனான ஆலோசனை கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தில் மத்திய ரயில்வே இணையமைச்சர் தர்ஷனா விக்ரம் ஜர்தோஷ் கலந்து கொண்டார்.


'ஹோம் டெக்ஸ்டைல்ஸ்' நிறுவனத்தின் உலகளாவிய உற்பத்தி மையமாக கரூர் திகழ்வதன் மூலம் 'மேக் இன் இந்தியா'வுக்கு பெருமை சேர்க்கிறது என தர்ஷனா விக்ரம் ஜர்தோஷ் தெரிவித்தார்.






பின்னர் செய்தியாளர்களிடம் பேசுகையில், இந்தியா முழுவதும் 12 வந்தே பாரத் ரயில்கள் தற்போது இயக்கப்படு வருவதாகவும், விரைவில் 75 வந்தே பாரத் ரயில்களை நாடு முழுவதும் இயக்க திட்டமிட்டு வருவதாகவும் தெரிவித்தார்.


ரயில் பயணிகளுக்கு உதவும் வகையில் மும்பை ஐஐடி மாணவர்கள் செயலி ஒன்றை வடிவமைத்துள்ளதாக கூறினார். மேலும் அம்ரித் பாரத் திட்டத்தின் மூலம் 75 ரயில் நிலையங்கள் மேம்படுத்தப்பட உள்ளதாக கூறினார்.






மூத்த குடிமக்களுக்கான ரயில்வே கட்டணச் சலுகை:


மேலும், ரயில்வே துறையில் வளர்ச்சிப் பணிகள் அதிகளவில் செயல்படுத்தப்பட்டு வருவதாகக் கூறிய அவர், கொரோனாவிற்குப் பிறகு நிறுத்தப்பட்ட மூத்தக் குடிமக்களுக்கான ரயில்வே கட்டணச் சலுகை குறித்து பரிசீலிக்கப்படும் என தெரிவித்தார். மேலும்,


கரூரிலிருந்து சென்னைக்கு பகல் நேரத்தில் ரயில்கள் இயக்கம் குறித்துப் பரிசீலிக்கப்படும் என மத்திய அமைச்சர் தெரிவித்தார்.