உத்தரப்பிரதேசத்தில் கோயில்கள் அருகே பல அடுக்குகள் கொண்ட கட்டடங்கள் கட்டக்கூடாது என அம்மாநில முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் உத்தரவிட்டுள்ளார். 


உத்தரப்பிரதேசத்தில் யோகி ஆதித்யநாத் தலைமையிலான பாஜக அரசு அமைந்துள்ளது. இந்தியாவின் 2வது மிகப்பெரிய மாநிலமாக இருக்கும் உத்தரப் பிரதேசத்தில் ஏராளமான வழிபாட்டு தலங்கள் உள்ளது. அதேசமயம் முதலமைச்சர் யோகி ஆதித்யநாத்தும் மத வழிபாடுகளில் மிகுந்த நம்பிக்கை கொண்டவர். இப்படியான நிலையில் அவர்உத்தரப்பிரதேச மாநிலத்தில் கோயில்கள் அருகே உயரமான கட்டடங்கள் கட்டக்கூடாது என உத்தரவிட்டுள்ளார். 


நேற்று நடந்த அலுவல் ஆய்வு கூட்டத்தில் உத்தரப்பிரதேசத்தில் உள்ள வழிபாட்டு தலங்கள் நிறைந்த இடங்களான கோரக்பூர், வாரணாசி, மதுரா பிருந்தாவன் ஆகிய இடங்களில் திட்டமிடப்பட்ட வளர்ச்சிக்காக தயாரிக்கப்பட்ட மாஸ்டர் பிளான் 2031ஐ திட்ட அறிக்கையை மதிப்பாய்வு செய்த முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் தேவையான வழிகாட்டுதல்களை வழங்கினார். அப்போது பேசிய அவர், “உத்தரப்பிரதேசத்தில் பழமையான மற்றும் வரலாற்று சின்னங்களின் பெருமையை பசைசாற்றும் வகையில் கோயில்கள் மற்றும் வரலாற்று இடங்கள் அருகில் உயரமான கட்டடங்கள் கட்ட அனுமதி வழங்கக்கூடாது.


மேலும், இந்த வழிபாட்டு தலங்கள் நிறைந்த நகரங்களில் சுற்றுச்சூழலை மேம்படுத்தும் வகையில் மின்சார பேருந்துகளுக்கு முன்னுரிமை கொடுக்க வேண்டும். வழக்கமான செயல்பாட்டில் உள்ள டீசல் பேருந்துகளை நகரத்துக்கு வெளியே செயல்பாட்டில் வைக்க வேண்டும். அதேசமயம் பன்னடுக்கு  வாகன நிறுத்தம் அமைக்க தேவையான இடங்களை கண்டறிய வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார். 


மேலும் மாநிலத்தின் ஒவ்வொரு நகரத்துக்கும் ஜிஐஎஸ் அடிப்படையிலான 2023 திட்ட அறிக்கையின் படி கணிசமான அளவில் முதலீடு கிடைத்துள்ளது. இதனைக் கொண்டு அந்நகரங்களில் மருத்துவம், கல்வி, விளையாட்டு உள்ளிட்ட முக்கிய வசதிகளை ஏற்படுத்தி கொடுக்க வேண்டும். அதேபோல் பசுமை மண்டலம் அமைய உள்ள எந்த இடங்களிலும் புதிய குடியிருப்புகள் அமைக்கக்கூடாது. மாநிலத்தின் பொருளாதாரத்தை 1 டிரில்லியன் அளவுக்கு உயர்த்துவதில் வீட்டு வசதி துறைக்கு கணிசமான பங்கு உள்ளது. சட்டவிரோத குடியிருப்புகள் அமைக்கப்படவில்லை என்பதை அதிகாரிகள் உறுதி செய்ய வேண்டும்.  


உத்தரப்பிரதேசத்தில் வளர்ச்சியடைந்த பகுதியின் மக்கள் தொகை 14 லட்சமாக உள்ளது. அடுத்த 10 ஆண்டுகளில் இந்த எண்ணிக்கையை 25 லட்சமாகவும், 2047 ஆம் ஆண்டில் 50 லட்சமாகவும் அதிகரிக்க வேண்டும் எனவும் முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் கூறியுள்ளார். மேலும் பொருளாதார இலக்கை அடைய சிறு, குறு, நடுத்தர தொழில்களை ஊக்குவிக்க வேண்டும்”என அவர் தெரிவித்துள்ளார்.