இந்தி தினத்தை முன்னிட்டு நாட்டு மக்களுக்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா வாழ்த்து தெரிவித்துள்ளார். இந்தி தினம் குறித்த தமது செய்தியில், "கடந்த 1949ஆம் ஆண்டு இதேநாளில் , இந்திய அரசியல் நிர்ணய

  சபை இந்தியை நாட்டின் அலுவல்  மொழியாக ஏற்றுக்கொண்டது.


"ஒவ்வொரு மொழியும் இந்தியை வலுப்படுத்துகிறது"


75 ஆண்டுகள் நிறைவடைந்த நிலையில்,  இந்த ஆண்டு நாம் ஆட்சி மொழியின் வைர விழாவைக் கொண்டாட உள்ளோம். இந்த 75 ஆண்டுகாலப் பயணம்,  இந்தி மற்றும் அனைத்து மாநிலங்களின் அந்தந்த மொழிகளுக்கும் மிகவும் முக்கியமானது.


இந்தி பல ஏற்ற தாழ்வுகளைக் கண்டுள்ளது. ஆனால், இன்று இந்தக் கட்டத்தில் நிற்கும்போது, இந்தி எந்த உள்ளூர் மொழியுடனும் போட்டியிடவில்லை என்று உறுதியாகக் கூற முடியும்" என்றார்.


இந்தி அனைத்து இந்திய மொழிகளுக்கும் நட்பு மொழி  என்றும், குஜராத்தி, மராத்தி, தெலுங்கு, மலையாளம், தமிழ் அல்லது வங்காளமாக இருந்தாலும், ஒவ்வொரு மொழியும் இந்தியை வலுப்படுத்துகிறது என்றும், இந்தி ஒவ்வொரு மொழியையும் வலுப்படுத்துகிறது என்றும் அவர் கூறினார்.


இந்தி இயக்கத்தை நாம் கவனமாகப் பார்த்தால், அது ராஜகோபாலாச்சாரி, மகாத்மா காந்தி, சர்தார் வல்லபாய் படேல், லாலா லஜபதி ராய், நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் அல்லது ஆச்சார்யா கிருபளானி என அனைவருமே இந்தி பேசாத பகுதிகளைச் சேர்ந்தவர்கள் என்று மத்திய உள்துறை அமைச்சர் கூறினார்.


அமித் ஷா கூறியது என்ன?


ஐயங்கார் மற்றும் கே.எம். முன்ஷி ஆகியோரின் தலைமையில் அமைக்கப்பட்ட குழு, இந்தியை அலுவல்  மொழியாக அங்கீகரிப்பதற்கும், இந்தி மற்றும் நமது பிற அனைத்து மொழிகளுக்கும் வலு சேர்ப்பதற்கும் அரசியல் நிர்ணய சபையிடம் ஒரு அறிக்கையை சமர்ப்பித்தது என்று அவர் கூறினார். இந்த இரு தலைவர்களும் இந்தி பேசாத பகுதிகளைச் சேர்ந்தவர்கள்.


பிரதமர் மோடியின் தலைமையின் கீழ், கடந்த 10 ஆண்டுகளில் இந்தி மற்றும் உள்ளூர் மொழிகளை வலுப்படுத்த ஏராளமான பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன என்று மத்திய உள்துறை அமைச்சர் கூறினார். பிரதமர் பெருமையுடன் பல சர்வதேச மன்றங்களில் இந்தியில் உரையாற்றியுள்ளார்.


நம் நாட்டில் மட்டுமல்ல, உலகம் முழுவதும் இந்தியின் முக்கியத்துவத்தை முன்வைத்துள்ளார். இதனுடன், பிரதமர் மோடி நாட்டிற்குள் நமது மொழிகளின் மீதான பெருமை உணர்வையும் அதிகரித்துள்ளார். இந்த 10 ஆண்டுகளில், பல இந்திய மொழிகளை வலுப்படுத்த நாங்கள் நிறைய முயற்சிகளை மேற்கொண்டுள்ளோம்.


புதிய கல்விக் கொள்கையில் தாய்மொழியில் ஆரம்பக் கல்வியை வழங்குவதற்கு முக்கிய இடம் அளித்ததன் மூலம் நமது அனைத்து மொழிகளுக்கும் இந்திக்கும் புதுவாழ்வு அளித்துள்ளார் பிரதமர் மோடி என்று அவர் தெரிவித்தார்.


கடந்த 10 ஆண்டுகளில் நாடாளுமன்ற அலுவல் மொழிக் குழுவின் நான்கு அறிக்கைகளை நாங்கள் சமர்ப்பித்துள்ளோம். மேலும், அரசுப் பணிகளில் இந்தியை முதன்மையாக நிலைநிறுத்துவதற்கான பணிகள் செய்யப்பட்டுள்ளன.


இந்தி நம்மையும் நமது அனைத்து மொழிகளையும் இணைக்கிறது. நாட்டின் குடிமக்கள் அனைவரும் ஒருவருக்கொருவர் இந்திய மொழியில் தொடர்பு கொள்ள வேண்டும் என்பது அரசியல் நிர்ணய சபையின் உணர்வு என்று அவர் கூறினார்.