Pneumonia: சீனாவில் நிமோனியா காய்ச்சல் மிக தீவிரமாக பரவி வருவதை அடுத்து, மருத்துவமனைகளை தயார் நிலையில் வைக்க வேண்டும் என்று மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது. 


சீனாவில் தீவிரமாக பரவும் நிமோனியா காய்ச்சல்:


சீனாவில்  கடந்த சில நாட்களாக குழ்ந்தைகளுக்கு நிமோனியா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. பெய்ஜிங் மற்றும் லியோனிங் மாகாணத்தில் நிமோனியா பாதிப்பு அதிகமாக இருக்கிறது.  நிமோனியா பாதிப்பால், மருத்துவமனைகளில் அனுமதிக்கப்படும் குழந்தைகளில் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக உள்ளூர் ஊடகங்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. நிமோனியா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில், அங்குள்ள பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிமோனியா காய்ச்சலால் இதுவரை எந்த உயிரிழப்பு ஏற்படவில்லை. 


பொதுவாக நிமோனியா என்பது நுரையீரலைப் பாதிக்கும் தொற்று நோயாகும். நிமோனியா காய்ச்சல் ஒரே நேரத்தில் ஒன்று அல்லது இரண்டு நுரையீரலையும் பாதிக்கலாம். இதனால் மூச்சு விடுவதில் சிரமம் ஏற்படும். மேலும், சளி, காய்ச்சல், சுவாசிப்பதில் சிரமம் ஆகியவை இதன் அறிகுறிகளாகும். ஆனால், தற்போது சீனாவில் பரவி வரும் தொற்றானது, காய்ச்சல் மற்றும் நுரையீரல் எரிச்சல் ஆகியவை முக்கிய அறிகுறிகளாக இருக்கிறது. அதே நேரத்தில் அங்கு யாருக்கும் இருமல் பாதிப்பில்லை. ஆனால், காய்ச்சல் காரணமாக சீனாவில் குழந்தைகள் அதிகளவில் பாதிக்கப்படுகின்றன. 


மத்திய அரசு அறிவுறுத்தல்:


இந்நிலையில், நிமோனியா பாதிப்பு குறித்து அனைத்து மாநிலங்களுக்கு மத்திய அரசு கடிதம் அனுப்பியுள்ளது. அக்கடிதத்தில், ”சீனாவில் நிமோனியா பாதிப்பு அதிகரித்து வருகிறது. இதனை நாங்கள் உன்னிப்பாக கவனித்து வருகிறோம். இந்தியாவில் நிமோனியா பாதிப்பால் குறைந்தபட்ச ஆபத்து உள்ளது. எனவே, அனைத்து மாநிலங்களும் கவனமாக இருக்க வேண்டும். அனைத்து மருத்துவமனைகளையும் தயார் நிலையில் வைக்க வேண்டும். படுக்கைகள், மருந்துகள், தடுப்பூசிகள், ஆக்ஸிஜன், பாதுகாப்பு உபகரணங்கள், பரிசோதனை கருவிகள் உள்ளிட்டவைகள் தயார் நிலையில் வைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.


அனைத்து மருத்துவமனைகளிலும் ஆக்ஸிஜன் மற்றும் வெண்டிலேட்டர்கள்  போதுமான அளவு இருப்பதை உறுதி செய்ய வேண்டும் என்று அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு மத்திய அரசு  அறிவுறுத்தியுள்ளது.  மேலும், நிமோனியா அறிகுறி உள்ளவர்களை கண்காணிக்க வேண்டும். குறிப்பாக குழந்தைகளை உன்னிப்பாக கவனிக்க வேண்டும். ஏதேனும், அறிகுறிகள் தெரிந்தால் உடனடியாக தனிப்படுத்தப்பட வேண்டும்" என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.


உலக சுகாதார அமைப்பு சொல்வது என்ன?


இதுகுறித்து உலக சுகாதார அமைப்பு கூறுகையில், "பெய்ஜிங் மற்றும் லையானிங் பகுதிகளில் புதிய நோய் கிருமிகள் எதுவும் கண்டறியப்படவில்லை. இது ஏற்கனவே அறியப்பட்ட  நோய்கிருமிகளால் ஏற்படும் சுவாச நோய்களில் பொதுவான அதிகரிப்பு தான்.  சீனாவில் தற்போதைய சூழலை உன்னிப்பாக கண்காணித்து வருகிறோம். சீனாவில் உள்ள தேசிய அதிகாரிகளுடன் நெருங்கிய தொடர்பில் இருக்கிறோம். அதோடு, தடுப்பூசிகள், நோய்வாய்ப்பட்டவர்களின் இருந்து விலகி இருப்பது மற்றும் முகக் கவசம் அணிவது போன்ற நடவடிக்ககைளை  பின்பற்ற வேண்டும்" என்று உலக சுகாதார அமைப்பு வலியுறுத்தியுள்ளது.