தன்பாலின திருமணத்திற்கு பல நாடுகள் சட்ட அங்கீகாரம் அளித்துள்ளன. அர்ஜென்டினா, ஆஸ்திரேலியா, ஆஸ்திரியா, பெல்ஜியம், பிரேசில், கனடா, சிலி, கொலம்பியா, கோஸ்டாரிகா, கியூபா, டென்மார்க், ஈக்வடார், பின்லாந்து, பிரான்ஸ், ஜெர்மனி, ஐஸ்லாந்து, அயர்லாந்து, லக்சம்பர்க், மால்டா, மெக்சிகோ, நெதர்லாந்து, நியூசிலாந்து, நார்வே, போர்ச்சுகல் , ஸ்லோவேனியா உள்ளிட்ட நாடுகளில் தன்பாலின திருமணத்திற்கு சட்ட அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளன.


தன்பாலின திருமணம்:


சமீபத்தில் கூட தன்பாலின திருமணத்திற்கு அங்கீகாரம் அளிக்கும் சட்டத்தை அமெரிக்கா நிறைவேற்றயது. இதையடுத்து, தன் பாலின திருமணத்திற்கு சட்ட அங்கீகாரம் வழங்கக் கோரி தன்பாலீர்ப்பு கொண்ட நான்கு ஆண் தம்பதிகள் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.


இதேபோல, நாட்டின் பல்வேறு உயர் நீதிமன்றங்களில் தன்பாலின திருமணத்திற்கு சட்ட அங்கீகாரம் வழங்க கோரி தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுக்கள் நிலுவையில் உள்ளன.


ஆனால், தன்பாலின திருமணத்திற்கு சட்ட அங்கீகாரம் வழங்க பிரதமர் மோடி தலைமையிலான அரசு மறுத்து வருகிறது. கடந்த 2018ஆம் ஆண்டு, தன்பாலின ஈர்ப்புக்கு விதிக்கப்பட்ட தடையை உச்ச நீதிமன்றம் திரும்பப்பெற்று வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்பை வழங்கியது. 


இந்த தீர்ப்புக்கு பிறகும், மாற்று பாலினத்தவர் மீது பாகுபாடு காட்டப்படுவதாகவும் இந்திய சமூகம் ஏற்று கொள்ள மறுக்கிறது என்றும் LGBT சமூகத்தினர் குற்றம்சாட்டி வருகின்றனர்.


குடும்ப அமைப்பு என்றால் என்ன?


இந்நிலையில், குடும்ப அமைப்பு என்றால் என்பது குறித்து மத்திய அரசு ஒரு விளக்கத்தை அளித்துள்ளது. உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், "தன்பாலீர்ப்பாளர்கள் லிவிங் டு கெதரில் இருந்து பாலியல் உறவு கொள்வதை இந்திய குடும்ப அமைப்புடன் ஒப்பிட முடியாது. 


கணவன், மனைவி, குழந்தை அடங்கிய இந்திய குடும்ப அமைப்பை பொறுத்தவரையில், கணவன் என்ற ஆண், மனைவி என்ற பெண், இவர்கள் இருவருக்கும் பிறக்கும் குழந்தை ஆகியோரை கொண்டதே குடும்ப அமைப்பாக கருத முடியும்.


திருமண நிபந்தனைகள், தனிநபர்களை ஆளும் தனிப்பட்ட சட்டங்களின் கீழ் உள்ள சம்பிரதாய மற்றும் சடங்குகள், தன்பாலீர்ப்பாளர்களின் திருமணத்தை பதிவு செய்வது, ஏற்கனவே உள்ள தனிப்பட்ட மற்றும் தடைசெய்யப்பட்ட உறவின் வரம்பு போன்றவை சட்ட விதிகளை மீறுகிறது.


திருமணம் என்ற கருத்தாக்கம், தவிர்க்க முடியாத எதிர் பாலினத்தைச் சேர்ந்த இரு நபர்களுக்கிடையே ஒரு உறவை முன்வைக்கிறது. இந்த வரையறை சமூக ரீதியாகவும், கலாச்சார ரீதியாகவும், சட்டரீதியாகவும் திருமணத்தின் யோசனை மற்றும் கருத்தாக்கத்தில் வேரூன்றியுள்ளது. நீதித்துறை விளக்கத்தால் தொந்தரவு செய்யப்படவோ அல்லது நீர்த்துப்போகவோ கூடாது.


திருமண உறவுக்குள் நுழையும் நபர்கள் சொந்த பொது முக்கியத்துவத்தைக் கொண்ட ஒரு அமைப்பை உருவாக்குகின்றனர். ஏனெனில், இது ஒரு சமூக நிறுவனமாகும். அது, பல உரிமைகள், பொறுப்புகளை கொண்டுள்ளன." என தெரிவித்துள்ளது.