Bihar Brdge Collapse: பீகாரில் கடந்த 9 நாட்களில் 5 பாலங்கள், கட்டுமான பணியின் போதே இடிந்து விழுந்த சம்பவம் மக்கள் மத்தியில் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


இடிந்து விழுந்த பாலம்:



பீகாரின் மதுபானி பகுதியில் கட்டுமானப் பணிகள் நடைபெற்று வந்த பாலம் இடிந்து விழுந்துள்ளது. பீஜா காவல் நிலையத்தின் மாதேபூர் பிளாக்கில் 75 மீ நீளத்திகு பாலம் அமைக்கும் பணிகள் கடந்த நான்கு ஆண்டுகளாக நடைபெற்று வருகிறது. அதன்படி, 3 கோடி ரூபாய் மதிப்பிலான இந்த பாலத்தை கட்டும் பணி கடந்த 2021ம் ஆண்டு முதல் நடைபெற்று வருகிறது.


பீகார் அரசின் மாநில  ஊரகப் பணிகள் துறையால் இந்த பாலம் கட்டப்பட்டு வரும் நிலையில் திடீரென இடிந்து விழுந்துள்ளது. பீகாரில் கட்டுமான பணிகள் நடைபெற்று வந்த பாலம் இடிந்து விழுவது தொடர்பாக, கடந்த ஒன்பது நாட்களில் நடந்த ஐந்தாவது சம்பவம் இதுவாகும்.  


பாலம் சரிய காரணம் என்ன?


பாலம் கட்டப்பட்டு வரும் ஆற்றின் நீர் மட்டம் உயர்ந்ததால், 25 மீ நீளமுள்ள ஒரு தூண் எதிர்பாராதவிதமாக சரிந்து விழுந்துள்ளது. இதுதொடர்பான புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி கடும் விமர்சனங்களை எதிர்கொண்டு வருகின்றன. பீகார் சட்டசபையின் எதிர்க்கட்சித் தலைவரான தேஜஸ்வி யாதவ், சமீபத்திய விபத்துகளை குறிப்பிட்டு ஆளுங்கட்சியை கடுமையாக சாடிவருகிறார்.


தேஜஸ்வி யாதவ் கேள்வி


பாலம் இடிந்து விழுந்தது தொடர்பான வீடியோவை குறிப்பிட்டு, தேஜஸ்வி யாதவ் டிவிட்டர் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில்,மதுபானி-சுபால் இடையே பேய் ஆற்றில் பல ஆண்டுகளாக கட்டப்பட்டு வந்த பாலம் இடிந்து விழுந்தது. கண்டுபிடித்தீர்களா? இல்லை என்றால், ஏன்? உங்களால் முடிந்தால் தீர்வு காணுங்கள்?” என கேள்வி எழுப்பியுள்ளார்.






9 நாட்களில் இடிந்து விழுந்த பாலங்கள்:



  • கிஷன்கஞ்ச் மாவட்டத்தில் வியாழக்கிழமை ஒரு பாலம் இடிந்து விழுந்தது.

  • கிழக்கு சம்பாரண் மாவட்டத்தில் கடந்த ஜூன் 23ஆம் தேதி கட்டுமானப் பணியில் இருந்த சிறிய பாலம் இடிந்து விழுந்தது.

  • ஜூன் 22 அன்று, சிவான் பகுதியில் கண்டக் கால்வாயின் மீது கட்டப்பட்ட பாலம் இடிந்து விழுந்தது. 

  • ஜூன் 19 அன்று, அராரியாவில் கட்டுமானப் பணியில் இருந்த பாலத்தின் ஒரு பகுதி இடிந்து விழுந்தது. பக்ரா ஆற்றில் பல கோடி செலவில் கட்டப்பட்ட கான்கிரீட் பாலம் நொடியில் பிரிந்தது.