காஷ்மீரின் பகல்ஹாமில் கடந்த ஏப்ரல் 22 -ம் தேதி நடந்த தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக இந்தியா ஆபரேஷன் சிந்தூரை நடத்தியது. இந்த தாக்குதலுக்கு பிறகு பாகிஸ்தானும் இந்தியா மீது தாக்குதல் நடத்த இந்தியா தனது முப்படைகளையும் கொண்டு பாகிஸ்தான் மீது தாக்குதல் நடத்தியது.
போர் நிறுத்தம்
இந்த நிலையில் அமெரிக்கா, ரஷ்யா உள்ளிட்ட பல்வேறு நாடுகள் இரு நாடுகளையும் சமரசம் செய்ய பேச்சுவார்த்தை நடத்த பல கட்ட நடவடிக்கைகள் எடுத்தது. அதன் விளைவாக இன்று இந்தியா - பாகிஸ்தான் போர் நிறுத்தத்திற்கு ஒப்புதல் தெரிவித்தனர். இதனை அமெரிக்கா அதிபர் டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்தார். அதனை தொடர்ந்து இருநாட்டு அதிகாரிகளும் அதனை உறுதி செய்தனர். இதனை தொடர்ந்து, மாலை 5 மணி முதல் இந்தியா தனது வான்படை, தரைப்படை, கடற்படை தாக்குதல்களை நிறுத்தியது.
நீடிக்காத நிம்மதி
இந்தியா - பாகிஸ்தான் இடையே நாளை மறுநாள் பேச்சுவார்த்தை நடக்கும் என்று அறிவிக்கப்பட்டது. இந்த சண்டைக்கு நிரந்தர முடிவு வர உள்ளதாக மக்கள் நிம்மதி பெருமூச்சு விட்டனர். ஆனால் மக்கள் நிம்மதி அடைந்த சில மணி நேரங்களிலே ஒப்பந்தத்தை மீறும் வகையில் காஷ்மீர் மீது ட்ரோன்கள் மூலம் பாகிஸ்தான் தாக்குதலை தொடர்ந்துள்ளது.
போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறிய பாகிஸ்தான்? ஸ்ரீநகரில் குண்டுவெடிப்பு.. உச்சக்கட்ட பதற்றம்
இருளில் மூழ்கும் நகரங்கள்
காஷ்மீரின் ஸ்ரீநகரில் பல இடங்களில் குண்டுவெடிப்பு சம்பவங்களும் அரங்கேறியுள்ளது. பாதுகாப்பு காரணங்களை கருத்தில் கொண்டு ஸ்ரீநகர், உத்தம்பூர் உள்ளிட்ட பல இடங்களில் மின்சாரம் நிறுத்தப்பட்டுள்ளது. இதனால் காஷ்மீரின் பல இடங்கள் இருளில் மூழ்கியுள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக காஷ்மீரின் முதலமைச்சர் ஓமர் அப்துல்லா கடும் அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளார். போர் நிறுத்தம் இல்லை. ஸ்ரீநகரின் நடுவில் உள்ள வான் பாதுகாப்பு பிரிவுகள் தற்போதுதான் திறக்கப்பட்டது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். மேலும் என்ன நடக்கிறது? ஸ்ரீநகரில் குண்டுகள் வெடித்துள்ளது.
மக்கள் தவிப்பு
ட்ரோன் தாக்குதலை நடத்தியது பாகிஸ்தான் என்றே கூறப்படுகிறது. சண்டை நிறுத்தத்திற்கு ஒப்புதல் அளித்த சில மணி நேரங்களிலே பாகிஸ்தான் ஒப்பந்தத்தை மீறியது இந்தியாவிற்கு கடும் கோபத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும், பாகிஸ்தானில் இருந்து வந்த ட்ரோன்களை இந்தியா வான்வழியிலே தாக்கி அழித்தது. இருப்பினும் ஸ்ரீநகரில் நடந்த குண்டுவெடிப்பு சம்பவம் மக்கள் மத்தியில் பெரும் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது. சண்டை முடிவுக்கு வருகிறது என்று நிம்மதி பெருமூச்சு விட்ட மக்கள் இந்த சண்டையால் மீண்டும் நிம்மதியை இழந்துள்ளனர். பாதுகாப்பு காரணங்களாக ராஜஸ்தான், பஞ்சாப் எல்லையிலும் மின்சாரம் முழுவதும் துண்டிக்கப்பட்டுள்ளது.
கருத்து வேறுபாடு
பாகிஸ்தான் அரசு போர் நிறுத்தத்தை அறிந்த நிலையில் பாகிஸ்தான் ராணுவம் தற்போது தாக்குதல் நடத்தி வருவது பாகிஸ்தான் அரசுக்கும் ராணுவத்திற்கும் இடையே கருத்து வேறுபாடு உள்ளதாகவும் இதன் காரணமாகவே தற்போது தாக்குதல் நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது. மேலும் ராணுவத்திற்கு போர் நிறுத்தம் குறித்த தகவல்கள் அரசு சார்பில் சொல்லப்பட்டு, அதனை நடைமுறைப்படுத்த சில மணி நேரங்கள் எடுத்துக் கொள்ளும் எனவும், ஆதலால் இந்த தாக்குதல் நீக்க வாய்ப்பில்லை எனவும் கூறப்படுகிறது.