சிவசேனா கட்சியின் பெயரையும் வில் அம்பு சின்னத்தையும் மகாராஷ்டிரா முதலமைச்சர் ஏக்நாத் ஷிண்டேவுக்கு தேர்தல் ஆணையம் நேற்று ஒதுக்கியது. உத்தவ் தாக்கரே தலையிலான சிவசேனா தரப்புக்கு, தேர்தல் ஆணையத்தின் அறிவிப்பு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.


கலகத்தை ஏற்படுத்தி கட்சியை கைப்பற்றிய ஏக்நாத் ஷிண்டே:


சிவசேனா கட்சி தலைமைக்கு எதிராக அக்கட்சியின் மூத்த தலைவர் ஏக்நாத் ஷிண்டே கலகம் ஏற்படுத்தியதையடுத்து, கட்சி இரண்டாக பிரிந்தது. உத்தவ் தாக்கரே தலைமையிலான அணி என்றும் ஏக்நாத் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான அணி என்றும் இரண்டாக பிரிந்தது.


கட்சியின் பெரும்பாலான எம்.எல்,ஏ.க்களின் உதவியாலும், பாஜகவுடனான கூட்டணியாலும் ஏக்நாத் ஷிண்டேவுக்கு முதலமைச்சர் பதவி கிடைத்தது.


கட்சியின் வில் மற்றும் அம்பு சின்னத்திற்காக இரு பிரிவும் போட்டி போட்டுவந்த நிலையில், உண்மையான சிவசேனா யார்? கட்சியின் சின்னம் யாருக்கு ஒதுக்கப்பட வேண்டும் என்பது தொடர்பாக தேர்தல் ஆணையத்திடம் பல்வேறு மனுக்கள் சமர்பிக்கப்பட்டன. இதையடுத்து, கட்சியின் பெயரையும் சின்னத்தையும் ஏக்நாத் ஷிண்டேவுக்கு தேர்தல் ஆணையம் ஒதுக்கியது.


கடுப்பான உத்தவ் தாக்கரே:


இந்நிலையில், தேர்தல் ஆணையத்தின் மீது சரமாரி குற்றச்சாட்டு சுமத்தியுள்ளார் மகாராஷ்டிரா முன்னாள் முதலமைச்சர் உத்தவ் தாக்கரே. பிரதமர் மோடியின் அடிமையாக தேர்தல் ஆணையம் உள்ளதாக சாடிய அவர், "பிரதமர் மோடியின் அடிமையான தேர்தல் ஆணையம், இதுவரை செய்திராத செயலைச் செய்துள்ளது" என்றார்.


தாக்கரேயின் குடும்ப இல்லமான மாடோஸ்ரீக்கு வெளியே கூடியிருந்த மக்கள் மத்தியில் பேசிய உத்தவ், "ஆதரவாளர்கள் பொறுமையாக இருக்குமாறு கேட்டு கொள்கிறேன். அடுத்த தேர்தலுக்கு தயாராகுமாறும் வலியுறுத்துகிறேன். மும்பை மாநகராட்சி தேர்தலுக்கு தயாராகுங்கள். கட்சியின் சின்னம் திருடப்பட்டது. திருடனுக்கு பாடம் புகட்ட வேண்டும்" என்றார்.


இந்த வழக்கில் உச்ச நீதிமன்ற தீர்ப்புக்காக காத்திருக்குமாறு தேர்தல் ஆணையத்தை வலியுறுத்திய தாக்கரே அணியினர், இந்த முடிவை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப் போவதாக கூறியுள்ளனர். இரு தரப்பினருக்கும் இடையே நிலவும் சட்ட போராட்டம் உச்ச நீதிமன்றத்தில் நடந்து வருகிறது.


உத்தவ் தாக்கரே தரப்பினர், கடந்த ஆண்டு ஒதுக்கப்பட்ட 'சிவசேனா உத்தவ் பாலாசாகேப் தாக்கரே' என்ற பெயரையும், 'சுடர்விடும் ஜோதி' சின்னத்தையும் வைத்துக் கொள்ளலாம் என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.


ஜனநாயகத்தின் வெற்றி:


தேர்தல் ஆணையத்தின் முடிவை வரவேற்றுள்ள ஏக்நாத் ஷிண்டே, இது ஜனநாயகத்தின் வெற்றி என கூறியுள்ளார். தன்னை துரோகி என கூறி வரும் உத்தவ் தாக்கரேவுக்கு பதிலடி அளித்த ஏக்நாத், அவர் சுயபரிசோதனை செய்ய வேண்டும் என்றார்.


கடந்த நவம்பர் 3ஆம் தேதி, மகாராஷ்டிரா மாநிலம் அந்தேரி கிழக்கு தொகுதியில் இடைத்தேர்தல் நடைபெற்றது. சிவசேனா எம்எல்ஏ ரமேஷ் லட்கேவின் மறைவை தொடர்ந்து, இந்த தொகுதிக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது.


இரண்டு அணிகளாக பிரிந்ததையடுத்து, வில் - அம்பு சின்னத்தை பயன்படுத்த கடந்த ஆண்டு நவம்பர் மாதம் இடைக்காலத் தடை விதித்து தேர்தல் ஆணையம் உத்தரவு பிறப்பித்தது குறிப்பிடத்தக்கது.