ரியாசியில் நடைபெற்ற தீவிரவாத தாக்குதலில் தொடர்புடைய பயங்கரவாதிகளின் புகைப்படத்தை பாதுகாப்பு படையினர் வெளியிட்டுள்ளனர். 


ஜம்மு காஷ்மீர் மாநிலம் ரியாசியில் நேற்று (ஜூன் 9) ஷிவ் கோரி கோவிலுக்கு பக்தர்கள் சென்ற  பேருந்து மீது தீவிரவாதிகள் துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதையடுத்து பேருந்து கட்டுப்பாட்டை இழந்து பள்ளத்தில் கவிழ்ந்தது. இந்த விபத்தில் 10 பேர் உயிரிழந்தனர். மேலும் பல படுகாயம் அடைந்து மருத்துவமனையில் உயிருக்கு போராடி வருகின்றனர்.


தீவிரவாதிகளை பிடிக்கும் நடவடிக்கை:


இந்த தீவிரவாத தாக்குதலை கண்டித்து உள்துறை அமைச்சர் அமித்ஷா உட்பட பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும் அறிக்கை வெளியிட்டனர். அதோடு இப்படிப்பட்ட ஒரு மோசமான தாக்குதலில் ஈடுபட்ட தீவிரவாதிகளை பிடிக்க இந்திய பாதுகாப்பு படையினர் தேடுதல் வேட்டையை தொடக்கினார்கள்.


ரஜோரி மாவட்டத்தின் எல்லையான தெரியாத்-போனி-ஷிவ் கோடி பகுதியை ராணுவம், காவல்துறை மற்றும் மத்திய ரிசர்வ் போலீஸ் படை (சிஆர்பிஎஃப்) உள்ளிட்ட பாதுகாப்புப் படையினர் தங்களது முழு கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்து தீவிரவாதிகளை நெருங்கி விட்டதாக தகவல்கள் வருகின்றன.


இதுதவிர ஆளில்லா விமானம், மோப்ப நாய் உள்ளிட்ட கண்காணிப்பு கருவிகள் மூலம் தேடுதல் வேட்டை நடைபெற்று வருகிறது. தாக்குதலில் ஈடுபட்ட பயங்கரவாதிகள் ரஜோரி மற்றும் ரியாசி பகுதியில் தான் பகுதியில் தான் இருக்காலம் என்றும் அஞ்சப்படுகிறது. 


தீவிவராதிகளின் புகைப்படத்தை வெளியிட்ட பாதுகாப்பு படை:


இந்நிலையில் தான் இந்த கொடூர தாக்குதலில் ஈடுபட்ட தீவிரவாதிகளின் புகைப்படத்தை பாதுகாப்பு படையினர் இன்று (ஜூன்10) வெளியிட்டுள்ளனர். அதாவது இந்த தாக்குதலில் ஈடுபட்ட   அபு ஹம்சா மற்றும் அதுன் ஆகிய இரண்டு தீவிரவாதிகளின் புகைப்படத்தை தான் பாதுகாப்பு படை வெளியிட்டிருக்கிறது. இதுவரை இந்த தீவிரவாத தாக்குதலில் தொடர்புடைய   8 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.


நிவாரணை தொகையை அறிவித்த கவர்னர்:


ஜம்மு-காஷ்மீர் துணை நிலை ஆளுநர் மனோஜ் சின்ஹா, இந்த தீவிரவாத தாக்குதலில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.10 லட்சம் நிவாரணத் தொகையை அறிவித்துள்ளார். இது தவிர காயமடைந்தவர்களுக்கு தலா ரூ.50,000 நிவாரணத் தொகை வழங்கப்படும் எனவும் அவர் கூறியுள்ளார்.