ட்விட்டரில் வீடியோ ஏதாவது வினோதமாக வெளிவந்தால் ட்விட்டர்வாசிகள் அதன் உண்மைத்தன்மையைப் புலனாய்வு செய்வதும், அதன் மீது விவாதங்கள் செய்வதும் வழக்கமான ஒன்று. சமீபத்தில் தண்ணீர் நிறைந்த வாணலிக்குள் கைகூப்பியபடி சிறுவன் ஒருவன் அமர்ந்திருப்பதும், கீழே நெருப்பு வைக்கப்பட்டு, தண்ணீர் கொதிப்பது போலவும் வீடியோ ஒன்று வெளியானது. அந்தச் சிறுவனைச் சுற்றி சிறிய கூட்டம் ஒன்று இருப்பது போலவும், அதனைக் கண்டுகொள்ளாமல் சிறுவன் வழிபாட்டில் இருப்பது போலவும் அந்த வீடியோவில் காட்டப்படுகிறது. சிறுவனுக்குப் பின்னால் உள்ள பேனரில் இந்தி மொழியில் ‘பிரகலாத்’ என்று எழுதப்பட்டுள்ளது. மேலும் கூட்டத்தில் பலரும் வீடியோ எடுப்பதாகவும் தெரிகிறது. 30 செகண்ட்கள் ஓடும் இந்த வீடியோவை சந்தீப் பிஷ்ட் என்ற ட்விட்டர்வாசி பகிர, இது வைரலானது. ட்விட்டர்வாசிகள் பலரும் இதுகுறித்த அறிவியலைப் பகிரத் தொடங்க, இதே வித்தையை பல மேஜிக் நிபுணர்கள் செய்துகாட்டியுள்ளதாகவும் கூறி வருகின்றனர். 






 


இதில் ட்விட்டர்வாசி ஒருவர் இந்த வீடியோ 2019ஆம் ஆண்டு ’டிவி ஒன்’ என்ற யூட்யூப் சேனலில் ஏற்கனவே வெளியானதையும், 2019ஆம் ஆண்டு டிசம்பர் 10 அன்று பதிவேற்றப்பட்ட இந்த வீடியோவுக்கு யூட்யூபில் 8 ஆயிரம் வியூஸ் இருந்ததாகவும் சுட்டிக் காட்டியுள்ளார். மேலும், பலரும் இதே போன்று பிறர் வித்தை காட்டிய வீடியோக்களையும் பகிர்ந்து வருகின்றனர். ஒரு வீடியோவில் பௌத்த துறவி ஒருவர் கொதிக்கும் எண்ணெய்ச் சட்டிக்குள் அமர்ந்துகொண்டிருப்பதாகக் காட்டப்படுகிறது. ஒருவர், “இதுபோன்ற செயல்கள் மிகப்பெரிய மோசடி ஆகும். பாத்திரத்திற்குள் இருக்கும் பூவிதழ்கள் எதிலும் புகை எழவில்லை; அவை கொதிக்கவில்லை” என்று சுட்டிக் காட்டுகிறார். 


மற்றொரு ட்விட்டர்வாசியான மீர் ஆபித் என்பவர், இந்த வீடியோவில் காட்டப்படும் வித்தைக்குப் பின்னுள்ள அறிவியலை விளக்கியுள்ளார். இந்த வித்தையின் பின்னணியில் காற்று பம்ப் பயன்படுத்தப்பட்டுள்ளதாகக் கூறுகிறார் அவர். “தண்ணீர் கொதிக்கும் போது, அது பாத்திரத்தின் அனைத்து இடங்களிலும் கொதிக்கும். இதில் முன்பக்கம் மட்டுமே கொதிக்கிறது. பின்பக்கத்தில் இருக்கும் பூக்கள் அசையாமல் அப்படியே இருக்கின்றன. இதில் பயன்படுத்தப்பட்டிருக்கும் பாத்திரத்தின் கீழ்ப்பகுதி அடர்த்தியாகத் தயாரிக்கப்பட்டிருக்கக் கூடும். இதனால் தண்ணீர் கொதிக்காமல், கீழே நெருப்பு மட்டும் எரியும்” என அவர் எழுதியுள்ளார்.



இந்த வீடியோ வெளியான 2019ஆம் ஆண்டு, Quora தளத்தில் மைக்கேல் வான் என்பவர் இதன் பின்னணியில் உள்ள அறிவியலை விளக்கியுள்ளார். இதில் கார்பன் டை ஆக்சைட் சிலிண்டர் பயன்பட்டிருக்கும் என்று கூறும் அவர், சிறுவன் அமர்ந்திருக்கும் இடத்தில் கார்பன் டை ஆக்சைட் கேஸ் நிரம்பிய சிலிண்டர் இருக்கலாம். அது குளிரை உற்பத்தி செய்வதும், தண்ணீர் கொதிப்பது போல வாயுவையும் வெளிப்படுத்தும். கொதிப்பதாகக் காட்டப்படும் இடத்தில் இருப்பது சூடான நீரல்ல; அது குளிர்ந்த கார்பன் டை ஆக்சைட் வாயு” என்று அவர் கூறியுள்ளார்.