நாட்டின் பல்வேறு மாநிலங்களில் இந்தாண்டு சட்டப்பேரவை தேர்தல் நடைபெறுகிறது. அந்த வகையில், வடகிழக்கில் அமைந்துள்ள திரிபுராவில் நேற்று சட்டப்பேரவை தேர்தல் நடந்து முடிந்துள்ளது. முன்னதாக, திரிபுரா, மேகாலயா, நாகாலாந்து ஆகிய மாநிலங்களுக்கு சட்டப்பேரவை தேர்தல் அறிவிக்கப்பட்டது. 


அதன்படி, திரிபுராவில் நேற்று வாக்குப்பதிவு நடத்தப்பட்டது. அதன்படி, திரிபுராவில் நேற்று காலை 8 மணிக்கு தொடங்கப்பட்ட வாக்குப்பதிவு மாலை 6 மணியுடன் நிறைவுபெற்றது. வாக்குப்பதிவு நேரம் முடிந்த பிறகும், வாக்களிப்பதற்காக மக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்ததாக தலைமை தேர்தல் அதிகாரி கிரண்குமார் திங்காராவ் தெரிவித்திருந்தார்.


இதனால், அறிவிக்கப்பட்ட நேரத்திற்குள் வாக்குப்பதிவை முடிக்க கடனமாக இருந்ததாகவும் அவர் கூறினார். தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள தகவலின்படி, 87.63 சதவிகித வாக்குகள் பதிவாகியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 2018ஆம் ஆண்டு தேர்தலில், 89.38 சதவிகித வாக்குகள் பதிவாகியிருந்தது. 


மொத்தமுள்ள 60 தொகுதிகளில் மொத்தமாக 259 வேட்பாளர்கள் போட்டியிட்டனர். அங்கும் இங்குமாய் வன்முறை சம்பவங்கள் நிகழ்ந்தபோதிலும், பெரும்பாலான பகுதிகளில் தேர்தல் அமைதியாக நடந்து முடிந்துள்ளது. 


கம்யூனிஸ்ட்களின் கோட்டை:


திரிபுராவை பொறுத்தவரையில், ஒரு காலத்தில் கம்யூனிஸ்ட்களின் கோட்டையாக கருதப்பட்ட மாநிலம். 25 ஆண்டுகால கம்யூனிஸ்ட்களின் ஆட்சியை கடந்த 2018ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டப்பேரவை தேர்தல் வெற்றி மூலம் பாஜக முடிவுக்கு கொண்டு வந்தது.


அந்த தேர்தலில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தலைமையிலான கூட்டணியை முதல்முறையாக தோற்கடித்து பாஜக ஆட்சி அமைத்தது. தற்போது, ஐந்து ஆண்டு கால பாஜக ஆட்சியை தொடர்ந்து, சட்டப்பேரவை தேர்தல் நடத்தப்பட்டது. 60 தொகுதிகள் கொண்ட திரிபுராவில் 
ஐபிஎஃப்டி கட்சியுடன் பாஜக கூட்டணி அமைத்து போட்டியிட்டது. 


திரிபுராவில் இந்த முறை மும்முனை போட்டி நிலவுகிறது. இந்த தேர்தலில் பாஜக பல சவால்களை எதிர்கொண்டுள்ள நிலையில், பிரதான எதிர்க் கட்சிகளாக உள்ள காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கூட்டணி அமைத்து தேர்தலை சந்தித்துள்ளது.


இந்த கட்சிகளை தவிர்த்து மூன்றாவது முக்கிய கட்சியாக இருப்பது புதிதாக தொடங்கப்பட்ட திப்ரா மோதா கட்சி. இந்த கட்சியின் தலைவர் மாணிக்ய தேவ் வர்மா, இந்த தேர்தலில் கிங் மேக்கராக உருவெடுத்திருக்கிறார் என அரசியல் வல்லுநர்கள் கருதுகின்றனர்.


திப்ராலாந்து என்ற பெயரில் தனி மாநிலம் உருவாக்க வேண்டும் என கோரிக்கை விடுத்து வருகிறார் தேவ் வர்மா. திரிபுரா ராஜ குடும்பத்தை சேர்ந்த இவர், காங்கிரஸ் கட்சியின் மாநில தலைவராக பதவி வகித்தவர். திப்ரா மோதா கட்சியை தொடங்கிய இரண்டு ஆண்டுகளில் மாநிலத்தின் முக்கிய அரசியல் கட்சியாக மாற்றியுள்ளார். பழங்குடி மக்கள் மத்தியில் இவரின் பிரச்சாரம் எடுபட்டு வருகிறது என்றே சொல்லப்படுகிறது.


மேகாலயா, நாகாலாந்து மாநிலங்களுக்கு தேர்தல்:


மீதமுள்ள மேகாலயா, நாகாலாந்து மாநிலங்களுக்கு பிப்ரவரி 27ஆம் தேதி தேர்தல் நடத்தப்பட உள்ளது. மூன்று மாநிலங்களுக்கும் சேர்த்து மார்ச் 2ஆம் தேதி தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளது.