திருப்பதி ஏழுமலையான் கோயிலில் அங்கப்பிரதட்சணம் செய்வதற்கான டோக்கன்கள் நாளை ஆன்லைனில் வெளியிடப்படும் என்று திருப்பதி தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.


ஆன்லைன் டோக்கன்:


திருப்பதி ஏழுமலையான் கோயிலில் தரிசனத்திற்காக வரும் பக்தர்கள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அதிக கூட்ட நெரிசல் காரணமாக பக்தர்கள் பல மணி நேரம் காத்திருந்து தரிசனம் செய்துவருகின்றனர். திருப்பதி வரும் பக்தர்கள் அங்கப்பிரதட்சனம் செய்தல், மொட்டையடித்தல் போன்ற நேர்த்திக் கடன்களை செய்வது வழக்கம். இதற்காகு டோக்கன் பெறுவதற்காக பல மணி நேரம் வரிசையில் காத்திருந்து வாங்க வேண்டிய சூழ்நிலை இருந்துவந்தது. பக்தர்களின் சுமையை குறைக்க பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துவரும் திருப்பதி தேவஸ்தான நிர்வாகம், டோக்கன்களை வரிசையில் நின்று வாங்குவதற்கு பதிலாக, ஆன்லைனில் வாங்குவதற்கான ஏற்பாடுகளை செய்துள்ளது.




தேவஸ்தானம் அறிக்கை:


இது தொடர்பாக திருமலை திருப்பதி தேவஸ்தானம் நேற்று வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையில் கூறியிருப்பதாவது, திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பக்தர்கள் தங்கள் வேண்டுதலுக்கு ஏற்ப அங்கப்பிரதட்சணம் செய்வதற்கு திருமலைய்ல் டோக்கன்கள் வழங்கப்பட்டு வந்தன. ஆனால், இந்த டோக்கன்கள் பெறுவதற்கு பக்தர்கள் 2 முதல் 5 மணிநேரம் நீண்ட வரிசையில் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுவந்தது. இனி அங்கப்பிரதட்சணம் செய்வதற்காக டோக்கன்கள் வாங்க காத்திருக்காமல் ஆன்லைனில் முன்பதிவு செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஜூன் பதினைந்தாம் தேதி காலை 10 மணிக்கு ஜூன் 16ம் தேதி முதல் ஜூலை 31ம் தேதி வரை நாள் ஒன்றுக்கு 750 டோக்கன்கள் என ஆன்லைனில் இலவசமாக வழங்க்கப்பட உள்ளது. இந்த டிக்கெட்டுகளை https://tirupatibalaji.ap.gov.in என்ற இணையதளம் மூலம் பக்தர்கள் முன்பதிவு செய்யலாம். எனவே பக்தர்கள் இதை கவனத்தில் கொண்டு டோக்கன்கள் முன்பதிவு செய்ய வேண்டும் என்று அறிக்கை மூலம் திருப்பதி தேவஸ்தானம் வலியுறுத்தியுள்ளது.




வரலாறு காணாத வசூல்:


முன்னதாக, இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இருந்து அதிக பக்தர்கள் வருகை தரும் கோயிலான திருப்பதியில், கோயில் வரலாற்றில் இல்லாத அளவிற்கு கடந்த மே மாதம் உண்டியல் வருமானம் ரூ.130 கோடியைத் தாண்டியது. திருப்பதி தேவஸ்தான வரலாற்றில் ஒரு மாதத்தில் அதிக அளவு தொகை வந்தது இதுவே முதல்முறை என்று கூறப்படுகிறது. கடந்த மே மாதத்தில் மட்டும் கோடை விடுமுறை காரணமாக சுமார் 22.62 லட்சம் பக்தர்கள் சாமி தரிசனம் செய்துள்ளனர். இந்த காலகட்டத்தில் 1.86 கோடி லட்டு பிரசாதங்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளது. 10.72 லட்சம் பக்தர்கள் முடி காணிக்கை செலுத்தியுள்ளனர்.





ஒரே நாளில் ரூ.10 கோடி வசூல்:


அதே போல கடந்த ஜூன் 6ம் தேதி ஒரே நாளில் திருநெல்வேலியைச் சேர்ந்த தொழிலதிபர் 7 கோடி ரூபாயையும், 3 தனியார் நிறுவனங்கள் இணைந்து  தலா ஒரு கோடி ரூபாயையும் என மொத்தமாக 10 கோடி ரூபாயை காணிக்கையாக வழங்கினர் என்பது குறிப்பிடத்தக்கது.