தமிழ்நாட்டில் கடந்த 25 ஆம் தேதி டி.என்.பி.எஸ்.சி-யின் குரூப் -2 தேர்வு நடைபெற்றது. வினாத்தாளில் பதிவு எண் மாறியிருந்தது. இதையடுத்து நடந்து முடிந்த தேர்வினையும் ரத்து செய்யுமாறு அ.தி.மு.க.வின் இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி அரசை கேட்டுக்கொண்டுள்ளார். மறுத்தேர்வு நடத்துமாறும் அவர் வலியுறுத்தியுள்ளார். 


இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவின் விவரம்:


”தமிழ்நாட்டில் 25.02.23 - சனிக்கிழமை நடைபெற்ற TNPSC தேர்வில் வினாத்தாள்களின் பதிவு எண்கள் மாறியிருந்ததன் காரணமாக பல்வேறு குளறுபடிகளுடன் தாமாதமாக தொடங்கியுள்ளன. இதனால் பல முறைகேடுகள் நடந்துள்ளது. அதன் காரணமாக தகுதிவாய்ந்த தேர்வர்கள் தங்கள் வாய்ப்பினை இழக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது. TNPSC தேர்வு போன்ற முக்கிய தேர்வுகளையே முறையாக கையாளத் தெரியாத இந்த நிர்வாகத் திறனற்ற திமுக அரசை வன்மையாக கண்டிப்பதுடன்,உடனடியாக 25.02.23 நடைப்பெற்ற தேர்வை ரத்துசெய்து,
வேறு ஒருநாளில், உரிய முறையில் மறுதேர்வினை நடத்திட வேண்டும் என இந்த விடியா திமுக அரசை வலியுறுத்துகிறேன்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது. 


குரூப்-2 பணிக்கான தேர்வு:


5446 பணியிடங்கள்:


மாநில அரசுத் துறைகளில் காலியாக உள்ள 5,446 காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான குரூப் 2 மற்றும் 2ஏ முதல்நிலைத் தேர்வு, கடந்த மே 21-ம் தேதி நடைபெற்றது. அதைதொடர்ந்து, தேர்வு முடிவுகளை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம்  கடந்தாண்டு நவம்பர் 8-ம் தேதி வெளியானது. அதன்படி முதல்நிலைத் தேர்வு எழுதியதில் 57,641 பட்டதாரிகள் தேர்ச்சி பெற்று முதன்மை தேர்வுக்கு தகுதி பெற்றனர்.


முதன்மை தேர்வு:


முதன்மை தேர்வுக்கு தகுதி பெற்றவர்களில் 55,071 பட்டதாரிகள் அடுத்தகட்ட முதன்மைத் தேர்வுக்கு விண்ணப்பித்தனர். அவர்களுக்கான முதன்மைத் தேர்வு தமிழகம் முழுவதும் இன்று நடைபெற உள்ளது. இதற்காக சென்னை உட்பட 20 மாவட்டங்களில் 186 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. காலையில் தமிழ் மொழி தகுதித் தாள் தேர்வும், பிற்பகலில் பொதுத் தேர்வும் நடத்தப்பட உள்ளது. தேர்வர்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. இதுகுறித்த கூடுதல் விவரங்களை www.tnpsc.gov.in, www.tnpscexams.in இணையதளங்களில் அறிந்து கொள்ளலாம் என்று டிஎன்பிஎஸ்சி தெரிவித்துள்ளது.


அண்மையில் நடந்து முடிந்த குரூப் 2 முதன்மைத் தேர்வில் குளறுபடி ஏற்பட வினாத்தாள் அச்சடிக்கும் நிறுவனத்தில் ஏற்பட்ட தவறே காரணம் என்று டிஎன்பிஎஸ்சி விளக்கம் அளித்துள்ளது.


2022-ஆம் ஆண்டு ஒருங்கிணைந்த குடிமைப்‌ பணி குரூப் 2, குரூப் 2 ஏ பணிகளுக்கான முதல் நிலை எழுத்துத் தேர்வு கடந்த 21.05.2022 அன்று நடைபெற்றது. இந்தத் தேர்வை சுமார் 9 லட்சம் மாணவர்கள் எழுதினர். இந்த தேர்வில் தேர்ச்சி பெற்ற 55,071 பேர், பிரதான தேர்வுக்கு தகுதி பெற்றனர். மாநில அரசுத் துறைகளில் காலியாக உள்ள 5,446 காலிப்பணியிடங்களை நிரப்புவதற்காக இவர்கள் தேர்வு செய்யப்பட்டனர்.


டிஎன்பிஎஸ்சி ஆலோசனை 


இந்த நிலையில் அடுத்து என்ன செய்யலாம் என்று டிஎன்பிஎஸ்சி இன்று ஆலோசனை நடத்தியது. இதில் டிஎன்பிஎஸ்சி பொறுப்பு தலைவர் முனியநாதன், தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர் அஜய் யாதவ், கண்காணிப்பாளர் உமா மகேஸ்வரி உள்ளிட்ட பல உயர் அதிகாரிகள் கலந்துகொண்டனர். 


இதில் முறைகேட்டில் ஈடுபட்ட தேர்வர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அதிகாரிகள் வலியுறுத்தி உள்ளனர். பொதுவாக முறைகேட்டில் ஈடுபடுவோர் மீது வாழ்நாள் தடை விதிக்கப்படுவது வழக்கம் ஆகும். இதுகுறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதேபோல தேர்வை ரத்து செய்யலாமா என்று ஆலோசனை நடத்தப்பட்டதாக செய்திகள் வெளியாகியுள்ளன.  




மேலும் வாசிக்க.


TNPSC Group 2: குரூப் 2 தேர்வு குளறுபடிக்கு இதுதான் காரணம்: டிஎன்பிஎஸ்சி விளக்கம்