அண்மையில் நடந்து முடிந்த குரூப் 2 முதன்மைத் தேர்வில் குளறுபடி ஏற்பட வினாத்தாள் அச்சடிக்கும் நிறுவனத்தில் ஏற்பட்ட தவறே காரணம் என்று டிஎன்பிஎஸ்சி விளக்கம் அளித்துள்ளது.


2022ம் ஆண்டு ஒருங்கிணைந்த குடிமைப்‌ பணி குரூப் 2, குரூப் 2 ஏ பணிகளுக்கான முதல் நிலை எழுத்துத் தேர்வு கடந்த 21.05.2022 அன்று நடைபெற்றது. இந்தத் தேர்வை சுமார் 9 லட்சம் மாணவர்கள் எழுதினர். இந்த தேர்வில் தேர்ச்சி பெற்ற 55,071 பேர், பிரதான தேர்வுக்கு தகுதி பெற்றனர். மாநில அரசுத் துறைகளில் காலியாக உள்ள 5,446 காலிப்பணியிடங்களை நிரப்புவதற்காக இவர்கள் தேர்வு செய்யப்பட்டனர். 


இவர்களுக்கான முதன்மைத் தேர்வுகள் பிப்ரவரி 25-ம் தேதி நடைபெற்றன. தமிழ்நாடு முழுவதும் 20 மாவட்டங்களில் காலை, மதியம் என இரு வேளைகளில் 186 தேர்வு மையங்களில் தேர்வுகள் நடந்தன. குறிப்பாக காலையில் தமிழ் மொழி தகுதித் தாள் தேர்வும், பிற்பகலில் எழுத்துத் தேர்வும் நடத்தப்பட்டது. 


இதற்கிடையே தேர்வின் காலை அமர்வில் மாநிலம் முழுவதும் சென்னை, கடலூர், சேலம், தஞ்சாவூர் உள்ளிட்ட மாவட்டங்களில் பல இடங்களில் குளறுபடி ஏற்பட்டது. சென்னை, கடலூர், சேலம், தஞ்சை மாவட்டங்களில் தேர்வர்களின் பதிவு எண்கள் மாறி இருந்தது. வினாத் தாள்களின் எண்களும் மாறி வந்ததால், தேர்வைத் தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டது. 


மதுரையில் நடந்த குரூப் 2 தேர்வு குளறுபடியின்போது கிடைத்த நேரத்தில், வெளியே வந்து புத்தகத்தை எடுத்தும், மொபைல் மூலமாகவும் விடைகளைப் பார்த்து தேர்வு எழுதியதாக தேர்வர்கள் புகார்கள் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது. 


இதைத் தொடர்ந்து காலை வினாத் தாள்கள்‌ வழங்குவதில்‌ ஏற்பட்ட காலதாமதத்தை ஈடுசெய்யும்‌ வகையில்‌ மதியத் தேர்வை அரை மணி நேரம் தாமதமக, 2.30 மணிக்குத்‌ துவங்கி 5.30 மணி வரை நடத்த டிஎன்பிஎஸ்சி உத்தரவிட்டது. 


டிஎன்பிஎஸ்சி ஆலோசனை 


இந்த நிலையில் அடுத்து என்ன செய்யலாம் என்று டிஎன்பிஎஸ்சி இன்று ஆலோசனை நடத்தியது. இதில் டிஎன்பிஎஸ்சி பொறுப்பு தலைவர் முனியநாதன், தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர் அஜய் யாதவ், கண்காணிப்பாளர் உமா மகேஸ்வரி உள்ளிட்ட பல உயர் அதிகாரிகள் கலந்துகொண்டனர். 


இதில் முறைகேட்டில் ஈடுபட்ட தேர்வர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அதிகாரிகள் வலியுறுத்தி உள்ளனர். பொதுவாக முறைகேட்டில் ஈடுபடுவோர் மீது வாழ்நாள் தடை விதிக்கப்படுவது வழக்கம் ஆகும். இதுகுறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்டது. 


அதன்படி டிஎன்பிஎஸ்சி குரூப்-2 தேர்வி நடந்த குளறுபடிகள் குறித்து விளக்கம் ஒன்றை அளித்துள்ளது. இதுதொடர்பான அறிக்கையில், “வருகைப்பதிவேட்டில் உள்ள தேர்வர்களின் பதிவெண்களின் வரிசையிலும், வினாத்தாளில் இருந்த பதிவெண்களின் வரிசையிலும் இருந்த வேறுபாட்டின் காரணமாக காலையில் வினாத்தாள்கள் வழங்குவதில் காலதாமதம் ஏற்பட்டது. இதனை ஈடுசெய்யும் பொருட்டு தேர்வர்களுக்கு கூடுதல் நேரம் வழங்கப்பட்டு முற்பகல் பதிவர்களுக்கு கூடுதல் நேரம் வழங்கப்பட்டு தேர்வுகள் நடந்தது.


பிற்பகல் தேர்வு நேரம், 2.30 மணிக்குத் துவங்கி 5.30 மணி வரை நடைபெறும் வகையில் செய்யப்பட்டது. அதன்படி மறுவரையறை பிற்பகல் தேர்வானது துவங்கப்பட்டு அனைத்து தேர்வு மையங்களிலும் சீராக எவ்வித இடர்பாடுமின்றி நடைபெற்று முடிந்தது. பிற்பகல் தேர்வில் 94.30% தேர்வர்கள் பங்கேற்றனர். முற்பகல் தேர்வானது கட்டாயத் தமிழ் தகுதித் தேர்வாகுமாகையால் இத்தேர்வில் தேர்ச்சி பெறுவது மட்டுமே போதுமானது மற்றும் இம்மதிப்பெண்கள் தரவரிசைக்கு எடுத்துக்கொள்ளப்படமாட்டாது.


இது தகுதித்தேர்வு மட்டுமே என்பதுடன் தேர்வாணையத்தின் முன் அனுபவத்தின்படி 98 சதவீதற்கும் கூடுதலான தேர்வர்கள் தேர்வாணையத்தால் நடத்தப்பட்ட தமிழ் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளனர். இருப்பினும், தேர்வர்களுக்கு முற்பகல் தேர்வில் ஏற்பட்ட சிரமங்களைக் கருத்தில் கொண்டு. தேர்வர்களின் நியாயமான கோரிக்கைகள் சரியான முறையில் விடைத்தாட்கள் திருத்தும்போது, கருத்தில் கொள்ளப்படும்.


தேர்வாணையத்தின் உடனடி அறிவுறுத்தல்களின்படி. பிற்பகல் தேர்விற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டமையால், பிற்பகல் தரவரிசைக்கு கருதப்படும் தாள்-II பொதுஅறிவுத்தாள் தேர்வானது எவ்வித இடையூறுமின்றி அனைத்து தேர்வுமையங்களிலும் சுமுகமாக நடைபெற்று முடிந்தது. மேலும் இந்த தாள்-II தேர்வர்கள் பெறும் மதிப்பெண்கள் மட்டுமே தரவரிசைக்கு எடுத்துக்கொள்ளப்படும்.


இந்த வினாத்தாள் மற்றும் விடைத்தாள் தொகுப்பிற்கும். வருகைப்பதிவேட்டிற்கும் இடையிலான வரிசை வேறுபாடே முற்பகல் தேர்வில் காலதாமததிற்குக் காரணம். இந்த வேறுபாடு ஏற்படக் காரணமான அனைவர் மீதும் தேர்வாணையம் கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளும்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.