Tirumala Tirupati: திருப்பதி ஏழுமலையான் கோயிலில் 2023ஆம் ஆண்டில் மட்டும் காணிக்கையாக ரூ.1,398 கோடி பெறப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 


திருப்பதி கோயில்:


உலக பிரசித்தி பெற்ற திருமலை திருப்பதிக்கு தினமும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வந்து தரிசனம் செய்து வருகின்றனர். இந்தியா மட்டுமின்றி பல்வேறு வெளிநாடுகளில் இருந்தும் ஏழுமலையான தரிசிக்க வருகின்றனர். திருப்பதி சென்று வந்தால் திருப்பம் ஏற்படும் என்ற நம்பிக்கையில் நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.


திருப்பதி மலைக்கு வாகனங்கள் மற்றும் மலைப்பாதையில் பாத யாத்திரையாகவும் சென்று பக்தர்கள் வழிபாடு செய்து வருகின்றனர். மேலும், இலவச தரிசனம், ரூ.300 கட்டணம், விஐபி என பல்வேறு முறைகளில் பக்தர்கள் சுவாமி  தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். 


ஏழுமலையானுக்கு குவிந்த பல கோடி:


ஏழுமலையான தரிசிக்க வரும் பக்தர்கள் உண்டியலில் தங்களின் சக்திக்கு ஏற்ப காணிக்கை செலுத்தி வருகின்றனர். 1950ஆம் ஆண்டு ஏழுமலையானுக்கு கிடைத்த உண்டியல் வருமானம் ஒரு லட்சம் ரூபாய்க்கு குறைவாகவே இருந்தது. ஆனால், 1958ஆம் ஆண்டு முதன்முறையாக ஒரு லட்சத்தை  தாண்டியது. 


 1990ஆம் ஆண்டு முதல் ஒரு கோடி ரூபாய்க்கு அதிகமான உண்டியல் வருமானம் வரத் தொடங்கியது.  அதன்பிறகு, ஒவ்வொரு ஆண்டும் அதிகரித்து வருகிறது. கொரோனா பாதிப்பால் கடந்த 2020-21ஆம் ஆண்டில் வருமானம் குறைந்தது. கொரோனா பரவல் குறைந்ததை அடுத்து, மீண்டும் கட்டுக்கடங்காத கூட்டம் திருப்பதிக்கு வரத் தொடங்கி உள்ளது. 


2023ஆம் ஆண்டில் எவ்வளவு?


அதன்படி, 2023ஆம் ஆண்டில் 2.52 கோடி பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்துள்ளனர். திருப்பதி உண்டியலில் ரூ.1,398 கோடி காணிக்கையாக செலுத்தியுள்ளதாக தேவஸ்தானம் தெரிவித்துள்ளது. தொடர்ந்து 22வது மாதமாக டிசம்பர் மாதத்தில் ரூ.100 கோடியை கடந்து உண்டியல் காணிக்கை பெறப்பட்டுள்ளது.  இந்த ஆண்டு ஜூலை மாதத்தில் அதிகபட்சமாக  ரூ.129  கோடியும், குறைந்தபட்சமாக நவம்பர் மாதத்தில் ரூ.108 கோடியும் உண்டியல் காணிக்கையாக பக்தர்கள் செலுத்தினர்.


வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு திருப்பதி ஏழுமலையான் கோயிலில் கடந்த 23ஆம் தேதி சொர்க்கவாசல் திறக்கப்பட்டது. வழக்கமாக 10 நாட்கள் சொர்க்கவாசல் திறக்கப்பட்டிருக்கும். அதன்படி, கடந்த 23ஆம் தேதி சொர்க்கவாசல் திறக்கப்பட்ட நிலையில், இன்று இரவுடன் நிறைவு பெறுகிறது.  கடந்த 2022ஆம் ஆண்டு ஏழுமலையான் கோயில் உண்டியல் வருமானம் ரூ.1,320 கோடியாக இருந்தது என்பது  குறிப்பிடத்தக்கது. 




மேலும் படிக்க


PM Modi Visit TN: பிரதமர் மோடி நாளை தமிழ்நாடு வருகை.. ரூ. 19,850 கோடி மதிப்பிலான திட்டங்கள் தொடக்கம்.. முழு விவரம் இதோ..


TN Rain Alert: அரபிக்கடலில் உருவாகும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி.. 2 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை..