இந்த வாரம் ஹரியானாவின், நூஹ் மாவட்டத்தை உலுக்கிய வன்முறைக்குப் பின்னால் 'பெரிய சதித் திட்டம்' இருப்பதாக ஹரியானா உள்துறை அமைச்சர் அனில் விஜ் கூறியுள்ளார். 'சரியான திட்டம்' இல்லாமல் இந்த முழு சம்பவமும் நடைபெற்றிருக்க வாய்ப்பில்லை என்று அவர் மேலும் கூறினார். 






நூஹ் மாவட்ட கலவரம்


ஹரியானாவின் நூஹ் மாவட்டத்தில் உள்ள, நல்ஹர் மகாதேவ் கோயிலில் ஏற்பட்ட வன்முறை வீடியோ வைரலானது. கலவரக்காரர்கள் மலைப்பகுதிகளில் இருந்து துப்பாக்கியால் சுடுவதை அந்த வீடியோ காட்டுகிறது. சம்பவத்தின்போது சுமார் 2,500 பேர் கோவிலுக்குள் சிக்கியிருந்ததாகவும், பின்னர் அவர்கள் மீட்கப்பட்டதாகவும் ஊடக அறிக்கைகள் குறிப்பிடுகின்றன. செய்தியாளர்களிடம் பேசிய அனில் விஜ், "சிலர் ஆயுதங்களை ஏற்பாடு செய்தனர், இது அவர்கள் திட்டத்தின் ஒரு பகுதி. இருப்பினும், ஆரம்ப கட்டத்தில் எந்த முடிவுக்கும் வர முடியாது. காரணங்களைக் கண்டறியவும், குற்றவாளிகளைக் கண்டறியவும் முழுமையான விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது," என்று கூறினார்.






பின்னால் பெரிய சதித்திட்டம் உள்ளது


“இதற்குப் பின்னால் பெரிய சதித்திட்டம் உள்ளது. கோயில்களுக்குப் பக்கத்தில் உள்ள மலைகளில் ஏறி, கைகளில் லத்திகளை வைத்துக் கொண்டு, நுழைவுப் பகுதியில் சுடுவது என்பது திட்டம் இல்லாமல் செய்யும் செயல் அல்ல. தடுப்புகள் அமைக்கப்பட்ட விதம், கற்கள் மற்றும் லத்திகள் சேகரிக்கப்பட்ட விதம் ஆகியவற்றை பார்க்கும்போது இது முன்கூட்டியே திட்டமிடப்பட்டது என்பது தெளிவாகிறது. இதற்கான துப்பாக்கி தோட்டாக்கள் உள்ளிட்ட ஆயுதங்களையும் சிலர் ஏற்பாடு செய்துள்ளனர். நிலைமை சீரான பிறகு இணைய சேவைகள் மீட்டமைக்கப்படும்" என்று மாநில உள்துறை அமைச்சர் பிடிஐ-இடம் கூறினார்.


தொடர்புடைய செய்திகள்: தொடரும் ஆதிக்க வெறி.. பழங்குடியின இளைஞரை துப்பாக்கியால் சுட்ட பா.ஜ.க. எம்.எல்.ஏ. மகன்..! என்ன நடந்தது?






கைது நடவடிக்கைகள்


இதுவரை எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து செய்தியாளர்களிடம் பேசிய விஜ், மொத்தம் 102 எஃப்ஐஆர்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக கூறினார். 202 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர், 80 பேர் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளனர் என்றார். "துப்பாக்கிச் சூடு சம்பவங்கள் முன்கூட்டியே திட்டமிடப்பட்டவை என்று எங்களுக்குத் தகவல் வருகிறது. தகவல் சேகரித்து, காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுப்போம். தேவைப்படும்போது, சம்பவம் தொடர்பாக ஏதேனும் தேவைகள் இருந்தால் விசாரணை செய்வோம்," என்று அவர் மேலும் கூறினார்.






உளவுத்துறை தோல்வி


இந்த சம்பவத்தின் உளவுத்துறை தோல்வி குறித்து பேசுகையில், "நுஹ் வன்முறை குறித்து எந்த உளவுத்துறை செய்தியும் எனக்கு கிடைக்கவில்லை. நான் ஏசிஎஸ் (ஹோம்) மற்றும் டிஜிபியிடம் கூட கேட்டேன், அவர்களும் தங்களுக்கு தகவல் இல்லை என்று சொன்னார்கள். இப்போது, ஒரு சிஐடி இன்ஸ்பெக்டர் ஒருவர் தனக்கு எல்லாம் முன்கூட்டியே தெரியும்” என்று கூறி வருகிறார். அவருக்கு தெரிந்திருந்தால் இதைப் பற்றி அவரிடம் யார் தெரிவித்தது?," என்று கேட்டார். நுஹ் மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை தொழுகைக்கு உரிய ஏற்பாடுகளை செய்யுமாறு தலைமைச் செயலர் மற்றும் பிற அதிகாரிகளிடம் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளதாக அமைச்சர் மேலும் தெரிவித்தார். நூஹ் காவல்துறை கண்காணிப்பாளர் வருண் சிங்லா இடமாற்றம் குறித்து கேட்டபோது, அவர் விடுப்பில் இருப்பதால் நிலைமையை கையாளும் பொறுப்பு ஐபிஎஸ் நரேந்திர பிஜர்னியாவுக்கு வழங்கப்பட்டதாக அவர் கூறினார்.