ஆகஸ்ட் 8 ஆம் தேதி முதல் 10 ஆம் தேதி வரை பிரதமர் மோடி மீது கொண்டு வரப்பட்ட நம்பிக்கையில்லா தீர்மானம் மீது விவாதிக்கப்படும் என்றும் 10 ஆம் தேதி பிரதமர் மோடி இந்த விவாதங்களுக்கு பதிலளிப்பார் என்றும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. 


வழக்கமாக நாடாளுமன்ற கூட்டம் ஆண்டுக்கு மூன்று முறை நடக்கும். பட்ஜெட் கூட்டத்தொடர், மழைக்கால கூட்டத்தொடர், குளிர்கால கூட்டத்தொடர். அந்த வகையில் பட்ஜெட் நாடாளுமன்ற கூட்டத்தொடர் ஏற்கனவே நடைபெற்று முடிந்தது. நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் ஜூலை 20 ஆம் தேதி தொடங்கி ஆகஸ்ட் 11ஆம் தேதி வரை நடைபெறுகிறது.


இந்த மழைக்கால கூட்டத்தொடர் தொடங்கிய நாள் முதலே எதிர்க்கட்சிகள் தரப்பில் முன்வைக்கப்பட்ட ஒரு விஷயம் மணிப்பூர் விவகாரம்தான். மணிப்பூரில் பழங்குடியின பெண்கள் இருவர் பெரும் கும்பலால் நிர்வாணப்படுத்தப்பட்டு, ஊர்வலமாக அழைத்துச் செல்லப்பட்டதோடு, கூட்டுப் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டனர். இதுதொடர்பான சம்பவம் சர்வதேச அளவில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுதொடர்பாக நாடாளுமன்றத்தில் விவாதிக்க வேண்டும் என எதிர்க்கட்சிகள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். இதனால், நாடாளுமன்ற மழைக்கால கூட்டதொடர், தொடங்கியது முதலே அவை நடவடிக்கைகள் முடங்கி வருகிறது.


நாடாளுமன்ற கூட்டத்தொடரில் தொடர்ந்து எதிர்க்கட்சிகள் தரப்பில் மணிப்பூர் விவகாரம் தொடர்பாக விவாதிக்கப்பட வேண்டும் என கூறப்பட்டு வந்த நிலையில் அதனை பிரதமர் மோடி கண்டுக்கொள்ளாமல் இருப்பதை தொடர்ந்த மத்திய அரசுக்கு எதிராக மக்களவையில் நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வர எதிர்க்கட்சிகள் திட்டமிட்டனர். இதனை தொடர்ந்து இதற்கான நோட்டீஸ் எதிர்க்கட்சிகள் தரப்பில் வழங்கப்பட்டது.


மணிப்பூர் விவகாரத்தில் விவாதத்தை அனுமதிக்காதது, நம்பிக்கை இல்லா தீர்மானத்தின் மீது விவாதத்தை தொடங்காதது ஆகியவற்றுக்கு எதிர்ப்பு தெரிவித்து கடந்த வியாழக்கிழமை கருப்பு உடை அணிந்து கூட்டத்தொடரில் எதிர்க்கட்சியினர் பங்கேற்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. 


இந்நிலையில் நாடாளுமன்றத்தில் வரும் 8 ஆம் தேதி முதல் 10 ஆம்  தேதி வரை தொடர்ந்து 3 நாட்கள், மத்திய அரசுக்கு எதிரான நம்பிக்கை இல்லா தீர்மானத்தின் மீது விவாதம் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இது நம்பிக்கை இல்லா தீர்மானம் என்பதால் அனைத்து விவாதங்களுக்கும் ஆகஸ்ட் 10 ஆம்  தேதி பிரதமர் மோடி பதிலளித்து உரையாற்றுவார் எனவும் கூறப்பட்டுள்ளது. அப்போது மணிப்பூர் விவகாரம் குறித்து பிரதமர் மோடி பேச வேண்டும் என எதிர்க்கட்சிகள் வலியுறுத்தவும் முடிவு செய்துள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை சபாநாயகர் அறிவித்துள்ளார்.  


Love Marriage: கதிகலக்கத்தில் காதலர்கள்: இனி காதல் திருமணத்திற்கு பெற்றோர் சம்மதம் கட்டாயம்? வருகிறது புதிய சட்டம்?


Manipur: சரின்னு சொல்லுங்க; ரூ.10 கோடி மதிப்பிலான அத்தியாவசிய பொருட்கள் ரெடி! - மணிப்பூருக்கு கடிதம் எழுதிய முதல்வர் ஸ்டாலின்