இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் சுமார் 10 ஆண்டுகளுக்கு மேலாக பணியாற்றிய Megha-Tropiques-1 (MT1) செயற்கைக்கோளை மீண்டும் பூமியின் வளிமண்டலத்திற்கு கொண்டு வந்து அதனை அழிக்க திட்டமிட்டுள்ளது.


 Megha-Tropiques-1, வெப்பமண்டல வானிலை மற்றும் காலநிலை ஆய்வுகளுக்காக இஸ்ரோ மற்றும் பிரெஞ்சு விண்வெளி நிறுவனமான CNES ஆகியவற்றால் உருவாக்கப்பட்ட ஒரு கூட்டுப் பணியாகும். இது அக்டோபர் 12, 2011 அன்று லோ எர்த் ஆர்பிட்டில் (Low Earth Orbit) ஏவப்பட்டது. இந்த பணி ஆரம்பத்தில் மூன்று ஆண்டுகளுக்கு செயல்பட திட்டமிடப்பட்டது, ஆனால் 10 அண்டுகாலமாக காலநிலை பற்றிய முக்கிய தரவுகளை தொடர்ந்து வழங்கியதால் அதன் பணி நீட்டிக்கப்பட்டது. இந்த செயற்கைக்கோள் 10 ஆண்டுகளுக்கு மேலாக உலகளவில் இருக்கும் காலநிலை மாற்றங்கள் தொடர்பான தரவுகளை வழங்கி வருகிறது என இஸ்ரோ தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.  


வானிலை மற்றும் கடல்சார் செயற்கைக்கோள் தரவு காப்பக மையத்தின்படி, வெப்பமண்டலமானது சூரியனிடமிருந்து அதிக கதிர்வீச்சுக்களை உள்வாங்குகிறது. அதாவது கதிர்வீச்சை மீண்டும் வளிமண்டலத்தில் செலுத்துவது என்பது உள்வாங்குவதை விட குறைவாக இருக்கிறது என கூறுகின்றனர். வளிமண்டலம் மற்றும் பெருங்கடல்களின் இயக்கத்தால் இந்த வெப்பம் பல பகுதிகளுக்கு பரவுகிறது.  


இஸ்ரோவின் மெகா-டிராபிக்யூஸ்-1 அழிக்கப்படும் காரணம் என்ன?


இஸ்ரோ, அந்த செயற்கைக்கோளின் ஆயுட்காலம் முடிவடைந்ததைத் தொடர்ந்து, UNIADC க்கு  உறுதியளித்ததன் ஒரு பகுதியாக, செயற்கைக்கோளை செயலிழக்கச் செய்கிறது. UN வழிகாட்டுதல்கள்படி, ஆயுட்காலம் முடிவடைந்த செயற்கைக்கோள்களை அதன் சுற்றுப்பாதையிலிருந்து அகற்ற வேண்டும் அல்லது 25 ஆண்டுகளுக்கு குறைவாக உள்ள சுற்றுப்பாதைக்கு கொண்டு வரவேண்டும் என கூறப்பட்டுள்ளது.  


இப்படி இல்லை என்றால் அந்த செயற்கைக்கோள் தானாக அழியும் வரை அதனை அப்படியே விட்டுவிடலாம். ஆனால் சுமார் 1000 கிலோ எடையுள்ள MT1, 867 கிமீ உயரத்தில் 20 டிகிரி சாய்வான சுற்றுப்பாதையில் 100 ஆண்டுக்கு மேல் செயல்படும். விண்கலத்தில் இன்னும் சுமார் 125 கிலோ எரிபொருள் உள்ளது, எனவே விபத்துக்குள்ளாகும் வாய்ப்புகள் அதிகம் என்பதால் இஸ்ரோ அதன் சுற்றுப்பாதையை மாற்றுவது அவசியமாக கருதுகிறது.


 முழுமையாகக் கட்டுப்படுத்தப்பட்ட வளிமண்டலத்தில் மீண்டும் நுழைவதற்கு எஞ்சிய எரிபொருள் போதுமானதாக இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது. கட்டுப்படுத்தப்பட்ட மறு நுழைவின்போது, இலக்கு வைக்கப்பட்ட பாதுகாப்பான மண்டலத்திற்குள் தாக்கம் ஏற்படுவதை உறுதி செய்வதற்காக மிகக்குறைந்த உயரத்திற்குச் கொண்டு வரப்படும்.


வழக்கமாக, பெரிய செயற்கைக்கோள்கள் மீண்டும் நுழையும் போது aero-thermal fragmentation- இருந்து தப்பிக்கக்கூடியவை இருப்பினும்  தரை விபத்து அபாயத்தை குறைக்க கட்டுப்படுத்தப்பட்ட மறு நுழைவுக்கு உட்படுத்தப்படுகின்றன. அத்தகைய செயற்கைக்கோள்கள் அனைத்தும் கட்டுப்படுத்தப்பட்ட மறு-நுழைவுக்கு வடிவமைக்கப்பட்டுள்ளன” என இஸ்ரோ தெரிவித்துள்ளது.


செயலிழந்த விண்கலத்தின் சுற்றுப்பாதையை படிப்படியாக குறைக்க இஸ்ரோ ஆகஸ்ட் 2022 முதல் 18 முறை சுற்றுப்பாதை மாற்றத்தை செய்துள்ளது. இறுதி இரண்டு சுற்றுப்பாதை மாற்றங்கள், பூமிக்குள் மீண்டும் நுழைவதற்கும் வளிமண்டலத்தில் எரிவதற்கும் வழிவகுக்கும் என கூறப்படுகிறது. இஸ்ரோ பசிபிக் பெருங்கடலில் மக்கள் வசிக்காத பகுதியை MT1-க்கான இலக்கு மறு நுழைவு மண்டலமாக தேர்ந்தெடுத்துள்ளது. இன்று மாலை 4:30-7:30 க்கு இடையில் இந்த நிகழ்வு நடைபெற உள்ளது.