கொல்கத்தாவிலிருந்து லடாக் வரை டீ வியாபாரி ஒருவர் நடந்தே சென்ற சம்பவம் இணையவாசிகள் இடையே பேசுபொருளாக மாறியுள்ளது. 


பொதுவாக கனவுகளுக்கு எல்லையே இல்லை என சொல்வார்கள்.அதனை நிறைவேற்றி விட்டால் அதன் எல்லை விரிவடையுமே தவிர சுருங்காது. குறிப்பாக பயணம் குறித்த கனவுகள் என்பது வயது வித்தியாசமில்லாமல் நம் அனைவருக்கும் உண்டு. எப்படியாவது வாழ்ந்து முடிப்பதற்குள் குறிப்பிட்ட அந்த இடத்தை நேரில் சென்று பார்த்து விட வேண்டும் என பலரும் எண்ணுவார்கள். ஆனால் நிதி நெருக்கடி, வயது முதிர்வு, பணிச்சூழல் போன்றவை காரணமாக அவை தள்ளிக்கொண்டே செல்லும். 


அப்படியான வாழ்க்கையில் நாம் காண வேண்டிய இடங்களில் ஒன்று தான் லடாக். பைக் ரைடர்களின் டெஸ்டினேஷன் என்றழைக்கப்படும் லடாக் காற்று, இயற்கை நதி நீர், பயணம் என அனைத்திற்கு சிறந்த ஒன்று. கடந்தாண்டு கொரொனா ஊரடங்கு நிறைவடைந்த போது பலரும் லடாக் பயணம் பற்றி பேச அதுகுறித்த மீம்ஸ்களும் வைரலானது. சிலர் பைக்கிலேயே பயணம் மேற்கொள்ள சிலர் நடந்து செல்ல முயன்ற வெளியான செய்திகளும் லடாக் மீதான எதிர்பார்ப்பை அனைவருக்கும் ஏற்படுத்தியிருந்தது. 


அப்படி லடாக் செல்ல விருப்பப்பட்டவர்களில் ஒருவர் தான் சிங்கூரின் மிலன் மாஜி. மேற்கு வங்கத்தில் உள்ள தொழிற்சாலை ஒன்றில் பணியாற்றி வந்த அவர் கொரோனாவால் வேலை இழந்தார். இதனைத் தொடர்ந்து ஹூக்ளி மாவட்டம் கமர்குண்டுவில் உள்ள போலீஸ் சூப்பிரண்டு அலுவலகம் முன்பு டீக்கடை நடத்தி வரும் தனது தந்தைக்கும் உதவியாக இருந்து வந்த மிலனுக்கு லடாக் செல்ல வேண்டும் என்ற ஆசை மேலோங்கி இருந்தது. 


ஆனால் தந்தை அனில் மாஜியால் தனக்கு மோட்டார் சைக்கிள் வாங்க முடியாது என்பதை உணர்ந்த அவர், தான் இளைஞனாக இருப்பதால் நடந்தே லடாக் செல்லலாம் என முடிவெடுத்தார். இதனையடுத்து கடந்த பிப்ரவரி 22 ஆம் தேதியன்று கொல்கத்தா ஹவுரா பாலத்தில் இருந்து தனது பயணத்தைத் தொடங்கிய மிலன் ரூ.2,100 பணத்துடன் வீட்டிலிருந்து சில மருந்துகளையும் சில குளிர்கால ஆடைகளையும் உடன் எடுத்துச் சென்றார். 




ஹவுராவிலிருந்து ஜார்கண்ட், பீகார், உத்தரபிரதேசம், உத்தரகாண்ட், ஹரியானா, இமாச்சல் பிரதேசம் வழியாக நாள் ஒன்றுக்கு 30 முதல் 45 கி.மீ வரை நடந்த அவர் மே 15 ஆம் தேதி லடாக்கில் உள்ள கர்துங்லா கணவாயை அடைந்தார். அங்கு சென்றதும் தேசியக் கொடியை ஏற்றி பெருமிதம் கொண்டதாகவும், அதன்பின் வீட்டிற்கு போன் செய்து தனது கனவு நனவாகிவிட்டதாகவும் பெற்றோர்களிடம் கூறியதாகவும் மிலன் கூறியுள்ளார். 


100 நாட்களில் லடாக்கை அடைவதே அவரின் இலக்காக இருந்த நிலையில் 82 நாட்களிலேயே சுமார் 2000 கி.மீ. நடந்து தனது இலட்சியத்தை நிறைவேற்றியுள்ளார். இந்த பயணம் உணவுக்கு பஞ்சமில்லாமல் இருந்தது. வழியில் பல மக்களும், சமூக அமைப்புகளும் தனக்கு உதவி செய்ததாகவும் மிலன் தெரிவித்துள்ளார். அதேசமயம்  தனது மகன் லடாக் செல்வது தனக்குத் தெரியாது என தந்தை அனில் மாஜி கூறியதோடு,மிலனை நினைத்துப் பெருமைப்படுவதாகவும் தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார்.