தமிழ்நாட்டில் தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள 23 சுங்கச் சாவடிகளில் செப்.01 முதல் சுங்கக் கட்டணம் உயர்த்தப்படுவதாக மத்திய அரசின் தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் அறிவிப்பு வெளியிட்டு உள்ளது.
தமிழ்நாட்டில் உள்ள 48 சுங்கச் சாவடிகளில் முதல்கட்டமாக 24 சுங்கச் சாவடிகளில் சுங்கக் கட்டணம் கடந்த ஏப்ரல் 01-ம் உயர்த்தப்பட்டது. இந்த நிலையில் தற்போது இரண்டாம் கட்டமாக 23 சுங்கச் சாவடிகளில் கட்டணம் உயர்த்தப்பட உள்ளது. 


கொரோனா முடக்கம் மற்றும் பெட்ரோல்-டீசல் விலை உயர்வால் அத்தியாவசிய பொருட்களின் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. ஊரடங்கால் பலர் வருவாய் இழந்து வறுமை கோட்டுக்கு கீழ் தள்ளப்பட்டு உணவு பொருட்களை வாங்கக்கூட வழி இன்றி திண்டாடி வருகின்றனர். இந்த சூழலில் தேசிய நெடுஞ்சாலைகளுக்கான சுங்கக் கட்டணத்தை உயர்த்துவது அத்தியாவசிய பொருட்களின் விலையை மேலும் அதிகரிக்கும். 



இதுதொடர்பாக எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மாநில தலைவர் நெல்லை முபாரக் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
"சுங்கக்கட்டண உயர்வால்  பொதுமக்கள் பெரும் துயரங்களை சந்திக்க வேண்டிய சூழல் ஏற்படும். தமிழகத்தை பொறுத்தவரை பெரும்பாலான சுங்க சாவடிகளில்  முறையான சாலை பராமரிப்பு இல்லாமலும்,  சாலை உபயோகிப்பாளர்களுக்கான அடிப்படை வசதிகள் கூட இல்லாத சூழல் தான் தொடர்ந்து நீடித்து வருகின்றது. இதனை தேசிய நெடுஞ்சாலைத் துறை கண்காணிப்பது இல்லை.



நெல்லை முபாரக், மாநிலத் தலைவர், எஸ்.டி.பி.ஐ.


 


அதேவேளையில் ஆண்டுதோறும் இரு கட்டங்களாக கட்டணம் மட்டும் உயர்த்தப்பட்டு வருகின்றது.
மேலும் வாகனங்கள் அதிகமாகும் பொழுது அதன் அடிப்படையில் கணக்கிட்டு சுங்க கட்டணத்தை குறைத்து வசூலிக்க வேண்டும் என்ற சுங்க சாவடிகளுக்கான நிபந்தனையும் காற்றில் பறக்கவிடப்படுகிறது.
நெடுஞ்சாலை உருவாக்கத்தில் பங்கேற்ற தனியார் நிறுவனங்கள், பராமரிப்பில் ஈடுபடும் நிறுவனங்கள் ஆகியன சுங்க கட்டணம் எவ்வளவு வசூலிக்க வேண்டும்? காலக்கெடு என்ன? என்பதற்கான எந்த வரையறையுமின்றி சுங்கக் கட்டணம் என்ற பெயரில் கட்டணக் கொள்ளை வரைமுறையின்றி நாடு முழுவதும் தொடர்கிறது.


ஏற்கனவே விற்பனை வரி, ஜிஎஸ்டி ஆகியவற்றால் திண்டாட்டத்தில் இருக்க, இந்த சுங்கக் கட்டண உயர்வு உள்ளூர் வணிகத்தில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தும். அதன் தாக்கம் விலைவாசி உயர்வுக்கு வழிவகுத்து, மக்களின் வாங்கும் சக்தி குறையவும் வழிவகுக்கும். விற்பனை மந்தம் காரணமாகவே நாட்டில் பொருளாதார மந்தநிலை ஏற்பட்டுள்ள நிலையில், அதனை அதிகரிக்கும் வகையிலான இதுபோன்ற சுங்கக் கட்டண உயர்வுகளை அரசு தவிர்க்க வேண்டும். 



ஆகவே, சுங்கக் சாவடி கட்டண வசூலிப்பை ஒன்றிய மற்றும் மாநில அரசுகள் முறைப்படுத்த வேண்டும். நெடுஞ்சாலைகள் பராமரிப்பை தனியாரிடமிருந்து விடுத்து அரசே ஏற்று நடத்தி சுங்கச்சாவடி இல்லாத சாலையாக நெடுஞ்சாலைகளை மாற்ற வேண்டும் என வலியுறுத்திக் கேட்டுக்கொள்வதோடு, தமிழக சுங்கச் சாவடிகளில்  தற்போது அறிவிக்கப்பட்டுள்ள சுங்கக் கட்டண உயர்வை திரும்பப்பெற வேண்டும் எனவும் கேட்டுக்கொள்கிறேன்." எனக் குறிப்பிட்டு உள்ளார்.