பீகாரில் இடஒதுக்கீடு வரம்பை உயர்த்தி நிதிஷ் குமார் அரசு கொண்டு வந்த சட்டத்தை பாட்னா உயர் நீதிமன்றம் ரத்து செய்திருந்தது. இந்த நிலையில், உயர் நீதிமன்ற உத்தரவுக்கு தடை விதிக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது.


பீகாரில் உயர்த்தப்பட்ட இடஒதுக்கீடு வரம்பு: சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப்பட்டு, அதன் முடிவுகள் அறிவிக்கப்பட்டது. கடந்தாண்டு அக்டோபர் மாதம் 2ஆம் தேதி, சாதிவாரி கணக்கெடுப்பு தொடர்பான முதற்கட்ட விவரங்களை பிகார் அரசு வெளியிட்டது. 


அதன்படி, பிகார் மக்கள் தொகையில் 60 சதவிகிதத்திற்கும் மேற்பட்டோர் பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பை சேர்ந்தவர்கள். 20 சதவிகிதத்திற்கும் மேற்பட்டோர் பட்டியலின, பழங்குடியின வகுப்பை சேர்ந்தவர்கள் என தெரிவிக்கப்பட்டது.


மாநில மக்கள் தொகையில் 15.5 சதவகிதத்தினர் பொது பிரிவினர் என கண்டறியப்பட்டது. இதை தொடர்ந்து, சாதிவாரி மக்கள் தொகைக்கு ஏற்ப இட ஒதுக்கீட்டு வரம்பை உயர்த்த முடிவு செய்து, பிகார் அமைச்சரவை அதற்கு ஒப்புதல் அளித்தது.


நீதிமன்ற உத்தரவால் சமூக நீதி அரசியலுக்கு பின்னடைவு: இடஒதுக்கீடு வரம்பை 50 சதவிகிதத்தில் இருந்து 65 சதவிகிதமாக உயர்த்த பிகார் சட்டப்பேரவையில் மசோதா நிறைவேற்றப்பட்டது. பட்டியல் சமூக மக்களுக்கு 16 சதவிகிதத்தில் இருந்து 20 சதவிகிதமாக இடஒதுக்கீடு உயர்த்தப்பட்டது.


பிற்படுத்துப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட சமூக மக்களுக்கு 43 சதவிகித இட ஒதுக்கீடு வழங்க மசோதா வழிவகை செய்யப்பட்டது. ஆனால், இடஒதுக்கீடு வரம்பை உயர்த்திய பீகார் அரசின் நடவடிக்கையை பாட்னா உயர் நீதிமன்றம் கடந்த ஜூன் மாதம் ரத்து செய்தது. 


உயர் நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் பீகார் அரசு சார்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த இந்திய தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட், நீதிபதிகள் ஜே.பி. பார்திவாலா மற்றும் மனோஜ் மிஸ்ரா ஆகியோர் கொண்ட அமர்வு, உயர் நீதிமன்ற உத்தரவுக்கு இடைக்கால தடை விதிக்க மறுத்துவிட்டது.


ஆனால், வழக்கை விசாரிக்க ஒப்பு கொண்டது. இந்த வழக்கின் இறுதிக்கட்ட விசாரணை வரும் செப்டம்பர் மாதம் நடைபெறும் என உச்ச நீதிமன்றம் அறிவித்துள்ளது.