கர்நாடகாவில் ஹிஜாப் தடை உத்தரவுக்கு எதிரான மேல்முறையீட்டு மனுவை விசாரிக்க ஹோலி விடுமுறைக்குப் பின்னர் அமர்வு உருவாக்கப்படும் என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. 


ஹிஜாப் தடை


கர்நாடகாவில் கடந்தாண்டு இஸ்லாம் மாணவிகள் ஹிஜாப் அணிந்து வகுப்புகளில் கலந்துக் கொள்ளக்கூடாது என உடுப்பி மாவட்டத்தில் உள்ள அரசு பி.யூ. கல்லூரி நிர்வாகம் உத்தரவிட்டது. இதற்கு இஸ்லாம் மாணவிகள் எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தினர். ஆனால் இதனை கண்டித்து இந்து அமைப்பினரும் போராட்டம் நடத்தியதால் கர்நாடகாவின் மாண்டியா, சிவமொக்கா, பெலகாவில் பகுதிகளில் கடும் மோதல் ஏற்பட்டது. 


இதனைத் தொடர்ந்து பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை  விடப்பட்டு இயல்புநிலை திரும்பிய பிறகு கல்வி நிலையங்கள் திறக்கப்பட்டது. இந்த சம்பவத்தால் கர்நாடகாவில் பள்ளி, கல்லூரிகளில் மத அடையாள ஆடை, கயிறு உள்ளிட்டவற்றை அணிந்து வர மாநில அரசு தடை விதித்து அதிரடி உத்தரவை பிறப்பித்தது.


இதனால் அதிருப்தியடைந்த இஸ்லாம் மாணவிகள் கர்நாடக உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். ஆனால் இந்த வழக்கில் மாணவிகளின் தாக்கல் செய்த மனு தள்ளுபடி செய்யப்பட்டது. இதன்பிறகு  உயர்நீதிமன்ற உத்தரவை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் அந்த மாணவிகள் மேல்முறையீடு செய்தனர். இந்த வழக்கை விசாரித்த 2 நீதிபதிகள் அமர்வு மாறுபட்ட தீர்ப்பு வழங்கியது. இதனால் வழக்கு அதிக நீதிபதிகள் கொண்ட அமர்வுக்கு மாற்றப்பட்டுள்ளது. அதன் மீது விசாரணை விரைவில் தொடங்க உள்ளதாக கூறப்படுகிறது.


நெருங்கும் இறுதியாண்டு தேர்வு 


இந்த நிலையில் தான், கர்நாடகாவைச் சேர்ந்த சில இஸ்லாம் மாணவிகள், உச்சநீதிமன்றத்தில் புதிய மனு ஒன்றை தாக்கல் செய்தனர். அதில், கர்நாடகாவில் வரும் மார்ச் மாதம் பள்ளி, கல்லூரிகளில் இறுதியாண்டு தேர்வுகள் தொடங்குகின்றது. இதனால் தங்களுக்கு ஹிஜாப் அணிந்து தேர்வு எழுத அனுமதிக்கும்படி கர்நாடக அரசுக்கு உத்தரவிட வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தது. 


இந்த கோரிக்கை உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் அமர்வில் முன்வைக்கப்பட்டது. அப்போது மார்ச் 9 ஆம் தேதி கர்நாடகாவில் பள்ளி தேர்வுகள் தொடங்குகின்றது. இதில் இஸ்லாம் மாணவிகள் ஹிஜாப் அணிந்து தேர்வு எழுத அனுமதிக்காவிட்டால்  அவர்களின் எதிர்காலம் பாழாகிவிடும் என மாணவிகள் சார்பில் ஆஜரான வக்கீல், சாதன் பராசத் தெரிவித்தார்.


மேலும் பெரும்பாலான மாணவிகள் தனியார் பள்ளிகளில் படிக்கிறார்கள்.  தேர்வுகள் அரசு பள்ளிகளில் நடைபெறும் என்பதால் அங்கு ஹிஜாப் அணிந்து தேர்வு எழுத அனுமதியில்லை. எனவே இதனை அவசர வழக்காக கருதிக் கொண்டு மாணவிகள் தாக்கல் செய்த மனு மீது உடனடியாக விசாரணை நடத்த வேண்டும்  என்றும் கூறினார். ஆனால் இந்த முறையீட்டை நிராகரித்த தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் ஹோலி பண்டிகையை முன்னிட்டு உச்சநீதிமன்றத்துக்கு விடுமுறை விடப்படுகிறது. அதன் பிறகு இந்த மனுவை விசாரிக்க அமர்வு உருவாக்கப்படும் என்று தெரிவித்தார்.