நாட்டில் பாதுகாப்பான பணிச்சூழலை மேம்படுத்துவதற்கும், அனைத்து அம்சங்களிலும் மக்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்கும் ஆண்டுதோறும் மார்ச் 4 ஆம் தேதி தேசிய பாதுகாப்பு தினம் அனுசரிக்கப்படுகிறது. பாதுகாப்பு நடவடிக்கைகள் மற்றும் நெறிமுறைகள் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்த இந்த நாள் குறிக்கப்படுகிறது. 



தேசிய பாதுகாப்பு தினம் 2023க்கான கருப்பொருள் என்ன?


2023 தேசிய பாதுகாப்பு தினத்தின் கருப்பொருள் '‘Our Aim – Zero Harm'.


1965ம் ஆண்டில், இந்திய அரசின் தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகமானது தொழில்துறை பாதுகாப்பு குறித்த முதல் மாநாட்டை ஏற்பாடு செய்தது. டிசம்பர் 11 முதல் டிசம்பர் 13 வரை நடந்த இந்த மாநாட்டில் முதலாளிகளின் அமைப்புகள், மாநில அரசுகள் மற்றும் பிற தொழிற்சங்கங்கள் மற்றும் நிறுவனங்கள் பங்கேற்றன. மாநாட்டில், தேசிய மற்றும் மாநில பாதுகாப்பு கவுன்சில்கள் அமைப்பதன் அவசியத்தை பல்வேறு அமைப்புகள் வலியுறுத்தின.


தேசிய பாதுகாப்பு கவுன்சிலுக்கான திட்டம் பிப்ரவரி 1966ல் ஸ்டாண்டிங் லேபர் கமிட்டியின் 24வது அமர்வால் ஏற்றுக்கொள்ளப்பட்டது. அந்த ஆண்டு மார்ச் 4 அன்று, தொழிலாளர் அமைச்சகம் பாதுகாப்பு கவுன்சிலை அமைத்தது, இது முதலில் சங்கங்கள் பதிவின் கீழ் ஒரு அமைப்பாக மட்டுமே பதிவு செய்யப்பட்டது. பின்னர் இது ஒரு பொது அறக்கட்டளையாக இயங்கி வந்தது. தேசிய பாதுகாப்பு தினம் முதன்முதலில் 1971 இல் அனுசரிக்கப்பட்டது. தேசிய பாதுகாப்பு கவுன்சில் நிறுவப்பட்டதன் நினைவாக மற்றும் பாதுகாப்பு விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக இந்த நாள் அனுசரிக்கப்படுகிறது.


தேசிய பாதுகாப்பு தினம்: முக்கியத்துவம்


விபத்துகளைத் தடுப்பதில் பாதுகாப்பு நடவடிக்கைகளின் முக்கியத்துவத்தையும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் மக்களுக்கு எடுத்துரைக்க இந்த நாள் ஒரு வாய்ப்பாக அமைகிறது. பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் சுற்றுச்சூழலுக்கான இயக்கத்தின் (Safe,Health and Environment) செயல்படும் வரம்பை அதிகரிப்பதற்கும் இந்த வாய்ப்பு உதவுகிறது. அது தவிர பல்வேறு தொழில்துறைகளைச் சேர்ந்த பங்குதாரர்களை ஒன்றிணைத்து அவர்களை இந்த இயக்கத்தில் பங்கேற்பதை ஊக்குவிப்பதும் இந்த நாளின் ஒரு அம்சமாகச் செயல்படுத்தப்படுகிறது. செயல்பாடுகளை ஊக்குவிப்பதோடு, பாதுகாப்பான பணியிடத்தை உருவாக்க போதுமான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்பதை ஊழியர்கள், முதலாளிகள் மற்றும் அனைவருக்கும் நினைவூட்ட இந்த நாள் ஒரு வாய்ப்பாக அமைகிறது. 


தேசிய பாதுகாப்பு தினத்தன்றைக்கான செயல்பாடுகள்: 


தேசிய பாதுகாப்பு தினத்தின் நோக்கங்களை அடைய, பதாகைகள், பேட்ஜ்கள் மற்றும் விழிப்புணர்வு அட்டைகள் போன்றவற்றை விநியோகிக்கலாம் இந்த பொருட்கள் தேசிய பாதுகாப்பு கவுன்சிலால் வடிவமைக்கப்பட்டு, தயாரிக்கப்பட்டு, விநியோகிக்கப்படுகின்றன மற்றும் அவற்றிலிருந்து கிடைக்கப்பெறும் நிதி என்எஸ்சியின் மேம்பாட்டுக்காகப் பயன்படுத்தப்படுகிறது.


இது தவிர பாதுகாப்பை மையக் கருப்பொருளாகக் கொண்டு , கருத்தரங்குகள், கலந்துரையாடல்கள் மற்றும் பொது நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன.