பீகாரில் சட்டமன்றத் தேர்தல் வர உள்ள நிலையில், தேர்தல் ஆணையம் அங்கு வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் மேற்கொண்டது. அதில் 65 லட்சம் வாக்காளர்களை நீக்கியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், எதிர்க்கட்சிகள் உள்ளிட்டவைகள் வழக்கு தொடர்ந்தன. அந்த வழக்கில், நீக்கப்பட்ட வாக்காளர்களின் விவரங்களை வெளியிடவும், ஆதாரை அடையாள ஆவணமாக ஏற்கவும், தேர்தல் ஆணையத்திற்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
நீதிபதிகளின் உத்தரவு என்ன.?
இந்த வாரத்தின் தொடக்கத்தில், பீகார் வாக்காளர் சிறப்பு துவிர திருத்தம் தொடர்பான வழக்கில் பிராமண பத்திரம் தாக்கல் செய்த தேர்தல் ஆணையம், சட்டப்படி, தங்களால் நீக்கப்பட்ட 65 லட்சம் பேரின் விவரங்களை மனுதாரர்களுக்கு வழங்க வேண்டிய அவசியம் இல்லை என தெரிவித்திருந்தது. இந்நிலையில், இந்த வழக்கு இன்று உச்சநீதிமன்ற நீதிபதிகள் சூர்யகாந்த், ஜாய்மாலா ஆகியோர் அமர்வில் மீண்டும் விசாரணைக்கு வந்தது.
அப்போது, வாக்காளர் பட்டியலில் நீக்கப்பட்ட 65 லட்சம் பேரின் பெயர்கள் தொடர்பாக நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். அதற்கு, இடம் பெயர்ந்தவர்கள், இறந்தவர்கள் மற்றும் பெயர் மாற்றம் செய்தவர்களின் பெயர்கள் நீக்கப்பட்டதாக தேர்தல் ஆணையத்தின் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து, நீக்கப்பட்டவர்களின் பெயர்களை இணையத்தில் வெளியிடலாமே என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.
அதற்கு பதிலளித்த தேர்தல் ஆணையம், வாக்காளர்களின் தரியுரிமை பாதுகாக்கப்பட வேண்டும் என்றும், சில முடிவுகளை எடுக்க தங்களுக்கு அதிகாரம் உள்ளது எனவும் தெரிவித்தது.
இதைத் தொடர்ந்து, பீகார் வாக்காளர் பட்டியலில் நீக்கப்பட்ட 65 லட்சம் பேரின் விவரங்களை தேர்தல் ஆணையம் அதன் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் ஆகஸ்ட் 19-ம் தேதிக்குள் வெளியிட வேண்டும் என நீதிபதிகள் அதிரடியாக உத்தரவு பிறப்பித்தனர். அதோடு, இது தொடர்பான அறிக்கையை, வரும் 22-ம் தேதி நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கவும் அறிவுறுத்தினர்.
மக்கள் தெளிவு பெறவும், திருத்தங்களுக்கு விண்ணப்பிக்க ஏதுவாகவும், நீக்கப்பட்ட 65 லட்சம் வாக்காளர்களின் விவரங்கள் குறித்த வெளிப்படைத்தன்மை தேவை என கூறிய நீதிபதிகள், வாக்காளர் பட்டியல் சிறப்புத் திருத்தத்தில், ஆதார் அட்டையையும், EPIC நம்பர்களையும் அடையாள ஆவணமாக ஏற்றுக்கொள்ள வேண்டும் என தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிட்டனர்.
முன்னதாக ஆதார் அட்டை, குடியுரிமை ஆவணமாக கருதப்படாது என தேர்தல் ஆணையம் தெரிவித்திருந்த நிலையில் இந்த உத்தரவு வந்துள்ளது. தேர்தல் ஆணையத்தின் பணிகள் வாக்காளர்களுக்கு வசதியாகவும், சிரமத்தை ஏற்படுத்தாத வகையிலும் இருக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் அறிவுரை வழங்கியது.
65 லட்சம் வாக்காளர்கள் நீக்கம் - வழக்கு தொடர்ந்த எதிர்க்கட்சிகள்
கடந்த ஆகஸ்ட் 1-ம் தேதி தேர்தல் ஆணையத்தால் வெளியிடப்பட்ட வரைவு வாக்காளர் பட்டியலில், பீகாரில் 65 லட்சம் வாக்காளர்கள் நீக்கப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அவர்கள் அனைவரும் உயிரிழந்தவர்கள், புலம்பெயர்ந்தவர்கள், சட்டவிரோத குடியேறிகள் என தேர்தல் ஆணையம் தெரிவித்தது.
இதையடுத்து, பீகாரில் தேர்தல் ஆணையத்தால் நடத்தப்பட்ட வாக்காளர் சிறப்பு தீவிர திரத்தத்தை எதிர்த்து, எதிர்க்கட்சிகள் மற்றும் ஜனநாயக சீர்திருத்த சங்கம் உள்ளிட்ட அமைப்புகள் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தன.
இந்த வழக்கில் தான் தற்போது உச்சநீதிமன்ற நீதிபதிகள் அதிரடி தீர்ப்பை வழங்கியுள்ளனர்.
இனிடையே, மக்களவை தேர்தலின்போது, வாக்காளர் பட்டியலில் முறைகேடு நடைபெற்ற, வாக்குத் திருட்டு நடைபெற்றதாக, ஆதாரங்களுடன் கடந்த வாரம் ராகுல் காந்தி குற்றம்சாட்டினார். ஆனால், அந்த குற்றச்சாட்டை தேர்தல் ஆணையம் மறுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.