உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி தலைமையிலான கொலிஜியம் (நீதிபதிகள் தேர்வுக் குழு) நாடு முழுவதும் 12 உயர் நீதிமன்றங்களுக்கு 68 புதிய நீதிபதிகளை நியமிக்க பரிந்துரைத்துள்ளது. 

அலகாபாத், சென்னை, கொல்கத்தா, குவகாத்தி, ஜம்மு& காஷ்மீர், ஜார்கண்ட், கர்நாடகா, கேரளா, மத்திய பிரதேசம், பஞ்சாப்& ஹரியானா, ராஜஸ்தான் ஆகிய உயர்நீதிமன்றகளுக்கு நீதிபதிகள் பரிந்துரைக்கப்பட்டுள்ளனர்.             

பரிந்துரைக்கப்பட்ட 68 பேரில், 44 பேர் வழக்கறிஞர்கள் என்பதும், 24 பேர் நீதித்துறை பதவி வகித்தவர்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது. 68ல் 10 பெண் நீதிபதிகளும் அடங்குவர். 

அலகாபாத்  16
கொல்கத்தா  10
சத்தீஸ்கர்  2
குவ்காத்தி  5
ஜம்மு- காஷ்மீர்  4
ஜார்கண்ட்  5
கர்நாடகா  2
கேரளா  8
மத்திய பிரதேசம்  1
சென்னை 4
பஞ்சாப்& ஹரியானா  4
ராஜஸ்தான்  7

மிஸ்ரோம் மாநிலத்தின் முதல் மாவட்ட பெண் நீதிபதியும், பட்டியல் பழங்குடி வகுப்பைச் சேர்ந்தவருமான மார்லி வகுங் (Marli Vakung)  கவுகாத்தி உயர் நீதிமன்ற நீதிபதியாக பரிந்துரைக்கப்பட்டுள்ளார்.  


சுந்தரம் ஸ்ரீமதி, டி.பரத சக்ரவர்த்தி, ஆர்.விஜயகுமார், முகமது ஷஃபிக் ஆகிய நான்கு வழக்கறிஞர்கள் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகளாக பரிந்துரைக்கப்பட்டுள்ளனர். இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் 217-ஆவது பிரிவின் ஒன்றாம் உட்பிரிவு  அளித்துள்ள அதிகாரத்தைப் பயன்படுத்தி குடியரசுத் தலைவர் உயர்நீதிமன்ற நீதிபதி ஒவ்வொருவரையும் நியமிப்பார்.

உயர்நீதிமன்றத்தின் நீதிபதியாக தகுதி பெற வேண்டும் என்றால், ஒருவர் இந்திய குடிமகனாக இருப்பதுடன், இந்திய ஆட்சி நிலவரையில் குறைந்தது பத்தாண்டுகள் நீதித்துறையை பதவியை வகித்திருக்க வேண்டும், (அல்லது) ஓர் உயர் நீதிமன்றத்திலோ, தொடர்ந்து இரண்டு அல்லது அவற்றிற்கு மேற்பட்ட அத்தகைய நீதிமன்றங்களிலோ குறைந்தது பத்தாண்டுகள் வழக்கறிஞராகவே இருக்க வேண்டும்.  

முன்னதாக, உச்சநீதிமன்றத்தில் புதிதாக ஒன்பது நீதிபதிகளை நியமிக்க கொலிஜியம் பரிந்துரை செய்தது. அதனடிப்படையில்,  இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் 124-ஆவது பிரிவின் இரண்டாம் உட்பிரிவு  அளித்துள்ள அதிகாரத்தைப் பயன்படுத்தி, கர்நாடக உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி  அபய் ஸ்ரீநிவாஸ் ஓகா, குஜராத் உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி  விக்ரம் நாத், சிக்கிம் உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி  ஜிதேந்திர குமார் மகேஸ்வரி, தெலங்கானா உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி  ஹிமா கோஹ்லி, கர்நாடக உயர்நீதிமன்ற நீதிபதி  பெங்களூர் வெங்கடராமைய்யா நாகரத்னா, கேரள உயர்நீதிமன்ற நீதிபதி  சுடலையில் தேவன் ரவிகுமார், சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி  எம் எம் சுந்தரேஷ், குஜராத் உயர்நீதிமன்ற நீதிபதி  பேலா மதூர்யா திரிவேதி மற்றும் வழக்கறிஞர்  பமிடிகாந்தம் ஸ்ரீ நரசிம்மா ஆகியோரை உச்ச நீதிமன்ற நீதிபதிகளாக குடியரசுத் தலைவர் நியமித்தார்.