ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள ஏவுதளத்தில் இருந்து எஸ்.எஸ்.எல்.வி. - டி3 ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது.  சதீஷ் தவான் ஏவுளத்தில் இருந்து ஏவப்பட்டுள்ள இந்த ராக்கெட் அதிநவீன கருவிகள் கொண்ட  இ.ஓ.எஸ்.-8 என்ற செயற்கை கோளை சுமந்து சென்றுள்ளது.  இந்த ராக்கெட் சுமந்து சென்றுள்ள இ.ஓ.எஸ். 8 செயற்கைக் கோள் ககன்யான் திட்டத்திற்கான பணிகளை மேற்கொள்ளவும் பயன்படுத்தப்பட உள்ளது.


விண்ணில் ஏவப்பட்ட எஸ்.எஸ்.எல்.வி. டி3:


 குறைந்த எடை கொண்ட மினி, மைக்ரோ மற்றும் நானோ செயற்கைக் கோள்களை செலுத்த உருவாக்கப்பட்டது எஸ்.எஸ்.எல்.வி. டி3 ராக்கெட். இது இஸ்ரோ திட்டமிட்டபடி இன்று காலை விண்ணில் ஏவப்பட்டது.


இந்த ராக்கெட்டில் இ.ஓ.எஸ். 8 செயற்கைக் கோளுடன், எஸ்.ஆர்.-0 டெமோசாட் என்ற செயற்கைக்கோளையும் சுமந்து சென்றுள்ளது. 475 கிலோமீட்டர் புவி வட்டப்பாதையில் இந்த செயற்கைக் கோள் நிலைநிறுத்தப்படுகிறது.






இ.ஓ.எஸ்.08:


இ.ஓ.எஸ்.-08 செயற்கைக் கோளின் எடை 175.5 கிலோ கிராம் ஆகும். தோராயமாக 420 வாட்ஸ் சக்தி கொண்டது. இந்த செயற்கை் கோளானது மின்காந்த அலைகளின் தாக்கத்தை படம்பிடிக்கும். மேலும், பேரிடர் கண்காணிப்பிற்கும், சுற்றுச்சூழல் கண்காணிப்பிற்கும் இது பயன்படுத்தப்பட உள்ளது.






மேலும், கடல் மேற்பரப்பு குறித்த ஆய்வு, மண்ணின் ஈரப்பதம் குறித்த மதிப்பீடு, வெள்ளம் பாதிக்கப்பட்ட பகுதிகள், இமயமலை குறித்த ஆய்விற்கும் இது பயன்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 2022ம் ஆண்டு விண்ணில் செலுத்தப்பட்ட இ.ஓ.எஸ்.02 மற்றும் ஆசாதிசாட் தோல்வியில் முடிந்தது. இதையடுத்து, கடந்தாண்டு வெற்றிகரமாக செலுத்தப்பட்டது.


கடந்த ஜனவரியில் ஏவப்பட்ட பி.எஸ்.எல்.வி – சி 58, கடந்த பிப்ரவரியில் ஏவப்பட்ட ஜி.எஸ்.எல்.வி. – எஃப். 14/ இன்சாட் செயற்கைக் கோள்களைத் தொடர்ந்து மூன்றாவது முறையாக விண்ணி்ல செயற்கைக் கோளை செலுத்தி இஸ்ரோ வெற்றி கண்டுள்ளது.